Wednesday, October 31, 2012

அயலானை இனம் காண்போம் அன்பு செயல்கள் ஆற்றுவோம்.

04.11.2012 
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்


அறிவை வளர்க்கும் கேள்வி-பதில் பரிமாற்றத்தை விட, நீயா,நானா, யார் பெரியவன் என்ற பரிதாபமான பெருமை நம்மிடையே தலைதூக்குகின்றமையை நாம் பல தடவைகள் உணர்ந்திருக்கிறோம்.

இயேசுவுக்கும் இதுபோன்ற ஒரு சூழல் உருவாகியிருப்பதை இன்றைய நற்செய்தியில் பார்க்கிறோம். இயேசுவிடம் தவறான, குதர்க்கமான எண்ணங்களுடன் மறைநூல் அறிஞருள் ஒருவரிடமிருந்து கேள்வி கேட்கப்பட்டாலும், அந்தக் கேள்வி மிக அழகான, ஆழமான ஒரு கேள்வி என்பதை இயேசு உணர்ந்து, அதற்கு என்ன அருமையான ஒரு பதில் சொல்கிறார். இயேசு தந்த பதில், காலத்தால் அழியாத ஒரு பதிலாகின்றது. மனித குலத்தின் அடிப்படை உண்மையாய், உயிர்த்துடிப்பாய் இருபது நூற்றாண்டுகள் கடந்தும் நம் அனைவருக்கும் சவாலாக அமைந்துள்ள ஒரு பதிலை இயேசு தருகிறார்.

அனைத்திலும் முதன்மையான கட்டளை எது? என்று கேட்டவரிடம் இயேசு, உன் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் முழு மனத்தோடும் முழு ஆற்றலோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்புகூர்வாயாக என்பது முதன்மையான கட்டளை. உன்மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்புகூர்வாயாக என்பது இரண்டாவது கட்டளை. 

கத்தோலிக்க சமயம் இரண்டு முக்கிய விடயங்களை கத்தோலிக்கர்களாகிய நமக்கு வலியுறுத்துகிறது. முதலாவது முழு இருதயத்தோடு இறைவனை அன்பு செய்வது. இரண்டாவது நம்மை நாம் நேசிப்பது போல நம் அயலானை நேசிப்பது. அதற்கு இந்த இரண்டு விடயங்களும் வழிவகுக்கின்றன. இறைவனை நேசிப்பது என்பது எல்லோராலும் மேற்கொள்ளப்படும் விடயம்தான். எனினும் நாம் நம் அயலானை நேசிப்பதென்பது அதுவும் நம்மை நாம் நேசிப்பது போன்றே அயலானையும் நேசிப்பது என்பது நடைமுறையில் இல்லாத ஒன்று. இங்கு முதலில் நமக்குள் நாமே எழுப்பிக்கொள்ளும் கேள்வி:  நம் அயலான் என்பவன் யார்? என்பதுதான்.

இயேசுவின் காலத்திலிருந்து இன்றுவரையிலும் உள்ள பெரிய பிரச்சனையே அயலான் அல்லது அடுத்திருப்பவர் யார் என்ற தெளிவு இல்லாததுதான். அருகில் இருப்பவன் எல்லாம் அயலான் அல்ல. ஆடை அணிகலன்களோடு விருந்து விழாக்களில் கூடி வருபவன் எல்லாம் அயலான் அல்ல. சட்டத்தையும் சம்பிரதாயத்தையும் கடைபிடிப்பதால் அயலானின் அன்பன் ஆகிவிட முடியாது. மனிதாபிமானம் இல்;லாத மதமும் சாரமற்ற வழிபாடும் அயலானின் அன்பன் ஆக்க உதவாது. அடித்தள மனிதனின் ஆதங்கத்தை உணராமல் ஆகாயத்தில் சிறகடிக்கும் மனிதனால் அயலானைக் காண கண் பார்வை போதாது.

எனவே என் அயலவர், அடுத்திருப்பவர் யார்? இன்றும் இந்தக் கேள்விக்குப் பதில் தேடி வருகிறோம். உலகில் 680 கோடிக்கும் அதிகமாய் மக்கள் இருந்தும்;, நமது அயலவரை, அடுத்தவரை இன்னும் தேடிக் கொண்டுதானே இருக்கிறோம். 'இந்த உலகத்தைத் தாண்டி, விண்வெளியைக் கடந்து வெண்ணிலவில் காலடி வைத்து விட்டுத் திரும்பி விட்டோம். ஆனால், நம் வீட்டுக்கு அடுத்த வீட்டில் இன்னும் காலடி வைக்கத் தயங்குகிறோம்." என்று நாம் வாழும் இந்தப் புதிரான காலத்தைப் பற்றி புநழசபந ஊயசடin என்னும் அறிஞர் கூறியுள்ளார்.

'என் அயலவர், அடுத்தவர் யார்?" என்று சட்ட அறிஞர் கேட்டது குதர்க்கமான கேள்வியாக இருக்கலாம். ஆனால், இதே கேள்வியைத் தானே இன்றும் நம்மில் பலர் கேட்டு வருகிறோம். எப்போது இதற்கு விடை கண்டு பிடிப்போம்?

தேவையில் இருப்பவன் அயலான். சமூகம், பொருளாதாரத்தால் தாக்குண்டு தவிக்கும் மனிதன் ஒரு அயலான். கொள்னை கொலை வன்முறையால் பாதிக்கப்பட்டவன் அயலான். அநீதியாலும் சாதீயத்தாலும் நசுக்கப்பட்ட மனிதன் ஒரு அயலான். தனிமையில் வாடுவோர், அனாதைகள், ஆதரவற்றோர் அனைவரும் அயலானே.

மேலும் அயலான் என்பவன் யார் என்பதை இயேசு நல்ல சமாரியன் உவமை மூலம் நமக்கு தெரியப்படுத்துகிறார். எதிரியாக இருந்தாலும் ஆபத்தில் உதவுபவன் உதவிக்காக காத்திருப்பவன் அயலான். இயேசு குறிப்பிடுகின்ற அயலானாக நாம் இருக்கின்றோமா? அடுத்தவர் அன்பைப் பற்றி சமய உலகம் மட்டுமல்லாமல், கடவுள் நம்பிக்கையற்றவர்களும் இன்று பேசி வருகின்றனர். அயலானை இனம் காண்போம் அன்பு செயல்கள் ஆற்றுவோம்.

Wednesday, October 24, 2012

'உமக்கு நான் என்ன செய்ய வேண்டும்?" என எவராவது கேட்கமாட்டார்களா என்று ஏங்குவோருக்கு எங்கள் பதில் என்ன?

 28.10.2012 
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்

பார்க்கும் திறன் இருந்தால் மட்டும் போதாது. பார்வை பெற வேண்டும். சரியான பார்வை பெற வேண்டும்.  இதனை விளக்க ஒரு சிறு கதை: கணவனும், மனைவியும் ஒரு வீட்டுக்கு குடி வருகிறார்கள். தினமும் கண்ணாடி ஜன்னல் வழியே அடுத்த வீட்டுத்தலைவி, துணிகளைக் காய வைப்பதைப் பார்ப்பார். பின்பு கணவனிடம் அந்தபெண்ணுக்கு சரியா துணி துவைக்கத் தெரியவில்லை துவைச்ச பின்பு பாருங்கோ எவ்வளவு அழுக்கா இருக்கு என முறையிடுகிறார். முறையீடுகள் மூன்று நாட்கள் தொடர்ந்தன. நான்காம் நாள் காலையில் மனைவிக்கு ஒரே ஆச்சரியம். கணவன் வந்ததும் மனைவி சொன்னார்: 'அங்கே பாருங்கோ. நான் மூன்று நாளாக சொல்லிகிட்டிருந்தது அவளுக்கு காதுல கேட்டிருக்கு என நினைக்கிறேன். இன்று அந்தத் துணியெல்லாம் சுத்தமா துவைக்கப்பட்டிருக்கு." என்று வியந்து பாராட்டினார். கணவன் அமைதியாக 'அடுத்த வீட்டுலே ஒன்றும் குறையேயில்ல. இன்று எம்முடைய ஜன்னல் கண்ணாடியை நான் காலையில எழுந்து சுத்தமாகினேன்" என்று சொன்னாராம்.


இன்று நற்செய்தியில் கதாநாயகன் பார்வையற்ற மனிதன் பர்த்திமேயு. அவர் இயேசுவிடம் ஒரே ஒரு கோரிக்கையை முன்வைக்கிறார்: 'ரபூணி, நான் மீண்டும் பார்வை பெற வேண்டும்". அழுக்கில்லாத, களங்கமில்லாத பார்வை பெற வேண்டும். தெளிவான, சரியான பார்வை பெற வேண்டும். பார்வையற்றவராக இருந்தபோதிலும் அவர் இயேசுவை உண்மையிலேயே 'பார்க்கின்றார்". எரிக்கோ நகரத்து நடை பாதையை மாளிகையாக்கி அதன் வழியே வருவோர் போவோர் கொடுத்த உணவையும் பணத்தையும் நம்பிவாழும் அவனிடம் கண் பார்வை இருண்டிருந்தது. ஆனாலும் வாழ்கைப் பாதை இருண்டிட அவன் அனுமதிக்கவில்லை. கிடைத்த இந்த வாழ்விலும் நிறைவடைந்து வாழ்ந்தான். பெற்றுள்ள பிற புலன்களைப் பயன்படுத்தி நிறைவைத் தேடினான். எனவே நாமும் பார்வை பெற வேண்டும். அடுத்தவரைச் சரியான உண்மையான கண்ணோட்டத்தில் காண இறைவன் நம் உள்ளத்தைத் தூய்மையாக்க வேண்டுவோம்.

பெரிய மனிதன் செல்வமும் செல்வாக்கும் பெருகப் பெருக எல்லோரும் தனக்கு பணிவடை செய்ய வேண்டும் என்று விரும்புகிறார். ஆனால் இறைவன் இயேசு ஒரு செல்வாக்கு மிகுந்த பெரிய மனிதர் இருந்தும் 'உமக்கு நான் என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்?"என்று பாதையோரம்; படுத்திருந்த பார்வையற்ற மனிதனிடம் கேட்கிறார். பாதை ஓரத்தில், வாழ்க்கையின் ஓரத்தில், பார்வையற்று, வாழ வழியற்றுப் படுத்திருக்கும் மனிதனுக்கு 'உமக்கு நான் என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்?" என்று கேட்டது அவனை வாழ்வின் மையத்திற்கு கொண்டு சென்றிருக்கும் அல்லவா? இன்று இதே போல் எத்தனை பேர் வாழ்வின் ஓரத்தில், விழி இழந்து, வழி இழந்து விழிநீருடன் எங்களின் ஒரு வார்த்தைக்காகக் காத்திருக்கிறார்கள். 'உமக்கு நான் என்ன செய்ய வேண்டும்?" என யாராவது கேட்கமாட்டார்களா எனக் காத்திருப்பவர்களுக்கு எங்கள் பதில் என்ன? இயேசுவின் இவ் வார்த்தையை நாமும் அடிக்கடி பயன்படுத்த முன்வருவோம். அப்போது நம்மிடம் இயேசு அதே வார்த்தை கேட்பார்.

 கத்தோலிக்க சமயம் வலியுறுத்தும் ஒரு பண்பு சீடத்துவம். ஆனால் இன்றைய நாட்களில் இச் சீடத்துவம் குறைந்து பக்தர்கள் கூட்டம் அதிகரித்துச் செல்வதைக் காண்கிறோம். பக்தர்கள் கூட்டத்தினால் இறையரசுப் பணியில் எந்தப் பங்களிப்பும் இல்லை என்றே கூறவேண்டும். இயேசு எருசலேமை நோக்கிப் போகிறார். தான் சாவைக் குறித்து கடைசியாக கூறி விட்டார். இவை எல்லாம் தெரிந்தும் அதே பாதையில் சிலுவையின் பாதையில் மரணத்தின் பாதையில் துணிவோடு நடக்கின்றான் பர்த்திமேயு என்ற மனிதன். இவன் இயேசு கூறிய பின்பற்றுதலின் இலக்கணமாகின்றான். 'ஒருவன் தன்னைத் தான் வெறுத்து தன் சிலுவையை எடுத்துக் கொண்டு என்னைப் பின்பற்றட்டும் " என்ற வாக்கு இம்மனிதனின் வாழ்வில் நியமாகிறது. இது தான் சீடத்துவம். சீடர்களை உருவாக்கும் திருப்பணியாளர்களாக மாறி நாமும் சீடர்களாக மாறுவோம்.

ஒரு குருடன் அல்லது அங்கவீனரான ஒருவன் இறைவனை நல்லவர் என்றோ, அவர் இரக்கமுள்ளவரென்றோ ஏற்றுக்கொள்ள மாட்டான். ஆனால் இவனோ இறைவனின் இரக்கத்தை வாஞ்சித்து கதறினான். அந்தக் கதறலைக் கேட்ட இயேசு அவனை அழைத்தார். இதில் நாம் கவனிக்க வேண்டியது, அவன் இயேசுவின் அழைப்பைக்கேட்டவுடன் தன்னுடைய மேலுடையை எறிந்துவிட்டு அவரிடம் வந்தான். சிலுவையின் பாதையில் மரணத்தின் பாதையில் துணிவோடு நடக்கின்றான் கண்பார்வையற்ற பர்த்திமேயு இயேசுவை அடையாளம் 'கண்டுகொண்டார்" நாமும் இயேசுவை அடையாளம் கண்டு, அவரில் நம்பிக்கை கொள்ள அழைக்கப்படுகிறோம். அப்போது புதிதாகப் பார்வைபெற்ற பர்த்திமேயுவைப் போன்று நாமும் புதுப் பார்வை பெற்ற மனிதர்களாக மாறுவோம்; பார்வைகளைச் சீர்படுத்தி வாழ்கைப் பாதையை வளப்படுத்துவோம். இயேசுவோடு 'வழி நடந்து செல்ல" முன்வருவோம்.

Sunday, October 21, 2012

நாற்காலி, சிலுவை, இரண்டுமே அரியணைகள்தாம். நாற்காலியா, சிலுவையா? தேர்ந்து கொள்ளுவோம்.

21.10.2012
 ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்


செபதேயுவின் மக்கள் யாக்கோபும் யோவானும் இயேசுவை  அணுகிச் சென்று அவரிடம், நீர் அரியணையில் இருக்கும் போது எங்களுள் ஒருவர் உமது வலப்புறமும் இன்னொருவர் உமது இடப்புறமும் அமர்ந்து கொள்ள எங்களுக்கு அருளும் என்று வேண்டினர்.

அரியணை பற்றி இன்று சிந்திப்போமானால்  நாற்காலி, சிலுவை என்னும் இரண்டும் அரியனைகள் ஞாபகத்திற்கு வரலாம.; நாற்காலி அரியணைக்காக உயிரைத் தந்தவர்களும், எடுத்தவர்களும் உண்டு. சிலுவையில் உயிரைத் தந்தவர்களும், எடுத்தவர்களும் உண்டு.

ஒரு முறை, அன்னை திரேசாவுடன் ஒரு நாள் முழுவதும் செலவிட்ட ஒரு பத்திரிக்கையாளர், அந்த நாள் இறுதியில் அன்னையிடம்: எனக்கு யாராவது பத்தாயிரம் டொலர்கள் தருகிறேன் என்றால் கூட இது போன்ற வேலைகளை நான் செய்ய மாட்டேன்." என்றாராம். அதற்கு அன்னை தெரசா அவரிடம்: நானும் அப்படித்தான். பத்தாயிரம் டொலருக்காக இந்த வேலைகளைச் செய்ய மாட்டேன்." என்று பதில் சொன்னாராம். இப்படி பணி செய்த அன்னை திரேசாவைப் போல், எத்தனையோ தன்னலமற்ற பணியாளர்கள் மக்கள் மனதில் அரியணை கொண்டிருக்கிறார்கள். ஆனால், அரியணை ஏறுவதற்காக, மக்களைப் படிகற்களாகப் பயன்படுத்திய பலரை வரலாறு மறந்து விட்டது. மக்களும் மறந்து விட்டனர். அன்னையை அல்ல

உங்களுள் பெரியவராக இருக்க விரும்புகிறவர் உங்கள் தொண்டராய் இருக்கட்டும். உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர், அனைவருக்கும் பணியாளராக இருக்கட்டும். இயேசுவின் இந்த வார்த்தைகள் நமக்கு ஒரு பெரும் சவாலாக அமைகிறது. பணியாளர் தலைமைத்துவம் என்பது அண்மையில் பலராலும்  பேசப்படும் ஒரு கருத்து. பணியாளர் தலைமைத்துவம் பற்றி விக்கிபீடியாவில் தேடிய போது வரலாற்றில் பலர் சொன்ன கருத்துக்களோடு, இயேசு இன்றைய நற்செய்தியில் சொன்ன கருத்துக்களும் உள்ளன. இயேசு என்ற தலைவர் அவருடைய சீடர்களின் பாதங்களைக் கழுவிய செயலும் பணியாளர் தலைமைத்துவத்திற்கு ஒரு எடுத்துக் காட்டாக அங்கு சொல்லப் பட்டுள்ளது. இந்த பணியாளர் தலைமைத்துவத்தில் பல அம்சங்கள் உள்ளன: பரிவோடு குறை கேட்பது, மற்றவரை உற்சாகப்படுத்துவது, மற்றவரின் திறமைகளை வெளிக் கொணர்வது... என இப்படிபல பேசப்படுகின்றன.

11வயதில் ஒரு சிறுவன் பங்கு சந்தையில் ஈடுபட்டான். 14 வயதில் அந்த சிறு கம்பெனியை ஆரம்பித்தான். இன்று தனது 79 வது வயதில், 63 பெரும் நிறுவனங்களுக்கு அதிபராக இருந்து உலகின் பெரும் செல்வந்தர்களில் இரண்டாம் இடம் பிடித்திருக்கும் அவர் - வாரன் பபெட். கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே எளிய வீட்டில் வாழ்கிறார். அது அரண்மனை அல்ல. தன் காரைத் தானே ஓட்டுகிறார். அவர் ஒரு விமான கம்பெனியை நடத்தினாலும், சொந்த விமானம் இல்லை. ஒரு செல்போன், ஒரு கணனி இல்லாத அந்த மனிதர் - பல தலைவர்களுக்குப் பாடம்.

நான் கேள்விப்பட்ட ஒரு சம்பவம்: இந்தியாவில் சீக்கியரான ஒரு மாவட்ட ஆட்சியர், தமிழ் நாட்டில் ஒரு முக்கிய நகருக்கு நியமனம் ஆனார். பல அதிரடி மாற்றங்கள். நேர்மையாய் உழைக்கும் அதிகாரிகள், முதல்வர்களை வைத்து வந்த ஒரு சில திரைப்படங்கள் இவரைப் பின்னணியாக வைத்து எடுக்கப்பட்டனவோ என்று பலரும் எண்ணியதுண்டு. அப்படி நேர்மையாக, சிறப்பாக செயல் பட்டவர்.

ஒரு நாள் அதிகாலையில் இவர் வழக்கம் போல் உடற்பயிற்சிக்காக நடந்து சென்றபோது, ஒரு இடத்தில் சாக்கடை அடைத்துக் கொண்டு தண்ணீர் வெளியேற சிரமமாக இருந்தது. ஒரே நாற்றம். நகராட்சி ஊழியர் அதைச் சுற்றி நின்று பேசிக்கொண்டிருந்தனர். அந்த மாவட்ட ஆட்சியர் அங்கே போனதும், கேட்டார்: என்ன பிரச்சனை? சாக்கடை அடைச்சிருக்கு. அது தெரியுது. சுத்தம் செய்யிறதுதானே. ஒரே நார்த்தமாக இருக்கு, எப்படி இறங்குறதுன்னு தெரியவில்லை. அவர்கள் சொல்லி முடிக்கும் முன்பு, அவர் சாக்கடையில் இறங்கி, அங்கிருந்த கருவிகளை வைத்து, அந்த அடைப்பை எடுத்து விட்டார். பிறகு மேலே வந்து, இப்படித்தான் செய்யவேண்டும் என்று சொல்லி அவர் வழி போனார்.

வாழ்க்கையின் பெரும் பகுதியை ஏழைகளுக்காகவும், சமுதாயத்தால் விலக்கப்பட்டவர்களுக்காகவும் செலவழித்த அன்னை திரேசா கோடான கோடி மக்கள் மனதில் அரியணை கொண்டிருக்கும் தலைவர். வாரன் பபெட் பணத்தையே வாழ்க்கையில் தெய்வமாக வழிபடும் பல நிறுவன முதலைகளுக்குப் பாடம் சொல்லித் தருகின்ற ஒரு பெரிய செல்வந்தர்.

அரசு அதிகாரிகளும் நேர்மையாக, திறமையாக உழைக்க முடியும். அது வெறும் சினிமா கதை அல்ல என்பதற்கு ஒரு எடுத்துகாட்டு சீக்கியரான அந்த மாவட்ட ஆட்சியர். பணியாளர் தலைமைத்துவத்திற்கு இவர்களெல்லாம் உதாரணங்கள. உலகின் பெரிய, பெரிய வியாபார நிறுவனங்களெல்லாம் பணியாளர் தலைமைத்துவத்தைப் பற்றி சிந்திக்கவும், செயல் படவும் ஆரம்பித்துவிட்டனர். இவர்களை இந்தப் பாதையில் சிந்திக்கத் தூண்டிய இயேசுவின் வார்த்தைகள் நம்மையும் நல் வழி படுத்த வேண்டுவோம்.
நாற்காலி, சிலுவை, இரண்டுமே அரியணைகள்தாம். நாற்காலியா, சிலுவையா... தேர்ந்து கொள்ளுவோம்.

எம்மை ஏழைகளுக்குக் கொடுப்போம்

14.10.2012 
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்

செல்வந்தர்கள் வாழ்க்கை இன்று எப்படிப்பட்டதாக இருக்கிறது. செல்வந்தர்களாக தங்களைக் காட்டிக் கொள்ள விரும்புவோர் எண்ணிக்கையே அதிகமாகிறது. இதனால் கடன்பட்டு வாழ்க்கையை தொலைத்தவர்கள் அதிகம். சமூகத்தில் தங்களை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்ற மனநிலையில் இன்று மனஉளைச்சலுக்கு ஆளானவர்களே இன்னும் அதிகம். இந்த நிலையில் உள்ளதையெல்லாம் விற்று, கொடுத்துவிட்டு வந்து என்னை பின் செல்லுங்கள் என்ற இறைவார்த்தை அர்த்தத்தை இழக்கிறதோ என எண்ணத் தோன்டுகிறது. இயேசு சொன்னதைக் கேட்டதும் இயேசுவைத் தேடி வந்த இந்த மனிதர்; முகம் வாடி வருத்தத்தோடு சென்றுவிட்டார்.

எத்தனை இளைஞர்கள் இன்று முக வாட்டத்தோடு அலைகிறார்கள். போதை, மது, கேளிக்கை இவற்றால் நிம்மதி இழந்து தவிக்கும் இளைஞர்கள் எத்தனைபேர் நம்மிடையே இருக்கிறார்கள். இளைஞர்கள் பலர் பணத்தையும் உடலையும் உள்ளத்தையும் இறுதியில் வாழ்க்கையையும் இழந்து தவிப்பதை நாம் பார்த்திருக்கிறோம். இப்படிப்பட்ட நிலையில்தான் அந்த இளைஞன் இயேசுவிடம் வந்தான்.  இயேசு அவனிடம், 'நீ நல்லவன். ஆனால் உன்னிடம் உள்ள பணம், சொத்து உன்னை மயக்கிவிட்டது. அதை தவறாகப் பயன்படுத்தி நீ உன் வாழ்வை அழித்துக்கொண்டாய். நீ தவறு செய்யவில்லை. ஆனால் நல்லது செய்ய தவறிவிட்டாய். அதுதான் நீ சந்தோஷமில்லாமல் இருப்பதற்குக் காரணம். ஆகவே இன்றிலிருந்து சில நல்லவற்றைச் செய்யத் தொடங்கு மீட்படைவாய்" என்கிறார்.

நாற்செய்தியின் படி மீட்படைந்தோர் யார் என்னும் ஒரு ஆய்வை செய்தால் பல விடைகளை காணலாம். இயேசுவை, இறையரசை, இயேசுவின் நற்செய்தியை ஏற்றுக் கொண்டோர் அனைவரும் மீட்படைந்தனர் என்று எளிதாக கூறிவிடலாம். இன்னும் கொஞ்சம் ஆழமாக பாத்தால்: கூரைப்பிரிப்பில் விசுவாசம் வெளிப்பட்டது. திமிர் வாதக்காரன் மீட்படைந்தான். பார்க்க வேண்டும் என்ற ஆசையில் அத்திமரத்தில் ஏறியதில் விசுவாசம் வெளிப்பட்டது. சக்கேயு மீட்படைந்தான். தொட்டால் போதும் என்பதில் இறையரசு இருந்தது. கனானேயப் பெண் மீட்படைந்தாள். என்னையும் மன்னிப்பார் என் தந்தை என்ற நினைவு இருந்தது. ஊதாரி மகன் மீட்படைந்தான். என்னை நினைத்தால் போதும் என்ற ஆசை இருந்தது. சிலுவையிலேயே கள்ளன் மீட்படைந்தான்.

மீட்படையக் கேட்டவர்கள் யார் என் நோக்கினால்: ஒரு சட்ட வல்லுநர் மீட்படைய என்ன செய்ய வேண்டும். 'சட்டங்களை விட, சாதி சம்பிரதாயங்களை விட, அயலானை நேசிப்பதே மீட்படைய வழி என்பது பதிலானது" ஒரு செல்வர் - மீட்படைய என்ன செய்ய வேண்டும்? 'பணத்தை வைத்துப், பரிமாறிக் கொள்வது, பகிர்ந்து கொள்வது மேலானது என்பது பதிலானது". செபதேயுவின் மக்கள் யோவான்-யாகப்பர் வந்தனர். இடுக்கான வாயில் வழியே நுழையுங்கள் என்றதன் மூலம் சிலுவை வழியே மீட்பு உண்டு என்பது அறிவிக்கப்பட்டது.

'நிலைவாழ்வை உரிமையாக்கிக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?" என்னும் கேள்வி நம் ஒவ்வொருவர் உள்ளத்திலும் எழுகின்ற கேள்வியே. இம்மண்ணக வாழ்வோடு மனிதரின் இலட்சியங்கள் மடிந்துவிடுவதில்லை. சாவுக்குப் பின் வாழ்வுண்டு என்னும் உறுதிப்பாடு மனித உள்ளத்தில் ஆழப் பதிந்த ஒன்று. எனவே, 'நிலைவாழ்வை"அடைய வேண்டும் என்னும் உள்ளார்வத்தால் நாம் உந்தப்பட்டு, நிறைவடைய முனைகின்ற வேளையில் அக்குறிக்கோளை எட்டுவதற்கான வழியைத் தேடுவது இயல்பே. இயேசு அவ்வழியை நமக்குக் காட்டுகிறார். அவரை முழு மனத்தோடும் விருப்போடும் பின்செல்வோர் அவர் வாக்களிக்கின்ற நிலைவாழ்வைப் பெற்றுக்கொள்வர்.

நாம் வாழ்க்கையில் நிறைவையும் நிம்மதியையும் காண விரும்புகிறோம். வாழ்க்கையில் எப்போதும் வசந்தம் வீச வேண்டும் என்று விரும்புகிறோம். எனவே  இன்று ஆண்டவர் சொல்லுவதைக் கேட்போம் அந்த பணக்கார இளைஞரிடம் நிறைய நல்ல மனது இருந்தது. நியாயமாக நிம்மதியாக வாழ வேண்டும் என்ற நல்ல எண்ணம் இருந்தது. தன் வாழ்வில் கடவுளின் கட்டளைகளையும் அன்றாடக் கடமைகளையும் தவறாது கடைபிடித்து வாழ்ந்துள்ளான். ஆனாலும் இவற்றில் தான் எதிர்பார்த்த நிறை வாழ்வையும் நிம்மதி வாழ்வையும் அவன் காணவில்லை. ஆகவேதான் இயேசுவிடம் வந்துள்ளான் எனலாம். இயேசுவோடு; வாழ்வின்; ஆழத்துக்குள் செல்லுவோம். எங்கள் குடும்பத்தின் ஆழத்துள் அவரை அழைத்து செல்லுவோம். எங்கள் வாழ்வின் பிரச்சினைகளின் ஆழத்துள் இயேசுவை கூட்டிச் செல்லுவோம். அவர் அந்த பணக்கார இளைஞனை கூர்ந்து நோக்கியது போல எங்கள் உள்ளத்தையும் குடும்பத்தையும் பிரச்சனைக்குரிய இடங்களையும் கூர்ந்து நோக்கட்டும். நோயின் ஆழத்திற்குச் செல்லட்டும். நிறைவாழ்வு தேடிய பணக்கார இளைஞனின் வாழ்வின் ஆழத்துள் சென்று, கூர்ந்து நோக்கிய இயேசு, அவனது நோயின் காரணம் அறிந்து அதற்கு மாற்று மருந்து கொடுத்தார். 'நீர் போய் உமக்கு உள்ளவற்றை விற்று ஏழைகளுக்குக் கொடும்". எங்கள் வாழ்வைக் கூர்ந்து நோக்கும் இயேசு எங்கள் நல்வாழ்வுக்கும் நல் விருந்தும் மருந்தும் தருவார். மகிழ்வோடு ஏற்று வாழுவோம். நிறை வாழ்வைக் காண்போம்.

“மனிதாபிமானம் வளர்ச்சியின் உச்ச கட்டத்தில் இருக்கும் இவ்வேளையில் மணமுறிவு தேவையா

07.10.2012
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்

கேள்விகள் பல விதம். சிலர் நேர்மையான உள்ளத்தோடு பிறருடைய கருத்தை அறியும் ஆவலோடு கேள்வி கேட்பார்கள். வேறு சிலர் பிறரிடம் குற்றம் காண்கின்ற நோக்கத்தோடு கேள்வி கேட்பார்கள். இயேசுவிடம் கேள்வி கேட்டவர்கள் பலர்;. சிலர் நேர்மையான உள்ளத்தோடு இயேசுவை அணுகியதுண்டு. வேறு சிலர் 'இயேசுவைச் சோதிக்கும் எண்ணத்துடன்; கேள்வி கேட்டார்கள்". பரிசேயர் அவரை அணுகி மண விலக்குப் பற்றி இயேசுவிடம் கேட்ட கேள்வி இந்த இரண்டாம் வகையைச் சேர்ந்தது. எனவேதான் இயேசு தம்மிடம் கேள்வி கேட்ட பரிசேயரிடம் ஒருமறு கேள்வியைக் கேட்கிறார்: 'மோசே உங்களுக்கு இட்ட கட்டளை என்ன?. கணவன் மணவிலக்குச் சான்று எழுதி தன் மனைவியை விலக்கிவிடலாம் என்று மோசே அனுமதி அளித்ததாக அவர்கள் பதில் சொல்லுகின்றார்கள். உண்மையில் மோசே மண விலக்குப் பற்றி கட்டளைகள் கொடுத்ததாக பெரிதாக வேதாகமத்தில் இல்லை ஆனால் மண விலக்குச் செய்யும் கணவன் மீண்டும் அதே பெண்ணை மணமுடித்தல் ஆகாது என்பதே அக்காலத்தில் சட்டமாக இருந்திருக்கின்றது. இவற்றை வைத்துப்பார்க்கும் போது அக்காலத்தில் திருமணஉறவு சீர்குலையத் தொடங்கியது என்பது தெரிகிறது.


இன்றைய உலகில் திருமண உறவு பல விதங்களில் முறிந்துவிடும் நிலையில் உள்ளது. மேற்குலக நாடுகளில் பத்தில் ஆறு திருமணங்கள் முறிந்துவிடுவதாக கணிப்பு. நம் நாட்டிலும் விவாகரத்து விரிந்து கொண்டிருப்பதாகச் செய்திகள் திதமும் வெளிவந்துகொண்டிருக்கின்றன. திருமணங்களின் முறிவு மனித வாழ்வின் சீரழிவின் அடையாளம். ஆணும் பெண்ணும் திருமணத்தில் இணைந்த பின் இறுதிவரை இணைந்து வாழும்போது மனித சமுதாயம் வாழும். திருமண முறிவு, விவாகரத்து தொடருமாயின், ஒரு தலைமுறையோடு தலைமுறை வாழ்ந்து அழியும். திருமணத்தில் இணைந்தவரைப்; பிரிக்கும் முயற்சி, தலைமுறையை அழிக்கும் முயற்சி.

அன்றிலிருந்து இன்று வரை மனிதருள் பலர் திருமண உறவை எப்படி பிரிப்பது? என்று சுயநலத்தோடு முயற்சி செய்துகொண்டே இருக்கின்றனர். அத்தகைய முயற்சிகளுள் ஒன்று இன்றைய நற்செய்திப்பகுதியில் காணலாம். தங்களின் சுயநல முயற்சிக்கு பக்க துணையாக வேதாகமத்திலிருந்து மோசேயை துணைக்கு காட்டுகின்றனர். ஆனால் இயேசுவோ தன்னுடைய பதிலின்மூலம் அவர்களுக்கு உண்மை நிலையை உறுதிப்படுத்துகிறார். திருமணங்கள் கடவுள் இணைக்கும் ஒரு அருங்கொடை. திருமணத்தில் இணையும் ஆணும் பெண்ணும் ஆண்டவன் செயல்பட உதவும் இன்றியமையாத கருவிகள். இந்தச் சமுதாயம் அவர்களுக்கு உதவும் கரங்கள். எனவே இதனை  பிரிக்கும் அதிகாரம் மனிதர்கள் யாருக்கும் இல்லை. ஆகவே கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும் என்கின்றார் இயேசு.

அன்று தொடங்கிய இந்த திருமண முறிவு பிரச்சினை இன்றுவரை தொடர்ந்துகொண்டே வருகிறது. எத்தனை சட்டங்கள் இயற்றினாலும், சம்பிரதாயங்கள் கடைபிடித்தாலும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. எத்தனையோ விளக்கங்கள், வியாக்கியானங்கள் கொடுத்தும் நிறைவடைந்தபாடில்லை. இந்த கெடுபிடி தொடர்வதற்குக் காரணம், எல்லா மதமும் மனித கலாசாரமும் திருமணத்தை தெய்வீக அனுபவமாகப் பார்க்கின்றன.  இத்தெய்வீகத்தன்மை திருமணத்தில் ஊடுருவிப் பரவி படர்ந்திருப்பதால்,  திருமண உறவு முறிவு ஏற்பட்டிருக்காது எனலாம். மனிதன் மனித பலவீனம், உலக ஆசைகள், நவீன பொருளாதாரம், நுகர்;வு கலாசாரம், பண்பற்ற பாலியல் அறிவு இவற்றால் பாதிக்கப்பட்டு, திருமணத்தோடு போராடிக்கொண்டிருக்கிறான். இந்நிலையில், ஒருவர் தம் மனைவியை எக்காரணத்தையாவது முன்னிட்டு விலக்கிவிடுவது முறையா?"  என்று பரிசேயத்தனமாக சிந்திப்பதற்குப் பதிலாக வாழ வைப்பதற்கான வழியைச் சிந்திப்பது நல்லது.

சட்டத்திற்கு எப்போதுமே சில விதிவிலக்குகள் உண்டு. விதிவிலக்குகள் சட்டமாகிவிடக்கூடாது.  கணவனும் மனைவியும்  ஒரே உடலாய் இருப்பர். 'இனி அவர்கள் இருவர் அல்ல, ஒரே உடல். எனவே கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும்" இதுதான் சட்டம்.

ஒருவன் திருமணம் முடித்த பின் அவளது அருவருக்கத்தக்க செயலைக் கண்டு அவள்மேல் அவனுக்கு விருப்பமில்லாமற்போனால், அவன் முறிவுச் சீட்டு எழுதி, அவள் கையில் கொடுத்து, அவளைத் தன் வீட்டிலிருந்து அனுப்பிவிடுகிறான். இது மேசே காலத்து வளக்கமாக இருந்திருக்கிறது. இது விதிவிலக்கு. இந்த விதிவிலக்கும் கூட முறையானதல்ல என இயேசு கூறுகிறார். அவர்களது கடின உள்ளத்தின் பொருட்டே இந்த விதிவிலக்கு தரப்பட்து. அறிவு வளர்ச்சியின்றி, கல்வியும் கலாசாரமும் இல்லாது காட்டுமிராண்டியாக கடின உள்ளத்தோடு மிருகமாக வாழ்ந்த காலத்தில் இதுபோன்ற விதிவிலக்கு தேவைப்பட்டது. இயேசுவின் காலத்திலேயே அந்த விதிவிலக்கு கேள்விக்குறியாகிவிட்டது.

இன்று அறிவும் அறிவியலும், கல்வியும் கலாசாரமும், மனிதமும் மனிதாபிமானமும் வளர்ச்சியின் உச்ச கட்டத்தில் இருக்கும் காலத்தில் மணமுறிவு கேட்டு விண்ணப்பிப்பம் தேவைதானா. நம் அறிவு, மனிதாபிமானம், கலாசாரம், மனோதத்துவம், இறை நம்பிக்கை இவற்றை எல்லாம் கையாண்டு, கணவனையோ மனைவியையோ ஏற்றுக்கொண்டு இல்லறம் நடத்தினால்; வாழ்வில் எல்லாம் நிறைவாக இருக்கும்.

Chistmas wish

Chistmas wish
I wish you a happy christmas

About Me

My photo
I am Mr Frank. I am a UN staff