Sunday, August 17, 2014

மாயையான மதிப்புகளைத் தேடி அலையாமல் இயேசுவின்; மதிப்புள்ள வாழ்வை தேடுவோம்"

31.08.2014 '"  
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர் 

இன்று எமக்குதரப்படும் பைபிள் பகுதியை மத்தேயு நற்செய்தியாளர் கி.பி.80 - கி.பி.90ம் ஆண்டு காலப்பகுதியில் எழுதியிருக்க வேண்டும். அது கிறிஸ்தவர்கள் இயேசுவை மீட்பராக ஏற்றுக்கொண்டதால், துன்பத்தை அனுபவித்த காலம். துன்பப்படுகிற கிறிஸ்தவர்களுக்கு ஆறுதலையும், நம்பிக்கையையும் மத்தேயு தருகிறார். மத்தேயுவின் சிந்தனை, எண்ண ஓட்டங்கள் அனைத்துமே நடக்கிற நிகழ்வுகளின் அடிப்படையிலும், காலச்சூழ்நிலையின் அடிப்படையிலும் அமைகிறது என்பது அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய உண்மை. இயேசுவின் வார்த்தை எல்லாக்காலச் சூழ்நிலைகளுக்கும், எல்லா நிகழ்வுகளுக்கும் பொருந்துவதாகவும், அர்த்தம் தருவதாகவும் இருக்கிறது என்பது இதனுடைய வெளிப்பாடு.

இயேசுவைப் பின்பற்றுவதற்கு இரண்டு பண்புகளைக் கொண்டிருக்க வேண்டும் என்ற அழைப்பையும் விடுக்கிறார். முதல் பண்பு: தன்னலம் துறத்தல். வாழ்வு என்பது கடவுள் கொடுத்திருக்கிற மிகப்பெரிய கொடை. இந்த வாழ்வை தனக்காகவோ, தன்னுடைய உறவுகளுக்காகவோ வாழ்வது சாதாரண வாழ்க்கை. ஆனால், இயேசுவைப் பின்பற்றுகிற ஒவ்வொருவரும் மற்றவர்களுக்காக வாழ்வதற்கு அழைக்கப்படுகிறோம். 
இரண்டாவது பண்பு: சிலுவையைத்தூக்குதல், அதாவது துன்பத்தை ஏற்றுக்கொள்ளுதல். மற்றவர்களுக்காக வாழும்போது நமக்கு கிடைப்பது துன்பங்களும், துயரங்களும்தான். ஆனால், துன்பங்களைத் தாங்குவதற்கு பயப்படாமல், அதைத்தாங்குவதற்கு இறைவன் பலம் தருவார் என்ற நம்பிக்கை நமக்கு இருக்க வேண்டும். வாழ்வு என்பது இன்பமும், துன்பமும் நிறைந்தது. இரண்டுமே நிரந்தரமானது அல்ல. வாழ்வில் துன்பம் வருகிறபோது சோர்வடைவதும், மகிழ்ச்சி வரும்போது துள்ளிக்குதிப்பதும் மனித இயல்பு. சோகங்கள் வருகிறபோது சோர்ந்து போகாமல், கடவுள் மட்டில் நம்பிக்கை கொள்வோம். அவர் நமக்கு பலம் தருவார், அருள் பொழிவார்.

மானிட வாழ்வின் மிகப் பெரிய மறைபொருள்களில் ஒன்று இழப்பு. யாரும் எதையும் இழக்க விரும்புவதில்லை. ஆனால், சிலவற்றை சில நேரங்களில் இழக்கும்போது, அந்த இழப்புக்கு கைம்மாறாக நாம் பெறும் இன்பம் இழந்ததைவிட பன்மடங்கு மதிப்பு மிக்கது, மேலானது என்பதை அனுபவத்தின் மூலமாகத்தான் அறிய முடியும்.ஞானிகள், அறிஞர்கள், மாமனிதர்கள் இந்த மறைபொருளை, வாழ்வின் இரகசியத்தை அறிந்திருக்கின்றனர். எனவே, இழப்பதற்கு அஞ்சாமல் இழக்க முன் வந்தனர், சில வேளைகளில் தம் உயிரையும்கூட இழந்தனர் இயேசு இன்றைய நற்செய்தி வாசகத்தில் இந்த ஞானத்தை நமக்குக் கற்றுத் தருகிறார். தம் உயிரைக் காத்துக்கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்துவிடுவர். மாறாக, என் பொருட்டு தம்மையே அழித்துக்கொள்கிற எவரும் வாழ்வடைவர் என்கிறார். இயேசுவின் பொருட்டுக் கடந்த பல நூற்றாண்டுகளாக ஆயிரக்கணக்கானவர்கள் தம் உயிரை இழக்க முன்வந்துள்ளனர். நிலைவாழ்வைப் பெற்றுக்கொண்டுள்ளனர். நாம் உயிரை இழக்க வேண்டாம். சிறிய இன்பங்களை, சிறிய ஆதாயங்களை, நேரத்தை, ஓய்வை, பொழுதுபோக்கை இழக்க முன்வருவோமா.

இயேசு மக்களுக்கு ஒரு புதுவாழ்வு வாக்களித்தார். தாயின் உதரத்தில் கருவாக உருவாகி, உலகில் தோன்றி நம் சாவோடு அழிந்துபோகின்ற உயிரைவிடவும் மேலானது இயேசு வாக்களித்த வாழ்வு. இந்த வாழ்வுக்கு முடிவே இராது. உயிரைத் தியாகம் செய்தாவது நாம் வாழ்வை அடைய வேண்டும் என்பது இயேசுவின் போதனை. சில சமயங்களில் உலகத்தையும்  ஆன்மாவையும் ஒன்றுக்கொன்று எதிரியாகக் காண்பித்து, ஆன்மாவைக் காத்துக்கொள்ள நாம் உலகத்தைக் கைவிட வேண்டும் என்று சிலர் வாதாடுவர். இது இயேசுவின் போதனைக்கு மாறானது. இயேசு வாக்களிக்கின்ற புதிய வாழ்வு ஆன்மாவைச் சார்ந்தது மட்டுமல்ல, அந்த வாழ்வு முழு மனிதரை உள்ளடக்குகின்ற வாழ்வு. இயேசு வாக்களித்த இறையாட்சியையும் முழுவாழ்வையும் பற்றிக்கொள்ள அனைத்தையுமே விட்டுக்கொடுக்க நாம் தயாராக இருக்க வேண்டும்.
இயேசு நாம் வாழ்வு பெற வேண்டும் என்பதற்காக இறந்தார். ஆனால் அவருடைய இறப்பின் வழியாக நாம் முடிவில்லா வாழ்வைப் பெற உரிமை பெறுகின்றோம். இத்தகைய உயரிய கொடையைப் பெற்றுள்ள நாம் அக்கொடையின் மதிப்பைச் சரியாக உணராததால் அதற்குப் பதிலாக மாயையான மதிப்புகளைத் தேடி அலைகின்றோம். இத்தேடல் பயனற்றதாகத்தான் முடியும். மாறாக, நம் சொந்த விருப்பு வெறுப்புகளின்படி நடக்காமல் இயேசுவின் போதனைக்கு ஏற்ப நாம் நடந்தால் நாம் விட்டுக்கொடுப்பதற்குப் பலகோடி மடங்கு மேலான மதிப்புள்ள 'வாழ்வை " பெற்றுக்கொள்வோம்.

எம் சொந்த அனுபவத்தில் இயேசுவை உணர்வேம்

24.08.2014 '"  
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர் 

'நான் யார் என்று மக்கள் சொல்கிறார்கள்?"'நான் யார் என்று நீங்கள் சொல்கிறீர்கள்?" என்று இயேசு இரு கேள்விகள் கேட்கும் பகுதி இன்று எமக்கு பைபிளில் தரப்படுகிறது.

நம்முடைய் வாழ்க்கையில் நம்மை நாமே தேடிய அனுபவங்கள் நமக்கு உண்டு. நம்மை நாமே தேடும் நேரங்களில் பல கேள்விகள் நம் உள்ளத்தில் எழுந்திருக்கும். அவற்றில் மிக முக்கியமாக நம் மனதில் எழுந்த ஒரு கேள்வி: 'நான் யார்?" என்ற கேள்வி. இயேசுவுக்கும் இந்தக் கேள்வி எழுந்தது.

'நான் யார் என்று மக்கள் சொல்கிறார்கள்?" இயேசு இக்கேள்வியை அவர் காலத்து மக்களுக்கு மட்டுமல்ல. இன்றும் கேட்கிறார். மக்கள் இயேசுவைப்பற்றி என்ன சொல்கிறார்கள்? என்னென்னவோ சொல்லிவிட்டார்கள். இன்னும் சொல்லி வருகிறார்கள். நல்லதும், பொல்லாததும். உண்மையும், பொய்யும். விசுவாசச் சத்தியங்களும், கற்பனைக் கதைகளும். அளவுக்கதிகமாகவே சொல்லிவிட்டார்கள். ஆனால், இவ்வளவு சொல்லியும் இயேசுவைப்பற்றி முழுமையாக நம் மனித குலம் சொல்லிவிட்டதா என்று கேட்டால், இல்லை என்றுதான் சொல்லவேண்டும். இயேசு இவர்தான், இப்படிப்பட்டவர்தான் என்று சொல்வது மிகக் கடினம். இலக்கணங்களை, வரையறைகளை, வேலிகளை உடைப்பது இயேசுவின் இலக்கணம். இயேசுவின் அழகு.

'நான் யார் என்று நீங்கள் சொல்கிறீர்கள்?" எம்மைப் பார்த்து இயேசு கேட்கிறார். 'நான் யார் என்று மக்கள் சொல்கிறார்கள்?" என்ற கேள்விக்கு நாம் படித்தவைகளை, மனப்பாடம் செய்தவற்றை கொண்டு பதில்களைச் சொல்லிவிடலாம்.

ஆனால், இந்த இரண்டாவது கேள்விக்கு அப்படி எளிதாகப் பதில் சொல்லிவிட முடியாது.நாம் படித்தவற்றைவிட, பட்டுணர்ந்தவையே இக்கேள்விக்குப் பதிலாக வேண்டும். நாம் மனப்பாடம் செய்தவற்றைவிட, மனதார நம்புகிறவையே இக்கேள்விக்கான பதிலைத் தரமுடியும். இக்கேள்வி எமக்கு சங்கடங்களை உருவாக்கலாம். 'என்ன இது. என்ன சொல்வது என புரியவில்லை என் உணர்ந்தால், இது ஒரு நல்ல ஆரம்பம். இயேசுவின் இந்தக் கேள்வி வெறும் கேள்வி அல்ல. ஓர் அழைப்பு. 'என்னைப்பற்றிப் புரிந்து கொள் என்னைப் பற்றிக்கொள். என்னைப் பின்பற்றி வா" என்று பலவழிகளில் இயேசு விடுக்கும் அழைப்பு.

இயேசுவை பற்றி வெறும் புத்தக அறிவு போதாது. அப்படி நாம் தெரிந்துகொள்ளும் கடவுளைக் கோவிலில் வைத்துப் பூட்டிவிடுவோம். விவிலியத்தில் வைத்து மூடிவிடுவோம். அனால்,இயேசுவை அனுபவத்தில் சந்தித்தால், வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்படும். பல சவால்களைச் சந்திக்க வேண்டும். நம் மனதைக் கவர்ந்த ஒருவரை, கருத்தளவில் புரிந்துகொள்வதோ, அவரைப் புகழ்வதோ எளிது. அவரைப் போல வாழ்வதோ, நம்பிக்கையோடு அவரைத் தொடர்வதோ எளிதல்ல.

இயேசுவைப்பற்றி தெரிந்துகொள்ள, அவரைக் கண்டு பிரமித்துப் போக, அவரை இரசிக்க கேள்வி அறிவு, புத்தக அறிவு போதும். அந்த பிரமிப்பில் நாம் இருக்கும்போது, இயேசு நம்மிடம் "நான் யார் என்று மக்கள் சொல்கிறார்கள்?" என்று கேட்டால், நம் பதில்கள் ஆர்வமாய் ஒலிக்கும். ஆனால், அந்த பிரமிப்பு, இரசிப்பு இவற்றோடு மட்டும் நாம் இயேசுவை உலகறிய பறைசாற்றக் கிளம்பினால், புனித பவுல் சொல்வது போல், 'ஒலிக்கும் வெண்கலமும், ஓசையிடும் தாளமும் போலாவோம்." எனவே, இயேசு நம்மை அடுத்த நிலைக்கு வருவதற்கு கொடுக்கும் அழைப்பு தான் "நான் யார் என்று நீங்கள் சொல்கிறீர்கள்?" என்ற கேள்வியாக எழுகிறது. இது சாதாரண அழைப்பு அல்ல. அவரை நம்பி அவரோடு நடக்க, அவரைப்போல் நடக்க, இரவானாலும், புயலானாலும் துணிந்து நடக்க அவர் தரும் ஓர் அழைப்பு. வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்த கொடுக்கப்படும் இந்த அழைப்பிற்கு, மனதின் ஆழத்திலிருந்து; நம் பதில்களை வரவழைப்போம்.

இயேசுவின் இந்த அழைப்பைப் புரிந்தும் புரியாமலும், சீமோன்: ' நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்" என்று பதிலளித்தார். இயேசுவுடன் தட்டுத் தடுமாறி நடைபயின்ற பேதுரு, இயேசுவைத் தம் சொந்த அனுபவத்தில் சந்தித்தபின், இறுதி மூச்சு வரை உறுதியாய் இருந்ததுபோல், நாமும், சொந்த அனுபவத்தில் இயேசுவை உணர்ந்து, அவருக்காக எதையும் இழக்கும் துணிவு பெறவோம்

Friday, August 15, 2014

பிரிவுகள் பிளவுகள் வேற்றுமைகள் இல்லாத புதிய சமுதாயத்தை சமயங்கள் உருவாக்க உழைப்போம்

17.08.2014 '"   
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர் 

இன்று எமக்குத்தரப்படும் பைபிள் பகுதியில் தாய்மையின் மேன்மை வெளிக்கொணரப்படுகின்றது எனலாம். ஒரு தாயின் விடாப்பிடியான வேண்டுதலையும், அதன் இறுதி வெற்றியையும் இன்றைய பைபிள் பகுதி எடுத்துக்காட்டுகின்றது. கனானியப் பெண்ணின் நம்பிக்கையை இயேசு நன்றாகவே சோதித்துப் பார்த்துவிட்டார் என்றும் கூறலம். பிள்ளைகளுக்குரிய உணவை நாய்க்குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல என்ற கடுமையான மறுமொழிகூட அந்தத் தாயின் நம்பிக்கையை, எதைச் செய்தாவது தன் மகளைக் குணப்படுத்திவிட வேண்டும் என்ற அன்பின் பிடிவாதத்தை, அன்பின் தளராத் தன்மையைத் தோற்கடிக்க முடியவில்லை. உரிமையாளரின் மேசையிலிருந்து விழும் சிறு துண்டுகளை நாய்க் குட்டிகள் தின்னுமே என்று கூர்மதியுடனும், அன்புடனும் பதில் சொல்லி இயேசுவின் பாராட்டையும், மகளுக்கு நலத்தையும் பெற்றுக்கொண்டார்.
'பிள்ளைகளின் உணவை நாய்களுக்குப் போடுவது முறையல்ல முதலில் பிள்ளைகள் வயிறார உண்ணட்டும்" என்கிறார் இயேசு. ஆனால் அதற்கு அந்தப் பெண் அளித்த மறு மொழியோ இயேசுவையே ஒரு குலுக்கு குலுக்கிவிட்டது. ஆம் ஐயா ஆனாலும் தங்கள் உரிமையாளரின் மேசையிலிருந்து விழும் சிறு துண்டுகளை நாய்க்குட்டிகள் தின்னுமே என்றாள் அப்பெண் உடனே தம் எண்ணத்தை மாற்றி புற சமயத்தவரான அந்தப் பெண்ணுக்கு புதுமை செய்ய முன்வருகிறார்.

இயேசுவை அணுகிவந்த கனானியப் பெண்ணுக்கும் இயேசுவுக்கும் இடையே நிகழ்கின்ற உரையாடலில் பல சிறப்பு அம்சங்கள் உண்டு. அப்பெண் இயேசுவிடம் முழு நம்பிக்கை கொண்டிருந்தார். அவர் இயேசுவை மூன்று முறை 'ஐயா" என்றும், 'தாவீதின் மகனே" என்றும் அழைக்கிறார். இந்த இரு வார்த்தைகளும் இயேசுவை மெசியா என அப்பெண் கருதியதைக் காட்டுகிறது. ஆனால் இயேசுவோ பேசாது அதைதியாக நிற்கிறார். ஒரு சொல் கூட அப்பெண்ணுக்குப் பதில்மொழியாக அவர் கூறவில்லை. சீடர்கள் வேறே எரிச்சல் படுகிறார்கள். இயேசுவும் அப்பெண்ணை நாய்க்கு ஒப்பிட்டு இழிவுபடுத்துவது போல் தெரிகிறது. ஆனால் அப்பெண் மன உறுதியை இழக்கவில்லை. இயேசு மனது வைத்தால் போதும் தன் மகள் குணம்பெறுவாள் என அப்பெண் விடாப்பிடியாக நிற்கிறார். கடவுளின் வல்லமையில் நம்பிக்கை கொண்டு அவரை அணுகுவோர் ஏமாற்றமடையார் என்பதற்கு இப்பெண்ணின் ஆழ்ந்த நம்பிக்கை எமக்கு சிறந்த எடுத்துக்காட்டு.

தாழ்த்தப்பட்ட இனத்தில் பிறந்த ஒரு பெண் என்று பல தடைகளைத் துணிவுடன் தாண்டி தன் மகளைக் குணமாக்க இயேசுவை அணுகி வருகிறார். அவரை ஒரு பொருட்டாகக்கூட மதிக்காத இயேசுவிடம் மீண்டும் மீண்டும் அவர் வருகிறார். இஸ்ரயேல் மக்களை குழந்தைகளாகவும், பிற இனத்தவரை நாய்களாகவும் உருவகித்துப் பேசும் இயேசுவின் கடினமான சொற்களையும் மீறி, அப்பெண் இயேசுவை அணுகி வருகிறார். பைபிளில் நற்செய்தியில் நமக்குக் காட்டப்படும் இயேசு சில நேரங்களில் புரியாத புதிராக விளங்குகிறார். அவரைப் புரிந்து கொள்ள சிரமமாக உள்ள ஒரு நற்செய்திப் பகுதி இன்று நமக்குத் தரப்பட்டுள்ளது. இயேசுவின் கடினமான சொற்களையும் வேறொரு கண்ணோட்டத்துடன் புரிந்து கொண்டு அப்பெண் தன் விண்ணப்பத்தை மீண்டும் இயேசுவிடம் வைக்கிறார். தளராத, உறுதியான விசுவாசத்தின் ஓர் எடுத்துக்காட்டாக அந்தக் கானானியப் பெண் நமக்கு முன் உயர்த்தப்படுகிறார். 'அம்மா, உமது நம்பிக்கை பெரிது. நீர் விரும்பியவாறே உமக்கு நிகழட்டும்" என்று இயேசு அவரை அனுப்பி வைக்கிறார்.

இஸ்ரயேல் மக்களுக்கும் பிறருக்கும் உள்ள பிரிவுகளை, உயர்வு, தாழ்வுகளை இயேசு வலியுறுத்திக் கூறும்போது, அப்பிளவுகளை எல்லாம் தாண்டி, இறைவனின் கருணையும் உண்டு என்பதை ஆணித்தரமாக உணர்த்திய கானானியப் பெண்ணிடம் நாம் கற்றுக் கொள்ளக்கூடியப் பாடங்கள் பல உள்ளன. அந்தப் பெண் கொண்டிருந்த விசுவாசத்தின் ஆழத்தைக் கண்ட இயேசு, அவர் பிற இனத்தவர், அதுவும் பிற இனத்தைச் சார்ந்த ஒரு பெண் என்பதையெல்லாம் புறம்தள்ளி, அவரது விசுவாசத்தை கூட்டத்திற்கு முன் புகழ்துள்ளரே. அங்கும் நமக்குப் பாடங்கள் உள்ளன. 
பிளவுகள், பிரிவுகள், ஏற்றத் தாழ்வுகள் ஆகியவற்றால் நிறைந்து வெறுப்பை உமிழ்ந்து வரும் இன்றைய உலகில் வேறுபாடுகளைகளைந்து மனிதம் போற்ற மனிதம் வளர்க்க பாடுபடுதல் வேண்டும் அப்போது தான் பிரிவுகள் பிளவுகள் வேற்றுமைகள் இல்லாத புதிய சமுதாயத்தை காணமுடியும். அனைத்து மக்களினங்களும் அனைத்து சமயங்களும்  சேர்ந் மண்ணில் மனிதத்தை மலரச் செய்யும்  

Tuesday, August 5, 2014

நம் பிரச்சனைகளை நடுவிலும் கடவுளை சந்திக்க காலடி எடுத்துவைப்போம்

10.08.2014 ' "; 
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர் 

இன்று எமக்குத்தரப்படும் பைபிள் பகுதியில் இயேசு,கடல்மீது நடப்பதையும் இயேசுவின் சீடர் பேதுரு கடல்மீது நடக்கமுனைந்து  பெருங்காற்று வீசியதைக் கண்டு அஞ்சி மூழ்கிப்போவதையும் பேதுரு 'ஆண்டவரே, என்னைக் காப்பாற்றும்" என்று கத்திய துன்பவேளையில் இயேசு கையை நீட்டி தூக்கி பேதுருவை காப்பாற்றுவதையும் பார்க்கின்றோம்.

இந்தவேளையில் முன்பு ஒருமுறை வாசித்த ஓரு கதையை கட்டயம் கூறித்தான் ஆகவேண்டும்: 'மனிதன் ஒருவன் தன் வாழ்க்கைப் பயணத்தைத் திருப்பிப்பார்க்கிறான். பயணத்தில் கடவுள் தன்னோடு நடந்து வந்ததற்கு சான்றாக பாதை முழுவதும் இரு ஜோடி காலடித் தடங்கள் பதிந்திருந்தன. அவனுக்கு மிக்க மகிழ்ச்சி. ஒரு சில நேரங்களில் அந்தப் பாதையில் ஒரு ஜோடி காலடித்தடங்களே இருந்ததைப் பார்க்கிறான். நினைவுபடுத்தி பார்த்தபோது, அந்த நேரங்களெல்லாம் அவன் அதிகதுன்பத்தில், போராட்டத்தில் கஸ்டப்பட்ட நேரங்கள் என்று கண்டுபிடிக்கிறான். உடனே கடவுளிடம், ஷதுன்ப நேரத்தில் என்னைத் தனியே விட்டுவிட்டு போய்விட்டீர்களே. இது உங்களுக்கே நியாயமா?| என்று முறையிடுகிறான். கடவுள் பொறுமையாக அம்மனிதனுக்குப் பதில் சொன்னார்: ஷமகனே, பெரும் அலைகளாய் உன்வாழ்வில் துன்பங்கள் வந்தபோது ஒருஜோடி காலடித்தடங்களே இருப்பதைப் பார்த்துவிட்டு அவசரப்பட்டு முடிவேடுத்து விட்டாய். அந்த நேரத்தில் உன்னைவிட்டு நான் எங்கும் போகவில்லை. உன்னைத் தூக்கிக் கொண்டு நானே நடந்தேன்.| என்றார் கடவுள்."

தண்ணீரில் நடப்பதே ஒரு சாதனை. அதுவும் புயல், அலை எனச் சுற்றிலும் பயமுறுத்தும் சூழலில் இயேசு பேதுருவைத் தண்ணீரில் நடக்கச் சொன்னது பெரியதொரு சவால். இதில் நம் கவனத்தை ஈர்ப்பது  என்னவென்றால், இயேசு பேதுருவுக்கு அந்தச் சவாலை அளிக்கும் முன்பு காற்றையும், கடலையும் அமைதிப் படுத்தியிருக்கலாம். அப்படிச் செய்யவில்லை என்பதுதான். வாழ்க்கையில் வீசும் புயல்கள் எல்லாம் ஓய்ந்த பிறகுதான், பிரச்சனைகளை எல்லாம் தீர்ந்த பிறகுதான் இறைவனைச் சந்திக்க முதல் அடி எடுத்துவைப்போம் என்று நினைக்கும் நம் எண்ணங்கள் தவறு. மாறாக அந்தப் புயலின் நடுவில் இறைவன் காத்துக்கொண்டிருப்பார் துணிந்து சென்று அவரைச் சந்திக்கலாம் என்பதை இயேசு நமக்கு சொல்லித்தருகிறார் 

பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும். அலையும், புயலும் அலைகழித்துக் கொண்டுதான் இருக்கும். அஞ்சாதீர்கள், நம்பிக்கையுடன் துணிந்து வாருங்கள் துயர நேரங்களில் உன்னை தூக்கிச் சுமப்பேன். தம்மை நோக்கிக் கூக்குரல் எழுப்பிய பேதுருவை இயேசு 'உடனே தம் கையை நீட்டிப் தூக்கி காக்கின்றார். புயலின் நடுவில், கடலின் நடுவில் கடவுள் நம்மோடு இருக்கிறார். துயரநேரம் தூணாய்வந்து நம்மையும் கரம்நீட்டி தூக்கிகாப்பார்.

பேதுருவுக்கு இயேசுவைப்போல கடலின்மேல் நடக்கவேண்டும் என்று ஆசை வந்ததுபோல் இன்று எமக்கு கடவுளைப்போல் நாமும்; செய்யவேண்டும் என்று ஆசைப்படுகின்றோம். இயேசுவும் இதைத் தவறு என்று சொல்லவில்லை. பேதுருவை அனுமதித்ததுபோல் எமது ஆசைகளை அனுமதிக்கிறார். இன்று எமது ஆராய்ச்சிகள், புதியகண்டுபிடிப்புக்கள் எல்லாவற்றையும் இறைவன் அனுமதிக்கிறார். ஆனால் பேதுரு கடலில் மூழ்கியதுபோல் மூழ்கிவிடக்கூடுது என்று இறைவன் விரும்புகின்றார். பேதுருவுடைய நம்பிக்கையின்மை, பயம், ஆணவம், தெய்வீக வலுவின்மை, இவையே அவர் மூழ்குவதற்கு காரணமாயிருந்தன. ஆசைப்படுவதில் தவறில்லை. ஆண்டவனைப் போன்ற ஆற்றல் இருக்கிறதா? தெய்வீக ஆற்றலால், இறை உணர்வுகளால் நாம் நிரம்பியிருக்கின்றோமா? என்ற வினாவிற்கு விடைகாணவேண்டும். இயேசு இறைமகனாய் இருந்தும், அவர் தனியே இறைவனிடம் வேண்டுவதற்காக ஒருமலையின்மேல் ஏறினார். பொழுது சாய்ந்தபிறகும் அங்கே அவர் தனியே இருந்தார். தெய்வீக ஆற்றலால் தன்னை நிறைத்துக் கொண்டார். கடல் மீது நடக்குமுன் கடவுள் அருளால் நிரப்பிக்கொண்டார். தந்தையோடு தனியே உறவாடச் சென்ற இயேசு அங்கேயேத் தங்கி விடவில்லை. காற்றோடு, கடலோடு போராடிய தன் சீடர்களைத் தேடி வந்தார். அதுவும், கடல் மீது நடந்து வந்தார். இந்த தெய்வீக ஆற்றல் இல்லாத ஆசை, ஆபத்தில் முடிவது எதிர்பார்க்கக்கூடியதே. அருளால் ஆண்டவனோடு இணைத்து ஆசைப்படுவோம், கடலிலும் நடக்கலாம், மலையையும் தாண்டலாம். 

Chistmas wish

Chistmas wish
I wish you a happy christmas

About Me

My photo
I am Mr Frank. I am a UN staff