Thursday, May 24, 2012

மனிதபணியில் மறுமலர்ச்சி மலர தூயஆவியின் செயல்களுக்கு எம் இதயங்களை திறப்போம்.

27.05.2012
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்
 
உயிர்ப்பு விழாவுக்கு அடுத்த மிகப்பெரிய விழா தூய ஆவியின் பெருவிழாவாகும். இதனைப் பெந்தக்கோஸ்து என்றும் கூறுகின்றோம். உயிர்ப்புப் பெருவிழாவின் ஐம்பதாம் நாள் பெந்தக்கோஸ்து திருவிழா கொண்டாடப்படுகின்றது. தூய ஆவியின் வல்லமையால் திருச்சபை தோன்றிய நிகழ்வைத்தான் நாம் பெந்தக்கோஸ்து திருநாளில் நினைவு கூர்கின்றோம். உண்மையில் எருசலேம் மாடி அறையில் மரியாவும் திருத்தூதர்களும் கூடியிருந்த போது முதல் பெந்தக்கோஸ்து நடைபெற்றது. பெந்தக்கோஸ்து நிகழ்விலே மனிதர்களை நோக்கி ஒரு பாலத்தைக் கடவுள் தூயஆவியாரை அனுப்புவதன் மூலம் கட்டத் தீர்மானித்தார். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதன் கொடையே பெந்தக்கோஸ்து. பெந்தகோஸ்து புதுமை என்பது மனித குலம் இழந்து விட்டிருந்த ஒருவரையொருவர் புரிந்துகொள்ளல் எனும் கொடையை மீண்டும் பெற்றுக்கொள்வதாகும்.

தூய ஆவியின் அருள்பொழிவால் நாம் அனைவரும் உறுதியுடன் வாழ்ந்து வருகின்றோம். தூய ஆவி கடவுளின் புதிய மற்றும் வல்லமைமிக்க தொடர்பாளராய் இருந்து கடவுளின் பணியில் ஒன்றிப்பை ஏற்படுத்துகின்றார். உயிர்த்தெழுந்த இயேசுவைப் பறைசாற்றிட, புதிய மாற்றங்களை எற்படுத்திட திருத்தூதர்களுக்கு வல்லமை அளிக்கின்றார் தூய ஆவியார். தூய ஆவியார் ஏற்படுத்தும் மாற்றங்களுக்கு விசுவாசிகள் பயப்படத் தேவையில்லை. தூயஆவியரின் கொடைகளை நன்கறிந்து அதன்படி வாழ்ந்தவர்கள் பெருந்துன்பத்திற்குள்ளான வேளையில் அவர்களுக்குத் தூய ஆவியார் ஆறுதலாகவும் ஊக்கமாகவும் வல்லமையாகவும் இருந்தார். ஆனால் இன்று எம்மில் பலர் தூயஆவியனவரின் கொடைகளைப் பற்றி அறியதவர்களாய் தான் வாழ்கின்றோம். இந்;தவேளை ஒரு கதையை பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன். “வயது முதிர்ந்த ஒரு பிச்சைக்காரர் சாகும் தருவாயில் கடைசி மகனை அழைத்து மகனே நான் உனக்குக் கொடுப்பதற்கு என்னிடம் ஏதும் இல்லை. ஆனால் இந்த கோப்பையை ஒரு பணக்காரப் பெண்மணி வீட்டுக்குப்பையலிருந்து எடுத்தேன் எனக் கூறிக் கொடுத்தார். தந்தை இறந்தபின் மகன் பிச்சை எடுத்து வாழ்ந்து வந்தான். ஒரு தங்க ஆசாரி ஒருவர் அவனுடைய கோப்பையில் காசு ஒன்று போட்டபோது கேட்ட சத்தம் அவரை ஒரு நிமிடம் அந்தக் கோப்பையைச் சோதிக்கச் செய்தது. அந்தக்கோப்பை சுத்தத் தங்கத்தால் செய்யப்படிருந்தது தெரியவந்தது. இளைஞனே ஏன் உன் நேரத்தை வீணாக்கிக் கொண்டிருக்கிறாய். நீ ஒரு பணக்காரன் நீ வைத்திருக்கும் கோப்பை பல லட்சம்; மதிப்புள்ளது எனக்கூறினார் அந்த தங்க ஆசாரி. இதை அறியாது இன்றுவரையும் வாழ்கின்றேனே என பெருமூச்சு விட்டான் அந்த மகன். நாமும் அந்த பிச்சைக்காற தந்தை, மனனைபோல நம்மிடமிருக்கும் செல்வத்தைப் பற்றித் தெரியாது வாழ்கின்றோம். நம்முள் வாழும் தூய ஆவியானவரின் கொடைகள் பற்றித் தெரியாது இருக்கிறோம் அவர் தரும் அருள் விலை மதிப்பில்லாதது. உயிர்த்த இயேசு அளிக்கும் கொடைகளான சமாதானம் ,பாவமன்னிப்பு ஆகியவை ஆவியாரின் பிரசன்னத்தின் வெளிப்பாடுகள். பாவமன்னிப்புப் பெற்று சமாதான வாழ்வு வாழ இவ்விழா நம்மைத் தூண்டுகிறது.

கடவுள் அறியப்படாதவராக நோக்கப்பட்டு, இயேசு ஒரு வரலாற்று நாயகன் என்ற நிலையில் மட்டும் பார்க்கப்படும் போக்கு நிலவும் இக்கால அன்றாட வாழ்விலிருந்து கடவுளின் ஆவியை ஒதுக்கி வைத்தால் நம்முள் மனித மாண்பும் நீதியும் சுதந்திரமும் மலராது. அவரை ஒதுக்கி வாழும் போது அது இடர்களுக்கே இட்டுச்செல்லும். மனித மாண்பும் சுதந்திரமும் மலர்ந்தால்தான் ஒரு சமுதாயத்தை  நீதியில் உருவாக்க முடியும். ஆழமான இறையனுபவம் பெற்ற மனிதரின் வாழ்க்கையினால் மட்டுமே மக்கள் இயேசுவிடத்திலும் தூய ஆவியினிடத்திலும் ஈர்ப்பைப் பெறுவார்கள். அப்போதுதான் மனிதபணியில் மறுமலர்ச்சி மலரும். எனவே எம்முள் உறைந்திருக்கும் தூய ஆவியின் செயலாற்றல்களுக்கு எம் இதயங்களை முற்றிலுமாகத் திறப்போம். சான்றுபகர்வோம்.

பெந்தக்கோஸ்து திருவிழாவன்று நாம் தூயஆவியாரில் நமக்கிருக்கும் விசுவாசத்தை அறிக்கையிடுகின்றோம். ஆனால் அந்த விசுவாசத்திற்கேற்ற நடைமுறை நம்மிடம் உள்ளதா? நமது விசுவாசம் சில வழிபாட்டு முறைமைகளில் அடங்கிவிடுகிறதா? நம்மிடம் விசுவாசம் இருந்தால் விசுவாசத்திற்கேற்ற வாழ்வை நாம் வாழவேண்டும். தேர்ந்து கொள்ளப்பட்ட இறைமக்கள் இப்போது உறைந்துபோன இறைமக்களாகிவிட்டனர் என்று பேராயர் புல்டன்ன் ஒருமுறை சொன்னார். இன்று உறைந்து போன கிறிஸ்தவ வாழ்வு, சாரமற்ற உப்பாகிவிட்ட வாழ்வு, அரைகுறை கிறிஸ்தவ வாழ்வு, நற்செய்தி விழுமியங்களுக்கு சான்று பகராத வாழ்வு, நற்செய்தியை அறிவிக்கத் தயங்கும் வாழ்வு, உலகியல் மனப்பாங்கில் உழலும் வாழ்வு, துரிதகதியில் எதிலும் செயலாற்றி, இறையுண்மைகளை மறந்துவிடும் வாழ்வு ஆகியவையே நம்மிடம் உள்ளன.  இந்நிலையில் புதிய வாழ்வை நம்மில் தூண்டியெழுப்பிட தூய ஆவியானவர் நமக்கு உறுதிதருகின்றார். எனவே குறைகூறும், பொறாமைப்படும், பிறர் பெயரைக் கெடுக்கும் செயல்கள், சுயநலச்செயல்களை விட்டுவிடுவோம். எனவே நாம் அமைதி, சாந்தம் அன்புச் செயல்களுக்கு எற்ப வாழ தூயஆவியாரிடம் வேண்டுவோம். நாம் தூய ஆவியாரின் அருள்பெற்று மக்கள் பணியில் மறுமலர்ச்சி மலர வாழ்வோம்.

No comments:

Chistmas wish

Chistmas wish
I wish you a happy christmas

About Me

My photo
I am Mr Frank. I am a UN staff