Friday, April 26, 2013

அன்பு எப்படிப்பட்டது, ஏன் ஏற்பட்டது என்ற ஆராய்ச்சியில் இறங்காமல் அந்த அன்பு அனுபவிப்போம்.

28.04.2013 
 ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்
இன்று நாம் பிறரின் பால் செலுத்தும் அன்பு வழியாக இறைவன் மாட்சிமை அடையவேண்டும் என்றும், அன்பிலிருந்தே பிறர் நம்மை இயேசுவின் சீடர்களாக அடையாளம் காண்பர் என்றும் கூறும் இறைமொழி கேட்கின்றோம். 'நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்" என்று இயேசு புதிய கட்டளை பற்றிப் பேசுகிறார். அனைத்து எதிர்நிலைச் சூழல்களையும் தடைகளையும் வாய்ப்புக்களாக மாற்றுவதே வரையறையற்ற அன்பின் சிறப்பாகும்.

'நீங்கள் ஒருவர் மற்றவருக்குச் செலுத்தும் அன்பிலிருந்து நீங்கள் என் சீடர்கள் என்பதை எல்லாரும் அறிந்து கொள்வர்" இறைமக்களை வழிநடத்தும் குருக்களிடம் முன் உதாரணமான சகோதரத்துவமும் அன்பும் விளங்க வேண்டும் என்று இரண்டாம் வத்திக்கான் சங்கம் கூறுகின்றது. ஒரு குருவானவர் வரையறையற்ற அன்பின் மகுடமாக வாழ்ந்து காட்டவோண்டும் என்று கூறப்படுகின்றது. அப்போதுதான்  இறைமக்கள் அதனை பின்பற்ற உதவியாக இருக்கும். எனவே இறைமக்கள் பிறரின் பால் செலுத்தும் அன்பு வழியாக இறைவன் மாட்சிமை அடைமுடியும் என்றும், அந்த அன்பிலிருந்தே பிறர் நம்மை இயேசுவின் சீடர்களாக அடையாளம் காண்பர் என்றும் கூறிவிடலாம். திருத்தந்தை இரண்டாம் ஜோன் பவுல் ஒருமுறை கூறும்போது. 'குருவினுடைய வாழ்வு இறைமக்களுக்காக அவருடைய திருச்சபைக்கும் ஆற்றும் சாட்சியத்துடன் கூடிய அன்புப் பணிநிறைந்ததாக இருக்கவேண்டும் " என்றார்.

எனவே இங்கு மக்களை அன்பு செய்து பணிபுரிந்து இயேசுவின் சீடர்களாக இனம் காணப்பட்ட குருக்களில் ஒரு சிலரது அன்பு வாழ்வை பற்றி இங்கு குறிப்பிடுவது சாலம் பொருத்தம்: இயேசு சபை அருள்தந்தை பேத்ரோ அருப்பே 1945ம் ஆண்டு ஆகஸ்ட் 6ம் தேதி முதல் அணுகுண்டு ஹிரோசிமாவை அழித்தபோது ஜப்பானில் பணி புரிந்தவர். 80000க்கும் அதிகமான உயிர்களைப் பலிகொண்ட அந்த கொடுமையின்போது, அந்த நகரின் புறநகர் பகுதியில் இருந்த இயேசு சபை நவதுறவியர் இல்லம் பெரும் சேதமின்றி தப்பித்தது. அந்த இல்லம் ஒரு மருத்துவ மனையாக மாறியது. அங்கிருந்த சிறு கோவிலும் காயப்பட்டவர்களால் நிரம்பி வழிந்தது. அணுகுண்டு வீசப்பட்டதற்கு அடுத்த நாள் அந்த இல்லத்தின் கோவிலில் அருள்தந்தை; பேத்ரோ அருப்பே திருப்பலி நிறைவேற்றினார். அந்தத் திருப்பலி நேரத்தில் அவர்அடைந்த வேதனை அனுபவத்தை இவ்விதம் கூறியுள்ளார்:'நான் திருப்பலி நிகழ்த்தியபோது, அங்கு காயப்பட்டுக் கிடந்தவர்களைப் பார்த்து 'ஆண்டவர் உங்களோடு இருப்பாராக" என்று சொல்ல கைகளை விரித்தேன். ஆனால், அங்கு நான் கண்ட காட்சி என்னை உறைய வைத்தது. எனக்கு முன் காயப்பட்டுக் கிடந்த அந்த மனுக்குலத்தை, அவர்களை அந்த நிலைக்கு உள்ளாக்கிய மனிதர்களின் அழிவுச் சிந்தனைகளை எண்ணியபோது, என் விரிந்த கைகள் அப்படியே நின்றுவிட்டன. அங்கு படுத்திருந்தவர்கள் என்னைப் பார்த்த அந்தப் பார்வை என் உள்ளத்தைத் துளைத்தது. எங்கிருந்தாகிலும் தங்களுக்கு ஆறுதல் வருமா, முக்கியமாக, இந்த பலிபீடத்திலிருந்து ஆறுதல் வருமா என்ற ஏக்கத்தை அவர்கள் பார்வையில் நான் படித்தேன். என் வாழ்வில் மறக்க முடியாத திருப்பலி அது" என்றார் அவர். அருள்தந்தை பேத்ரோ அருப்பே மருத்துவம் படித்தவர் என்பதால், ஹிரோசிமா தாக்குதலுக்குப்பின், நவதுறவியர் இல்லத்தில் மட்டுமல்ல, வெளியிலும் சென்று தன்னால் இயன்ற அளவு மருத்துவ உதவிகள் செய்துவந்தார்.
17ம் நூற்றாண்டில் கனடாவில் மனித உடலை, உடலின் பாகங்களை உண்ணும் பழக்கம் கொண்ட பழங்குடியினரிடையே பணி புரிந்து அவர்கள் மத்தியில் மறைசாட்சியாக உயிர்துறந்த பல இயேசு சபை குருக்களில் Isaac Jogues ஒருவர். இவர் தொடர்ந்து அன்பு செய்து பணிபுரிந்த அந்த மக்களால் சித்ரவதைகள் செய்யப்பட்டார். இந்தச் சித்ரவதைகளால் தன் கை விரல்களையெல்லாம் அவர் இழந்திருந்தார்.
இருபதாம் நூற்றாண்டில் சீனாவில் 21 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்ட பேராயர் Dominic Tang காற்று வசதி சிறிதும் இல்லாத ஒரு சிறு அறையில் ஐந்து ஆண்டுகள் தனித்து அடைக்கப்பட்டிருந்தார். பேராயர் தன் சிறு அறையை விட்டு ஒரு சில மணி நேரங்கள் வெளியே வர உத்தரவு கிடைத்தபோது சிறை அதிகாரிகள் அவரிடம், 'இந்த சில மணி நேரங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்கள்?" என்று கேட்டபோது, பேராயர் Dominic Tang அன்புக்கு இலக்கணம் சொல்லிதந்த இயேசுவின் பெயரால் திருப்பலி நிகழ்த்த விரும்புகிறேன் என கூறினாராம்.
வியட்நாமில் சிறைபடுத்தப்பட்டு கடின உழைப்பு முகாமில் ஒன்பது ஆண்டுகள் வைக்கப்பட்டிருந்தார் இயேசு சபை குரு Joseph Nguyen-Cong Doan. அந்த முகாமில், அவரோடு சிறைப்படுத்தப்பட்டிருந்த மற்றொரு குரு சிறை அதிகாரிகளுக்குத் தெரியாமல் கொண்டு வந்திருந்த அப்பம் இரசம் இவைகளை இயேசு சபை குருவுடன் பகிர்ந்து கொண்டார். இரவில் மற்றவர்கள் படுத்து உறங்கியபின், துழளநிh தன் நெஞ்சை ஒரு பீடமாக பயன்படுத்தி, தன் சிறை உடுப்புக்களை தன் பூசை உடுப்புக்களாகக் கருதி அவர் ஆனந்த கண்ணீர் பொங்க அன்பே உருவான இயேசுவின் பெயரால் ஆற்றிய அந்தத் திருப்பளிகளைப்ப் பற்றி பின்னர் மற்றவர்களுக்குச் சொன்னார்.

இயேசுவின் அன்பு இப்படி பல கோடி மக்களின் மனதில் நம்பிக்கையை, வீரத்தை, தியாகத்தை, விதைத்துள்ளது. ஒருவரது அன்பு வெளிப்படும்போது, அதை அனுபவிப்பதே மேல். அதற்குப் பதிலாக, அந்த அன்பு எப்படிப்பட்டது, ஏன் ஏற்பட்டது என்ற ஆராய்ச்சிகளில் இறங்கினால், அங்கு அன்பு காணாமல் போகும் வாய்ப்புக்கள் அதிகம் உண்டு. அன்பு மனித குலத்தின் உயிர்நாடி. மனித குலம் இன்னும் உயிர் வாழ்வதே அன்புடையவர்கள் இருப்பதால் தான். இந்த அன்பைக் கொடுக்கவும், பெறவும் விரும்புவதே மனித இயல்பு. இந்தப் பரிமாற்றம் நம்மிலும் நிகழவேண்டும். இயேசுவின் அன்பு கரை காணாதது. அனைவரையும் அரவணைக்கக் கூடியது. அவருடைய நிறை அன்புக்கு நாம் சாட்சிகளாக வாழவேண்டுமென்றே விரும்புகிறார். இயேசுவின் அன்பு வாழ்வு நம்மில் பிரதிபலிக்கிறதா? தீர்மானங்களுடன் எம்மை திரும்பிப்பார்த்து முன்நகர்வோம்


No comments:

Chistmas wish

Chistmas wish
I wish you a happy christmas

About Me

My photo
I am Mr Frank. I am a UN staff