Tuesday, March 26, 2013

சட்டம் பேசி, கல்லரைகளைப் பெருக்குவதை விட, வாழும் வழிகளை அதிகமாக்குவோம்

17.03.2013'"

ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்

மறைநூல் அறிஞரும் பரிசேயரும் விபசாரத்தில் பிடிபட்ட ஒரு பெண்ணைக் கூட்டிக் கொண்டு வந்து நடுவில் நிறுத்தி,இயேசுவிடம்'போதகரே,இப்பெண் விபசாரத்தில் கையும் மெய்யுமாகப் பிடிப்பட்டவள். இப்படிப்பட்டவர்களைக் கல்லால் எறிந்து கொல்ல வேண்டும் என்பது மோசே நமக்குக் கொடுத்த திருச்சட்டத்திலுள்ள கட்டளை. நீர் என்ன சொல்கிறீர்?" என்று கேட்டனர். என்னும் பைபிள் பகுதி இன்று எமக்குத் தரப்படுகின்றது.  பரிசேயரும் மறை நூல் அறிஞரும் விபச்சாரத்தில் ஒரு பெண்ணைக் கையும் மெய்யுமாகப் பிடித்து வந்ததாகக் கூறுகின்றனர். இவர்கள் ஏன் இயேசுவிடம் வர வேண்டும்? இவர்கள் தங்ளுக்குசட்டங்கள் தலைகீழாய்த் தெரியும் எனபைபிளில் தெரிவிக்கின்றவர்கள்  அச்சட்டப்படி அந்தப் பெண்ணைத் தண்டிக்கும் அதிகாரமும் அவர்களுக்கு உண்டு.  பின்பு எதற்கு இந்த வெளிவேடம் என்று பார்தால்: இயேசுவை எப்படியும் மடக்க வேண்டும் என்னும் சாவல். அதற்கு இது ஒரு நல்ல சந்தர்ப்பம். அவர்களுக்கு அந்த பெண்ணோ, சட்டங்களோகூட முக்கியமில்லை. சவாலில் வெல்லனெண்டும் இயேசுவை மடக்கவேண்டும் என்பதுதுன் பிரச்சினை.

மோசே நமக்குக் கொடுத்ததாக மறைநூல் அறிஞரும் பரிசேயரும் கூறும் சட்டம் என்ன என்று நாம் முதலில் நோக்குவது இங்கு நல்லது: 'அடுத்திருப்பவன் மனைவியோடு உடலுறவு கொள்பவனும் அந்தப் பெண்ணும் கொலை செய்யப்பட வேண்டும்." 'ஒரு மனிதன் மற்றொருவனுடைய மனைவியோடு படுத்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டால், அப்பெண்ணும் அப்பெண்ணோடு படுத்தவனும், இருவரும் சாவர்." என்பதுதான். எனவே பைபிளில் இருவேறு இடங்களில் மோசேயின் சட்டப்படி விபசாரத்தில் ஈடுபடும் இருவரும் கொலை செய்யப்பட வேண்டும் என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அப்படியிருக்க அந்த ஆணை அவர்கள் இழுத்து வந்ததாகக் கூறப்படவில்லை. ஆணுக்கொரு நீதி, பெண்ணுக்கொரு நீதி என்ற அளவில் மறைநூல் அறிஞரும், பரிசேயரும் மோசே சட்டத்தை மாற்றி அமைத்து விட்டனர். அதிகாலையில், கோவில் வளாகத்தில் இப்படி ஒரு பெண்ணையும், மோசே சட்டத்தையும் பகடைக் காய்களாக்கிய பரிசேயரையும், மறைநூல் அறிஞர்களையும் வேதனையோடு நினைத்து, பரிதாபப்பட்டு, அவர்களோடு பேசாமல் இயேசு மௌனமாகிப்போனார். ஆனால், அவர்கள் விடுவதாயில்லை. மீண்டும் மீண்டும் வற்புறுத்தவே, 'உங்களுள் பாவம் இல்லாதவர் முதலில் இப்பெண்மேல் கல் எறியட்டும்" என்றார் இயேசு.

நீதிபதியாக இருப்பதற்கு ஒரு தகுதி வேண்டும். தீர்ப்பிடுவதற்கு ஒரு கண்ணியம் இருக்க வேண்டும். பட்டமும் பணமும்பதவியும் அல்ல அந்ததகுதி. "உங்களுள் பாவம் இல்லாதவர் முதலில் இப்பெண்மேல் கல் எறியட்டும்"என்பதுதான் எதிர்பார்க்கப்படும் தகுதி. இயேசுவின் போதனையின் இப்பகுதி தீர்ப்பு அளிக்க வேண்டாம் என்பதைவிட, தீர்ப்பு அளிப்பதற்கானத் தகுதியை முன் நிறுத்துகிறது. நம் கண்ணில் மரக்கட்டை உள்ளதா? நம் முதுகில் அழுக்கு உள்ளதா? நம் மனதில் பாவச் சுவடுகள் படிந்துள்ளதா? இவை இருக்குமாயின் எழுதும் தீர்ப்பு ஒருதலைப்பட்சமாக இருக்கும். அடுத்தவரை ஆழமாகப் புறிந்துகொண்டு மனித நேயமும், தெய்வீகமும் எம் தீர்பில் காணப்படவேண்டும் அப்போது அந்த தீர்ப்பு ஒரு தண்டனையாக, சுமையாக அமையாமல் சுவையாக, புதிய தொடக்கமாக அமைந்துவிடும். கடவுளின் முன்னிலையில், பிறருக்குத் தீர்ப்பு அளிக்கும் தகுதி நமக்கு இருக்கிறதா என்று சிந்திப்பது நலம்.

இப்படிப்பட்டவர்களைக் கல்லால் எறிந்து கொல்ல வேண்டும் என்பதில் காட்டிய வேகமும் விவேகமும் வீரமும், இப்படிப்பட்டவர்களை எவ்வாறு வாழ வைப்பது என்பதில் காட்ட வேண்டும் என்பது இயேசு இந்த பகுதியில் நமக்கு தெளிவாக காட்டுகின்றார். கொல்லும் முயற்சியில் சட்டத்தைச் சாதகமாத பயன்படுத்தும் சாமர்த்தியம், பெண்ணை அடிமைப்படுத்தும் கொடூரம், அரங்கேறுவதைப் பார்க்கிறோம். சட்டத்தை வளைத்து வசப்படுத்துகின்றனர் கொலை வெறி கொண்டோர். அதே சட்டப்படி அச்செயலில் ஈடுபட்ட ஆணையும் கொண்டு வர வேண்டுமே! வரவில்லையே, ஏன்? பெரிய இடத்துப் பாவங்களையும், பலவீனங்களையும் மூடிமறைக்க, திசை திருப்ப, பாவம் இதுபோன்ற அப்பாவிகள் பலியிடப்படுகிறார்கள். "உங்களுள் பாவம் இல்லாதவர் முதலில் இப்பெண்மேல் கல் எறியட்டும்" என்னும் இயேசுவின் கணீரொலி அத்தனை முகமூடிகளையும் பிடுங்கியெறிந்தது. அப்பெண்ணின் குனிந்த தலையை நிமிர வைத்தது. "அம்மா, அவர்கள் எங்கே? நீர் குற்றவாளி என்று எவரும் தீர்ப்பிடவில்லையா?" 'அம்மா' என்று அந்த நீதி தேவனின் அழைப்பு, தன் பெண்;மையின் பரிமாணம், தாய்மையின் முழுமை என்னும் புது வாழ்வை அவளில் புகுத்தியதை அவள் உணர்ந்தாள். ஆணுக்குப் பெண் சரி நிகர் சமம்" என்று ஆணித்தரமாய் சொல்கிறார் இயேசு. இந்த உண்மையின் ஆழத்தை மட்டும் இந்த உலகம் மீண்டும் மீண்டும் அசை போட்டால், இந்த உண்மையின் ஆழத்தை நாம் ஒவ்வருவரும் மனதார ஏற்றுக் கொள்ள முயன்றால், ஆண்-பெண் உறவுகள் எவ்வளவோ நலமுடன், சக்தியுடன் வளரும். சட்டம் பேசி, கல்லரைகளைப் பெருக்குவதை விட, வாழும் வழிகளை அதிகமாக்குவோம்

No comments:

Chistmas wish

Chistmas wish
I wish you a happy christmas

About Me

My photo
I am Mr Frank. I am a UN staff