Wednesday, May 16, 2012

இணைந்திருந்து இயேசுவோடு நிலைத்து வாழ்வோம்

06.05.2012

ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்

கடவுளும், சமயமும் தேவையில்லை என்ற நிலை வளர்ந்துவரும் இன்றைய உலகில் இயேசுவும் அவரது போதனைகளும் எம் வாழ்வைவும் ஒரு மாற்று சாட்சியாக விளங்கவைக்க வேண்டும் என்று எமக்கு கற்பிக்கின்றன. திராட்சைச் செடியாம் இயேசு தம்மோடு இணைந்த கொடிகளாக நாம் இருந்து, பலன் தருமாறு எம்மை அழைக்கும் பகுதியை இன்று நற்செய்தியில் காண்கின்றோம். நாம்  இயேசுவினுள்ளும் அவரது வார்த்தைகள் எங்களுள்ளும் நிலைத்திருந்தால் நாங்கள் விரும்பிக் கேட்பதெல்லாம் நடக்கும். இயேசுவே நமது வாழ்வின் மையம் என்பதை இது உறுதியாக காட்டுகின்றது. இயேசுவே உண்மையான திராட்சைச் செடி. திராட்சைச் செடியோடு இணைந்து செழிக்கும் கொடிகளைப் போல, இயேசுவோடு இணைந்திருந்து பலன்தர நாம் அழைக்கப்படுகிறோம். இயேசுவில் நம்பிக்கை கொண்டிருக்கும் நாம் அனைவரும் நற்செய்தியின் தூதுவர்களாக திகழ்வதே, கடவுள் எதிர்பார்க்கும் பலன் தரும் வாழ்வாகும்.

“நீங்கள் மிகுந்த கனி தந்து என் சீடராய் இருப்பதே என் தந்தைக்கு மாட்சி அளிக்கிறது” இறைவனைத் தேடும் இந்த தாகம் ஒவ்வொரு மனித உள்ளத்திலும் இருக்கவேண்டும். “எங்களை உமக்காக உருவாக்கினீர் இறைவா, எனவே உம்மில் நாங்கள் ஒய்வு கொள்ளும்வரை எங்கள் இதயம் ஓய்வதில்லை" என்று புனித அகஸ்தின் கூறிய வார்த்தைகளை மேற்கோள் கொண்டு நாம் இயேசுவில் இணைந்து பலன் தர ஓயாமல் உழைப்போம்.

தற்போதைய உலகில் அற்புதமான பல அறிவியல் முன்னேற்றங்கள் காணப்பட்டாலும், அவற்றில் திருப்தி அடையாமல், மனித மனம் இன்னும் ஆழ்ந்த தேடலில் ஈடுபட்டிருப்பதைக் காண முடிகிறது. திராட்சைச் செடியாம் இயேசுவோடு இணைந்து செல்ல முடியாது என்பது போன்ற ஓர் எண்ணத்தை இன்றைய அறிவியல் உலகம் உருவாக்கிகுகின்றது. ஆயினும் இணைந்து செல்லும்போது இன்னும் பல ஆழமான உண்மைகளை உணர முடியும் என்பதற்கு  நானே திராட்சைக் செடி நீங்கள் அதன் கொடிகள். ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார். என்னைவிட்டுப் பிரிந்து உங்களால் எதுவும் செய்ய இயலாது என்னும் பகுதிகள்  சான்றாகும்.
 
இயேசுவின் சீடர்கள் கனி தர வேண்டும், அதுவும் மிகுந்த கனிதர வேண்டும் என்பது இயேசுவின் எதிர்பார்ப்பு. நல்ல நிலத்தில் விழுந்த விதைகள் முப்பது, அறுபது, நூறு மடங்கு எனப் பலன் தந்தன என்னும் விதைப்பவன் உவமையையும் ஆண்டவரே மொழிந்துள்ளார். எனவே, மிகுந்த கனி தருபவர்களாகப் பணியாற்றுவோம்.

மண்ணில் மனித வாழ்க்கை என்பது நமக்குள் நிறைவையும் நிம்மதியையும் தந்து மிகுந்த கனி நிறைந்த வாழ்வாக இருக்க வேண்டும் என்பதே அனைவரதும் ஆவல். ஒவ்வொருவருடைய வாழ்க்கையும், பலருக்குப் பயன் உள்ளதாக, ஆற்றல் தருவதாக அமையவேண்டும். பிறருக்கு பயன் தந்து இறைவனுக்கு மகிமை சேர்ப்பதே ஒருவன் வாழ்ந்ததன் பயன் எனலாம். நமது வாழ்வும், பயனும் யாரையுமே தொடவில்லையென்றால் என்னே ஒரு பரிதாபம். எனவே, கனி தரும் சொற்களைப் பேசுவோம், மிகுந்த கனிதருமாறு வாழ்வோம். இத்தகைய கனி தரும் வாழ்க்கையை வாழ, ஒருவன் இறைவனோடு இணைந்திருக்க வேண்டும். இக்கருத்தை இயேசு இன்றைய நற்செய்திப்பகுதியில் பலமுறை உணர்த்துகிறார். 'இணைந்திருத்தல்”, 'நிலைத்திருத்தல்” என்னும் வார்த்தைகளை இங்கு பலமுறை பயன்படுத்துகிறார். “இணைந்து இருந்தாலன்றித் தானாக கனிதர இயலாது". “இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார்". "என்னைவிட்டுப் பிரிந்து உங்களால் எதுவும் செய்ய இயலாது". “நீங்கள் என்னுள்ளும் என் வார்த்தைகள் உங்களுள்ளும் நிலைத்திருந்தால் நீங்கள் விரும்பிக் கேட்பதெல்லாம் நடக்கும்." இத்த வார்த்தைகள் இதற்குச் சான்றுகள்.

இயேசுவோடு இணைந்திருப்பதன் நெருக்கம் பல பலன்களைக் கொடுக்கவல்லது. இயேசுவை விட்டுக் கொஞ்சம் விலகினாலும் அந்த இழப்பு, கொஞ்சம் அல்ல. மிக மிகப் பெரிது. “என்னைவிட்டுப் பிரிந்து உங்களால் எதுவும் செய்ய இயலாது" கொஞ்சம்தானே இயேசுவை விட்டு விலகியிருக்கறோம். ஆகவே கொஞ்சம்தானே நட்டம் என்ற கணக்கு, ஆன்மீகத்தில் தப்புக்கணக்கு. இயேசுவை விட்டு கொஞ்சம் விலகினாலே நாம் எல்லாவற்றிலும்  நட்டமடைந்துவிடுவோம்.

அதே வேளையில், நாம் இயேசுவோடு இருந்தால், “விரும்பிக் கேட்டதெல்லாம் கிடைக்கும்". இயேசுவோடு நெருக்கமாக இருந்துகொள்வோம். செடியும் கிளையுமாக, கிளையும் கொடியுமாக. இணை பிரியாத இந்த நெருக்கம் மிகுந்த பலனைத் தரும். கனி கொடுக்கும். எம்மை பிரிக்கும் சக்திகள் காத்துக்கொண்டே இருக்கின்றன. அவைகள் எமக்கு உள்ளேயும் இருக்கும் வெளியேயும் இருக்கும். எனவே அவைகளை அடையாளம் கண்டு அழிப்போம். இயேசுவோடு இணைந்த கிளைகளாக வாழ்வோம். வெற்றி நம் கையில்.

No comments:

Chistmas wish

Chistmas wish
I wish you a happy christmas

About Me

My photo
I am Mr Frank. I am a UN staff