Tuesday, September 18, 2012

எம்மைப் பற்றியும், எம் வாழ்வின் இலக்கு பற்றியும் தெளிவாக இருப்போம்

23.09.2012
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்

கத்தோலிக்க நம்பிக்கைகளை வாழ்வில் கடைப்பிடித்து, அதைப் பிறருக்கு அறிவிக்கின்றவர்கள் துன்பங்களையும் எதிர்ப்புகளையும் திரிபுக்கதைகளையும் சந்திக்க வேண்டியிருக்கும் என்பது வரலாறு.  இயேசு தாம் துன்பங்கள் அனுபவிக்க வேண்டும் என்று கூறியது அவருடைய சீடர்களுக்குப் புரியாத புதிராகவே இருந்தது. அவருடைய சீடர்கள் 'துன்புறும் மெசியா" வை ஏற்க மறுத்தார்கள். தங்களுக்கும் அதிகாரப் பொறுப்புகள் வழங்கப்படும் என இயேசுவின் சீடர்கள் கனவு கண்டார்கள். இயேசு துன்புறப் போகிறாரே என கவலைப்படாமல் சீடர்கள் மட்டும் 'தங்களுள் யார் பெரியவர்" என்னும் வாதத்தில் ஈடுபட்டார்கள்.

உலகத்தின் கண்களுக்குப் பெரியவர் என்றால் எல்லாராலும் போற்றப்பட்டு, புகழப்பட்டு, உயர்நிலையில் வைக்கப்படுகின்ற ஒருவர்.இயேசுவின் பார்வையில் பெரியவர் அனைவரிலும் சிறியவராக மாற வேண்டும். உலகப் பார்வையில் சிறப்பு மிக்கோர் பிறரிடமிருந்து பணிவிடை பெறுவார்களே தவிர பிறருக்குப் பணிவிடை செய்பவர்கள் அல்ல. இக்கருத்தையும் இயேசு புரட்டிப் போடுகின்றார். இயேசு இவ்வாறு உலகப் பார்வைக்கு நேர்மாறான கருத்தை ஏன் கூறுகிறார்: மனிதர் எப்போதுமே சிறப்பான நிலையை அடைய விரும்புகிறார்கள்.ஆனால் சிறப்புநிலை எதில் அடங்கியிருக்கிறது என்பதுதான் கேள்வி. பிறருக்குத் தொண்டுசெய்வதும் பிறரைத் தமக்கு உயர்ந்தவராகக் கருதுவதும் உண்மையான சிறப்புக்கு அடையாளம்.

இயேசுவின் வாழ்வில் துலங்கிய மதிப்பீடுகளை அவருடைய சீடர்களும் கடைப்பிடிக்க அழைக்கப்படுகிறார்கள். அவர்கள் நடுவே யார் பெரியவர் என்னும் கேள்வி எழுவதே சரியல்ல என இயேசு உணர்த்துகிறார். உண்மையான சிறப்பு பிறருக்குப் பணிசெய்வதிலே அடங்கும் என்று போதித்த இயேசு அதை முழுமையாகத் தம் வாழ்வில் கடைப்பிடித்தார். அவர் தம் சீடருடைய காலடிகளைக் கழுவினார்.எனவே, இயேசுவைப் பின்செல்வோருக்குத் தரப்படுகின்ற வழிமுறை இவ்வுலகப் பார்வையைப் புரட்டிப்போடுகின்ற வழிமுறை. அவ்வழியே நாம் நடந்தால் நாமும் கடவுளின் பார்வையில் சிறப்புடையோர் ஆவோம்.

இயேசு குழந்தையை ஏன் சீடர்கள் மத்தியில் வைத்தார்? என்றால் சென்ற வாரம் இயேசு சீடர்களிடம் இரு முக்கிய கேள்விகளைக் கேட்டார். மக்கள் என்னை யாரென்று சொல்கிறார்கள்? நீங்கள் என்னை யாரென்று சொல்கிறீர்கள்? சீடர்கள் மத்தியில் இது ஒரு தேடலை ஆரம்பித்து வைத்திருக்கும். இயேசு, தன் கேள்விகளுக்கு'மெசியா"என விடையளித்த பேதுருவைப் புகழ்ந்தார். பேதுரு கொடுத்த அந்த  பட்டத்தில் மமதை கொண்டு இயேசு மயங்கிப் போகவில்லை. மாறாக அந்த பட்டத்தின் பின்னணியில் இருக்கும் துன்பம், சிலுவை பற்றி இயேசு பேசினார். இயேசுவின் இந்த பேச்சு சீடர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. எனவே,பேதுரு அவரைத் தனியே அழைத்து அறிவுரைச் சொல்ல ஆரம்பித்தார். தன்னைப் பற்றியும், தன் வாழ்வின் இலக்கு பற்றியும் இயேசு தெளிவாக இருந்ததால், பேதுருவைக் கோபமாகக் கடிந்து கொண்டார். சீடர்களிடம் மீண்டும் தன் சிலுவையைப் பற்றி ஆணித்தரமாக பேசுகிறார். சீடர்கள் இதைப் புரிந்து கொள்ளவில்லை. இயேசுவின் பாடுகள் அவர்களுக்கு விளங்காமல் போனதற்கு ஒரு காரணம் - அவர்கள் வேறு திசைகளில் சிந்தித்துக் கொண்டிருந்தார்கள். தங்களில் யார் பெரியவன்? என்பது அவர்களுக்கு இப்போது முக்கியம்.

இயேசு அவர்கள் பேசிக்கொண்டிருந்ததை ஓரளவு கேட்டார். அவருக்கு அதிர்ச்சி. தான் இவ்வளவு சொல்லியும் இவர்களின் எண்ண ஓட்டம் இப்படி இருக்கிறதே என்ற அதிர்ச்சி. மற்றொரு பக்கம் ஒரு நெருடல்.ஒருவேளை அவர்கள் பேசிக் கொண்டதை சரியாகக் கேட்காமல், அவர்களைத் தவறாக எடை போட்டுவிடக் கூடாது என்று நினைத்து, 'வழியில் என்ன பேசினீர்கள்?" என்று கேட்கிறார். பதில் வரவில்லை. அவர்கள் பேசிக் கொண்டதெல்லாம் இயேசுவின் எண்ணங்களுக்கு முற்றிலும் மாறுபட்டது. தாங்கள் பேசியதை அவரிடம் சொல்ல முடியவில்லை.

அதற்கு இயேசுவின் பதில், 'ஒருவர் முதல்வராக இருக்க விரும்பினால் அவர் அனைவரிலும் கடைசியானவராகவும் அனைவருக்கும் தொண்டராகவும் இருக்கட்டும்". இந்த கருத்தை வலியுறுத்தவே, ஒரு குழந்தையை அவர்கள் நடுவில் நிறுத்துகிறார். குழந்தைகளைப் போல் மாறாவிடில் விண்ணரசில் நுழைய முடியாது என ஏற்கனவே அவர்களுக்கு சொல்லியிருந்தார். இப்போது மீண்டும் அந்த சிந்தனையை மற்றொரு வழியில் வலியுறுத்துகிறார். 

குழந்தைகளை குழந்தைகளாகவே ஏற்றுக் கொள்ளுங்கள். அவர்களை உங்களைப் போல் மாற்றாதீர்கள், முடிந்த அளவு, நீங்கள் குழந்தைகளாக மாறுங்கள் என்று இயேசு சொல்லாமல் சொல்கிறார். 'எந்த ஒரு குழந்தையும் பிறக்கும் போது இரு இறக்கைகளுடன் சம்மனசாய் பிறக்கிறது. அனால், கால்கள் வளர, வளர, இறக்கைகள் குறைந்து மறைந்து விடுகின்றன." என்பது பிரெஞ்சு மொழியில் ஒரு அறிஞர் சொன்ன அழகான வார்த்தைகள். கால்கள் மட்டுமல்ல, நமது எண்ணங்கள், கருத்துக்களெல்லாம் வளரும்போது, சம்மனசுக்கான இறக்கைகள் மறைந்து விடுகின்றன. குழந்தைகளைக் குழந்தைகளாகவே ஏற்றுக் கொள்வோம்.அவர்களை நம்மைப் போல் மாற்றாமல், முடிந்த அளவு, நாம் குழந்தைகளாக மாறுவோம்.

No comments:

Chistmas wish

Chistmas wish
I wish you a happy christmas

About Me

My photo
I am Mr Frank. I am a UN staff