Wednesday, February 6, 2013

கள்ளம் கபடமற்றவர்களாக கடவுளைத் தேடுவோம்

10.02.2013
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்

முன்பு ஒரு முறை கேட்ட கதை ஒன்று ஞாபகத்திற்கு வருகின்றது: 90 வயதைத் தாண்டிய பேதுரு உடல் நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார். அந்த சமயத்தில் லொத்தரில் அவருக்கு 10 கோடி  ரூபாய் பரிசு விழுந்ததாகச் செய்தி வருகிறது. அந்தச் செய்தியை அவரிடம் எப்படி சொல்வதென்று குடும்பத்தினர் திகைத்தனர். அந்தச் செய்தியைக் கேட்டு பேதுரு மயங்கி அவருக்கு ஏதாவது ஆகிவிடக் கூடாதுதென்ற கரிசனை. பக்குவமாக பேதுருவிற்கு அந்தச் செய்தியைச் சொல்ல வயதில் முதிர்ந்த தமது பங்கு தந்தையை கேட்டுக் கொண்டனர். பங்கு தந்தை,குடும்பத்தினர் சுற்றி இருக்க பேதுருவிடம்; பல விடயங்களைப் பேசுகிறார். லொத்தர் ரிக்கற்றுக்களைப் பற்றி, அதில் பலருக்குக் கிடைக்கும் அதிஸ்டங்களைப் பற்றி இருவரும் கதைக்கத் தொடங்கினர். குதைத்துக்கொண்டிருக்கும் போது பங்கு தந்தை பேதுருவிடம், சரி, உங்களுக்கு திடீரென லொத்தரில் 10 கோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள்? என்று கேட்கிறார். படுத்திருந்த பேதுரு சுற்றிலும் பார்க்கிறார். பிறகு, ஒரு புன்சிரிப்புடன் பேதுரு சும்மா சொல்லவேண்டாம் பாதர் என்று சொல்லிவிட்டு மற்ற விடயங்களைப் கதைக்க ஆரம்பிக்கிறார். பங்கு தந்தை விடுவதாகவில்லை. ஒரு பேச்சுக்கு அப்படி நினைப்போமே. உங்களுக்கு லொத்தரில் பத்து கோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள்?" என்று மீண்டும் கேட்கிறார். கொஞ்ச நேர அமைதிக்கு பின், பேதுரு அதில் ஒரு 5 கோடியை பங்கு ஆலயத்திற்கு எழுதி வைத்துவிடுவேன் என்றார். இதைக் கேட்கும் பங்கு தந்தை மயங்கி விழுகிறார். மயக்கம் தெளிந்தெழுந்ததும் பாதரிடம் ஏன் பாதர் விழுந்தநீர்கள் என்று பேதுரு கேட்டார். இன்று எமது ஆலயங்கள் எல்லாம் அழிக்கப்பட்டு புனரமைப்பு தேவையில் இருக்கின்றனவே அதற்கு உதவ யாரும் வருவதில்லை. உமது தாராள தன்மையை எண்ணியிபோது அதிர்ச்சியில் விழுந்துவிட்டேன் என்றார் பாதர். 

பரிசுகள், அதுவும் எதிபாராத விதமாக கிடைக்கும் பரிசுகள் எதையும் செய்து விடும் என்று கூறுவர்  இயேசுவின் சீடர்களுக்கு, அவர்கள் சீடர்களாவதற்கு முன்னால், இப்படி பரிசு மழையில் மூழ்கிய ஒரு அனுபவம் ஏற்பட்டது. மீன்கள் வலைகள் கிழியுமளவிற்கு கிடைப்பதை கண்கின்றார் சீமோன் போதுரு.  அவர் மயங்கி விழவில்லை நான் பாவி இயேசுவே என இயேசுவின் கால்களில் விழுகிறார். சீமோன் பேதுருவின் வாழ்வில் நிகழ்ந்த முக்கியமான ஒரு நிகழ்வாக நாம் இதை பார்கின்றோம். இது அவரது வாழ்வையே புரட்டிப் போட்ட ஒரு நிகழ்வு என்றும் கூறலாம்.

ஆழத்தில் வலைகளைப் போடுங்கள் என்று இயேசு அவரிடம் சொன்னார். மீன்பிடிக்கும் தொழிலில் பல ஆண்டுகள் ஊறி, அந்தத் தொழிலில் தேர்ந்தவர்கள் அவர்கள். அவர்களது திறமையையும், அனுபவத்தையும் கேலி செய்வது போல் இருந்தது இயேசுவின் கட்டளை. சீமோன் நினைத்திருந்தால், இயேசுவிடம் இப்படி(கற்பனை) சொல்லியிருக்கலாம். ஐயா, மக்கள் கூட்டம் அதிகமாய் இருந்ததால், படகில் அமர்ந்து போதிக்க நினைத்தீர்கள். நீங்கள் சொன்னதைக் கேட்டோம். நீர் வந்தது மக்களுக்குப் போதிக்கவே. அதை முடித்து விட்டீர். இந்தப் பகல் நேரத்தில் நாங்கள் வலை வீசினால், எம்பகுதியில் எங்களை பார்ப்பவர்கள் பைத்தியக்காரர்கள் என்பார்கள். மீன் பிடிப்பு பற்றி நன்கு அறிந்துகொண்டபின் எங்களை அதிகாரம் செய்யலாம். இப்போதைக்கு, நீர் உம் வழியே போகலாம்."

மாறாக, சீமோன் பேதுரு, இயேசுவின் கால்களில் விழுந்து, ஆண்டவரே, நான் பாவி, நீர் என்னை விட்டுப் போய்விடும் என்றார். கள்ளம் கபடமற்ற சீமோன் பேதுரு தன் மனதில் பட்டதைச் சொல்கிறார். நல்ல பாடங்கள் இந்தக் கூற்றில் புதைந்துள்ளன. உண்மையை எந்த வித பூச்சும் இல்லாமல் சொல்வது. ஒருவரது பின்னணியைப் பார்ப்பதிலும், அவர் சொல்வதற்கு மதிப்பு கொடுப்பது. மீன்பிடிப்பைக் கண்டதும், சீமோன் பேதுருவின் செயல் நமக்கு ஆச்சரியத்தைத் தருகிறது. உணர்ச்சிகள் மேலிடும்போது, வார்த்தைகள் வருவது அபூர்வம். சீமோன் பேதுருவழற்கும் அப்படி ஓர் உணர்வு மேலோங்கியதால் நான் பாவி, நீர் என்னை விட்டுப் போய்விடும் என்று பேசியிருக்கலாம். உண்மையை உரைத்தவருக்கு உன்னத பரிசு உலகத் திருச்சபையின் முதல் திருத்தந்தை ஆக்கப்படுகின்றார்.

ஆழத்தில் வலைகளைப் போடுங்கள் என்று இயேசு அவரிடம் சொன்னபோது, சீமோன் பேதுருவின் பதில் மொழி: ஐயா, இரவு முழுவதும் நாங்கள் பாடுபட்டு உழைத்தும் ஒன்றும் கிடைக்கவில்லை என்பது.  நம்முடைய வாழ்க்கையில் இத்தகைய அனுபவங்கள் நிச்சயம் உண்டு. பாடுபட்டுப் படித்தும் தேர்வில் தோல்வி அடைவோர், பாடுபட்டு வேலை தேடியும் வேலை இன்றித் தவிப்போர், பாடுபட்டுப் பணம் சேர்த்தும், அதை ஒரே நாளில் இழந்துவிடுவோர், பாடுபட்டு ஏற்பாடுகள் செய்து பிள்ளைகளுக்குத் திருமணம் செய்துவைத்தும், அவர்கள் மகிழ்ச்சியின்றி வாழ்வதைக் கண்டு கலங்கும் பெற்றோர், பல மருத்துவர்களிடம் சென்றும் நலம் பெறாதோர் எனப் பல தரப்பட்ட மக்கள் சீமோன் பேதுருவின் வரிசையில் நிற்கின்றனர்.

அவர்கள் என்ன செய்யவேண்டும் என்பதைப் சீமோன்  பேதுருவின் பதில் மொழியிலுள்ள இரண்டாம் பகுதி எடுத்துச் சொல்கிறது: ஆயினும், உமது சொற்படியே வலைகளைப் போடுகிறேன். அதாவது, இறையாற்றலில், இறைவனின் பேரன்பில், இறைவார்த்தையில் நம்பிக்கை கொண்டு செயல்படுவது. அவ்வாறு, சொல்லி, செயல்பட்ட உடனே பேதுருவின் வாழ்வில் அந்த அற்புதம் நிகழ்ந்தது. வலைகள் கிழியும் அளவுக்கு மீன்பாடு கிடைத்தது. மனிதர் விரும்புவதாலோ, உழைப்பதாலோ எதுவும் ஆவதில்லை. கடவுள் இரக்கம் காட்டுவதாலேயே எல்லாம் ஆகிறது என்னும் இறைமொழியை நினைவில் கொள்வோம். அத்துடன் விசுவாசம் என்பது கடவுள் நம்பிக்கை உள்ளவர்களின் அர்ப்பணம் மட்டுமல்ல, மாறாக கடவுளைத் தேடும் அனைவர் உள்ளத்திலும் விதைக்கப்பட்டுள்ள ஓர் ஆவல் என்று அறிந்து வாழ்வோம்.

No comments:

Chistmas wish

Chistmas wish
I wish you a happy christmas

About Me

My photo
I am Mr Frank. I am a UN staff