Friday, September 19, 2014

கடவுளின்; பார்வையில் நீதியை, மனிதர்களைக் காணக் கற்றுக்கொள்வோம்.

21.09.2014'"
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர் 

இன்று இயேசு ஒரு உவமை கூறுகின்றார்: நிலக்கிழார் ஒருவர் தம் வேலையாள்களை வேலைக்கு அமர்த்த விடியற்காலையில் வெளியே சென்றார். அவர் நாளொன்றுக்கு ஒரு தெனாரியம் கூலி என வேலையாள்களுடன் ஒத்துக்கொண்டு அவர்களைத் தம் திராட்சைத் தோட்டத்துக்கு அனுப்பினார். ஏறக்குறைய காலை ஒன்பது மணிக்கு அவர் வெளியே சென்றபொழுது சந்தை வெளியில் வேறு சிலர் வேலையின்றி நிற்பதைக் கண்டார். அவர்களிடம், நீங்களும் என் திராட்சைத் தோட்டத்துக்குப் போங்கள்; நேர்மையான கூலியை உங்களுக்குக் கொடுப்பேன் என்றார். அவர்களும் சென்றார்கள். மீண்டும் ஏறக்குறைய பன்னிரண்டு மணிக்கும் பிற்பகல் மூன்று மணிக்கும் வெளியே சென்று அப்படியே செய்தார். ஏறக்குறைய ஐந்து மணிக்கும் வெளியே சென்று வேறு சிலர் நிற்பதைக் கண்டார். அவர்களிடம், நாள் முழுவதும் வேலை செய்யாமல் ஏன் இங்கே நின்றுகொண்டிருக்கிறீர்கள்? என்று கேட்டார். அவர்கள் அவரைப் பார்த்து, எங்களை எவரும் வேலைக்கு அமர்த்தவில்லை என்றார்கள். அவர் அவர்களிடம், நீங்களும் என் திராட்சைத் தோட்டத்துக்குப் போங்கள் என்றார். பின்பு அனைவருக்கும் சமமாக சம்பளம் கொடுக்கின்றார். அந்நிலக்கிழாரின் செயலுக்கு எதிராக முணுமுணுத்தவர்களை பார்த்து எனக்குரியதை நான் என் விருப்பப்படி கொடுக்கக் கூடாதா? அல்லது நான் நல்லவனாய் இருப்பதால் உங்களுக்கு பொறாமையா? என கேட்கின்றார். 

இன்று இயேசு கூறும் உவமைக்கதையில் வரும் வேலையாட்கள், வேலைக்காகக் காத்துக் கொண்டிருந்தவர்கள்,  சோம்பேறிகள் அல்ல. காலையிலிருந்து அவர்கள் யாராவது தங்களை வேலைக்கு அழைத்துச்செல்வார்களா? என்று காத்திருக்கிறார்கள். இவர்கள் அன்றாடக்கூலிகள். சமுதாயத்தின் அடிவிளிம்பில் இருக்கக்கூடிய மக்கள். அடிமைகளைவிட இவர்களின் நிலைமை மிக மோசமாக இருந்தது. . உழைத்தால் தான் உண்ண முடியும் என்ற நிலைமை. கடுமையாக நாள் முழுவதும் உழைத்தாலும், அரைவயிற்று உணவு தான் அவர்களுக்கு கிடைக்கும். ஒருநாள் வேலையில்லை என்றாலும், அவர்களின் குடும்பமே பட்டினி கிடக்க வேண்டியிருக்கும். இப்படிப்பட்ட தொழிலாளர்களைத்தான் இன்று நாம் பார்க்கிறோம். 

நீதி என்பது என்ன? என்று இன்றைய உவமைக்கதையின் பின்னணியில் பார்த்தால். ஒருவருக்குரியதை அவருக்கு வழங்குவதுதான் நீதி. இந்த நீதியும் மனிதரின் பார்வையில் ஒன்றாகவும், இறைவனின் பார்வையில் வேறொன்றாகவும் இருப்பதை இன்றைய உவமைக்கதை  சுட்டிக்காட்டுகிறது. அத்துடன், மனித நீதியை விட்டு விலகி, இறைநீதியின் பக்கம் நம் நடைபோடவும் அறைகூவல் விடுக்கிறது. மனித நீதியின்படி முதலில் பணியில் சேர்ந்து, அதிக நேரம் உழைத்தவர்களுக்கு அதிக ஊதியம் வழங்கப்பட்டிருக்க வேண்டும். தாமதமாக வந்து, குறைந்த நேரம் உழைத்தவர்கள் குறைவாகப் வழங்கப்பட்டிருக்க வேண்டும். இதுதான் சரி. அப்போதுதான் அனைவரும் நேர்மையாக உழைப்பர்.
ஆனால், இறைவனின் பார்வை அப்படி இல்லை. அது பரிவின் பார்வையாக, பாசத்தின் பார்வையாக இருக்கிறது. ஏதோ ஒரு காரணத்தால், சில வேளைகளில் மனித, சமூக காரணங்களால் எல்லா மனிதர்களுக்கும் சமமான வாய்ப்புகளும், திறமைகளும் அமைந்துவிடுவதில்லை. ஒரு சிலர் பிறரைவிட பிற்பட்டவர்களாக, அல்லது பிற்படுத்தப்பட்டவர்களாக இருந்துவிடுகின்றனர். அவர்கள்மீது சிறப்பான ஒரு பரிவைப் பொழிந்து அவர்களுக்கும் அதிக ஆற்றலும், வாய்ப்புகளும் கிடைத்தவர்களுக்கு இணையான ஊதியத்தை நிலக்கிழார் வழங்குகிறார். இதுதான் இறை நீதி. கடவுளின் நீதி மனித நீதியைப் போன்றதல்ல. மனிதர் வழங்கும் நீதி வரையறைக்கு உட்பட்டது. ஆனால் கடவுள் வழங்கும் நீதி தாராள அன்பின் அடிப்படையில் அமைந்தது. கடவுளின் அன்புதான் அவருடைய நீதிக்கு அடிப்படை. எனவே, கடவுள் அநீதியாகச் செயல்படுகிறார் என்பதைவிட, தாராள உள்ளத்தோடு நடந்துகொள்கிறார் என்பதே உண்மை. கடவுளின் நீதி மனித கணிப்புகளுக்கு அப்பாற்பட்டது என நாம் உணர வேண்டும். கடவுள் மக்களை வேறுபடுத்திப் பார்ப்பதில்லை;. அதே நேரத்தில் அவருடைய கொடை எப்போதுமே தாராளமாக நமக்கு வழங்கப்படுகிறது. எனவே, கடவுளின் தாராளத்தைக் கண்டு நாம் பொறாமைப்படுதல் பொருத்தமாகாது. கடவுளின் நீதி இரக்கமும் பரிவும் தோய்ந்த அன்பு இதயத்திலிருந்து பிறக்கும் ஒன்று. கடவுளின் இரக்கத்திற்கு எல்லை கிடையாது. கடவுளின் இரக்கத்திற்கு நாம் மனித கணிப்புப்படி வேலி கட்ட முடியாது. முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை என்னும் தத்துவம் கடவுளைப் பொறுத்தமட்டில் உண்மை ஆகாது. முதலில் வந்தாலும் சரி, கடைசியில் வந்தாலும் சரி எல்லாருக்கும் சம உரிமையே என்பதே கடவுளின் நீதி. கடவுள் தாராள உள்ளத்தோடு பிறருக்கு நன்மை செய்கிறாரே என நினைத்து நாம் பொறாமைப்படுவதும் முறையாகாது மாறாக, எல்லா மக்களையும் சமமாக நடத்துகின்ற நம் விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பதுபோல நாமும் நிறைவுள்ளவர்களாய் இருக்க வேண்டும். நமது மனித பார்வையில் நீதியைப் பாராமல், இறைவனின் பார்வையில் நீதியை, மனிதர்களைக் காணக் கற்றுக்கொள்வோம்

Friday, September 12, 2014

தண்டனைத் தீர்ப்புக்கு உள்ளாகாமல் மீட்பின் கொடையைப் பெறுவோம்

14.09.2014 '" 
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர் 

இன்று நம் திருச்சபை திருச்சிலுவை மகிமைப் பெருவிழாவைக் கொண்டாடுகிறது. சிலுவையின் முன் அடையாளமாக பழைய ஏற்பாட்டில் நாம் காண்பது வெண்கலத்தால் ஆன பாம்பின் சிலை. அதைப் பற்றியே இன்றைய முதல் வாசகம் பேசுகிறது. சிலை வழிபாடு என்னும் பாவத்தின் காரணமாக கொள்ளிவாய்ப் பாம்புகளை கடவுள் அனுப்பி, பலரும் கடியுண்டு இறந்தபோது, மோசே அவர்களுக்காகப் பரிந்து பேசி மன்றாடியபோது, கடவுளே மோசேயிடம்;, கொள்ளிவாய்ப் பாம்பொன்றைச் செய்து அதை ஒரு கம்பத்தில் பொருத்து.  கடிக்கப்பட்டோரில் இதைப் பார்க்கிற ஒவ்வொருவனும் பிழைப்பான் என்று கூறுகிறார். அவ்வாறே மோசேயும் வெண்கலப் பாம்பு ஒன்றைச் செய்து வைக்க, அதைப் பார்த்த அனைவரும் பிழைத்துக்கொண்ட செய்தியை நாம் எண்ணிக்கை நூலில் வாசிக்கிறோம். இந்த நிகழ்ச்சியையே ஆண்டவர் இயேசுவும் மேற்கோள் காட்டி, அந்த வெண்கலப் பாம்பை தனது சிலுவைச் சாவின் முன் அடையாளமாக யோவான் நற்செய்தியில் எடுத்துக்காட்டுகிறார். பாம்பால் இறந்தவர்களைப் பாம்பினாலே உயிர்பெற்றெழச் செய்த இறைவன், மரத்தால் வந்த சாபத்தை ஒரு மரத்தாலேயே நீக்கினார். இன்று அந்தச் சிலுவை மரத்தை வணங்குகிறோம். அந்தச் சிலுவைக்கு மகிமையைத் தந்த இயேசுவைப் போற்றுவோம். அந்த மகிமைக்குக் காரணமான அவரது கீழ்ப்படிதலைப் பின்பற்றுவோம்.

சிலுவை என்பது அவமானத்தின் சின்னமாக, தோல்வியின் அடையாளமாக இருந்தது. இயேசு அதனை வெற்றியின் சின்னமாக, மாட்சியின் அடையாளமாக மாற்றினார். அந்த சிலுவை குறித்துக்காட்டுகிற இறையியல் செய்திகளையும் நம் வாழ்வில் நாம் கடைப்பிடிக்க வேண்டும். சிலுவை இயேசுவின் கீழ்ப்படிதலைக் குறிக்கிறது. சாவை ஏற்குமளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவை ஏற்கும் அளவுக்கு இயேசு கீழ்ப்படிந்தார் என்று பவுலடியார் கூறுகிறார். நாமும் இறைவனுக்கு, திருச்சபைக்கு, அதிகாரிகளுக்கு, பெரியவர்களுக்குக் கீழ்ப்படிய வேண்டும்.

சிலுவை துன்பங்களை மனமுவந்து ஏற்றுக்கொள்வதையும் குறிக்கிறது. இயேசு அந்தச் சிலுவைத் துன்பத்தை அகற்ற மன்றாடினார். ஆனால், அதுதான் இறைவனின் விருப்பம் என்று உணர்ந்ததும் மனம் விரும்பி ஏற்றுக்கொண்டார். ஆகவே, இறைவன் அவருக்கு வெற்றியும், மாட்சியும் தந்தார். நமது வாழ்வில் தவிர்க்க முடியாமல் வரும் சிக்கல்கள், நோய்கள், துன்பங்கள், அவமானங்கள் இவற்றை ஏற்றே தீர வேண்டும் என்னும் நிலை வரும்போது இயேசுவைப் போல நாமும் மனம் உவந்து அவைகளை ஏற்போம். அப்போது தந்தை இறைவன் இயேசுவுக்குச் செய்ததுபோல, நமக்கும் அவரது வெற்றியிலும். மாட்சியிலும் பங்கு தருவார். பாவங்களால் சிறைப்பட்ட உலகை மீட்பது எப்படி என்று கேள்வியும், பரிதவிப்பும் எழுந்தபோது, இறைவன் அதற்கு விடை பகர்ந்தார். மனிதரின் மீட்பு மனிதரிடமிருந்தே வர வேண்டும் என்று தீர்மானித்தார். தன் மகனை மனிதரில் ஒருவராக அனுப்பி வைத்தார். இந்த எண்ணத்தை வெளிப்படுத்தும் ஒரு பைபிள் பகுதி இன்று நமக்குத்தரப்படும் நற்செய்தியில் உள்ளது. 'தம் ஒரே மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின் மேல் அன்பு கூர்ந்தார்." 

கடவுள் இந்த உலகத்தை அழிப்பதற்கோ, அதற்குத் தண்டனைத் தீர்ப்பு அளிக்கவோ தம் மகனை அனுப்பவில்லை. மாறாக, அவர் வழியாக இவ்வுலகிற்கு மீட்பு வழங்கவே அவர் இயேசுவை அனுப்பினார். இங்கே கடவுளின் எல்லையற்ற அன்பு துலங்குவதை நாம் தெளிவாகக் காண்கின்றோம். மனிதர்கள் அவரை விட்டு அகன்ற போதிலும் அவருடைய அன்பு ஒருநாளும் குறைவுபடவில்லை. மாறாக, தம்மைவிட்டுப் பிரிந்தவர்களையும் அவர் தாராள உள்ளத்தோடு அன்புசெய்கிறார். அவர்கள் தம் தவற்றினை உணர்ந்து மீண்டும் தம்மிடம் திரும்புவார்கள் என்னும் நம்பிக்கை நம் அன்புக் கடவுளுக்கு என்றுமே உண்டு. இயேசு வழியாக விடுதலை அனுபவத்தைப் பெற்ற நாம் கடவுளையும் கடவுள் அன்புசெய்கின்ற உலகத்தையும் அதில் வாழ்கின்ற மனிதர்களையும் நன்மனத்தோடு ஏற்று அன்புசெய்திட அழைக்கப்படுகிறோம். இயேசுவே நமக்கு அன்பின் வழியைக் கற்றுத் தந்துள்ளார். குறிப்பாக, தன்னலம் மறந்து, பிறர் நலம் நாடுகின்ற பண்பை அவரிடமிருந்து நாம் கற்றுக்கொள்கிறோம். உலகம் கேவலமாகக் கருதிய சிலுவை இயேசுவின் மரணத்தால் அன்பின் அடையாளமாக மாறிற்றி நமக்கு வாழ்வளிக்கும் ஊற்றாக விளங்குகிறது. சிலுவையில் உயர்த்தப்பட்ட இயேசு உண்மையிலேயே கடவுளுக்கு நிகராக உயர்த்தப்பட்டார். நிலைவாழ்வு பெற விரும்புவோர் சிலுவையில் உயர்த்தப்பட்ட இயேசுவை உற்று நோக்க வேண்டும். அவரையே தங்கள் வாழ்க்கை நெறியாகக் கொள்ள வேண்டும். அப்போது தண்டனைத் தீர்ப்புக்கு உள்ளாகாமல் மீட்பின் கொடையைப் பெற்று மகிழ்வார்கள்.

Friday, September 5, 2014

நம் நடுவில் இயேசு இருக்க நாம் உழைப்போம்

07.09.2014 '"  
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர் 
புகழ்பெற்ற கொக்கோ கோலா நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாகி டீசயைn பு.னுலளழn என்பவர் குடும்ப உறவுகள் பற்றி எழுதிய சிறு கட்டுரையின் வரிகளை இங்கு இன்று குறிப்பிடுவது நன்று: 'பல பந்துகளை ஒரே நேரத்தில் தூக்கிப் போட்டுப் பிடிக்கும் வித்தையைப் போல, வாழ்க்கையைக் கற்பனை செய்து பாருங்கள். உங்கள் கையில் ஐந்து பந்துகள் உள்ளன. அவை நீங்கள் செய்யும் ஷதொழில், உங்கள் குடும்பம், உடல் நலம், நண்பர்கள் மற்றும் உங்கள் மனம்|. இந்த ஐந்து பந்துகளில் உங்கள் தொழில் என்பது மட்டும் ஒரு இரப்பர் பந்து. அது கைதவறி கீழே விழுந்தாலும், மறுபடி எகிறி குதித்து உங்கள் கைகளுக்கு வந்துவிடும். ஆனால், மற்ற நான்கு பந்துகள் - அதாவது குடும்பம், உடல்நலம், நண்பர்கள், மனம் ஆகிய நான்கும் கண்ணாடியால் ஆனவை. அவை கீழே விழுந்தால், சிதறி விடும். அவற்றை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வருவது இயலாத காரியம்." வாழ்வின் மிக முக்கிய அம்சங்களில் ஒன்றான நமது குடும்ப உறவுகள் கண்ணாடி பந்துகள். தவறினால் சிதறிவிடும். குடும்ப உறவுகளைப் பற்றிய சில எளிய, தெளிவான பாடங்களை நாம் புரிந்து கொள்ள தவறுகிறோம், அல்லது, புரிந்து கொண்டாலும் பின்பற்றத் தவறுகிறோம் என்பதைச் ஆழமாக அலசிப்பார்க்க இன்றைய ஞாயிறு சிந்தனை நம்மை அழைக்கிறது.

இன்று தொலைக்காட்சிகளில் மெகாத் தொடர்களின் குடும்பத்திற்குள் நிகழும் பிரச்சனைகள் ஒவ்வொரு நாளும் காட்டப்படுகின்றன. பிரச்சனைகள் ஒன்றா, இரண்டா? அவை ஒன்றன்பின் ஒன்றாக அடுக்கிக்கொண்டே போகலாம்  இந்த பிரச்சனைகளுக்குள் நசுக்கப்பட்டு அந்த கதாபாத்திரங்கள் படும் வேதனைகள் ஒவ்வொரு நாளும் வெகு நேரம் காட்டப்படுகின்றன.இந்த பிரச்சினைகள் இன்று எம் குடும்பத்தில் நிஜமாகின்றன. இதற்கு இத்தொடர்களில் வரும் நிகழ்ச்சிகள் பின்புலத்தில் இந்தக் குடும்பங்களைப் பாதிக்கின்றன என்று ஆணித்தரமாக கூறலாம் 

குடும்பப் பிரச்சனைகளைப் பற்றி நம் தொலைக்காட்சித் தொடர்கள் சொல்வதைப் பரவலாக ஏற்றுக்கொள்ளும் நம்மிடம், பிரச்சனைகளைத் தீர்க்கும் மாற்று வழியொன்றை இன்றைய நற்செய்தியில் இயேசு கூறுகிறார். இந்த நற்செய்தியைக் கேட்கும்போது நம் மனங்களில் நம்பிக்கை பிறக்கின்றதா? அல்லது, இயேசு கூறும் வார்த்தைகள் நடைமுறை வாழ்வுக்கு ஒத்து வராது என்று நமது மனம் சொல்கிறதா? உண்மையாகவே நம் உள்ளத்தில் என்னதான் நிகழ்கிறதென்று அலசிப் தேடுவோம். இன்றைய நற்செய்தியின் துவக்கமே ஒரு சாட்டையடிபோல, நம்மை விழித்தெழச் செய்கிறது. 'உங்கள் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் உங்களுக்கு எதிராகப் பாவம் செய்தால..." என்பவை இயேசு கூறும் ஆரம்ப வார்த்தைகள். இந்த முதல் வரியில் இயேசு கூறியிருப்பதே ஒரு சவால் ஆகும் 'நீ உன் சகோதரன் அல்லது சகோதரிக்கு எதிராகப் பாவம் செய்திருந்தால்…" என்று இயேசு ஆரம்பித்திருந்தால், அது இயல்பாக இருந்திருக்கும். ஆனால், அவர் அப்படி ஆரம்பிக்கவில்லை. 'உங்கள் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் உங்களுக்கு எதிராகப் பாவம் செய்தால்…" என்று ஆரம்பத்திலேயே நம் சிந்தனைகளைப் புரட்டிப் போடுகிறார். 

பிரச்சனையைத் தீர்க்க, குற்றத்தைக் களைய நாம் மேற்கொள்ளும் முதல் முயற்சிகள் எவ்விதம் இருக்கவேண்டும் என்பதை இயேசு இன்றைய நற்செய்தியில் தொடர்ந்து தெளிவாக்குகிறார். அவர் கூறும் முதல் படி என்ன? நீங்களும் அவரும் தனித்திருக்கும்போது அவரது குற்றத்தை எடுத்துக்காட்டுங்கள். அவர் உங்களுக்குச் செவிசாய்த்தால் நல்லது உங்கள் உறவு தொடரும்.
ஆனால் நாம் தவறிழைத்தவரைத் தனியே அழைத்து, மனம் விட்டுப் பேசுவதற்குப் பதில் பல மாறுபட்ட, சிக்கலான வழிகளைக் கடைபிடிக்கிறோம். பிரச்சனைகளைப் பெரிதாக்குகிறோம். நாம் பார்க்கும் மெகாத் தொடர்கள் கூறும் வழி இது. பிரச்சனை பெரிதானால்தான் மெகாத் தொடர்கள் பல வாரங்கள் ஓடும். குற்றவாளி ஒழிய வேண்டும், பழிக்குப் பழி தீர்க்கப்பட வேண்டும். அப்போதுதான் நாடகம் விறுவிறுப்பாக இருக்கும். நடைமுறை வாழ்வில் நம் குடும்பங்களில் விறுவிறுப்பு வேண்டுமா, நமது குடும்பங்களிலும் இதுபோல் நிகழ வேண்டுமா? பிரச்சனை பெரிதாக வேண்டுமா அல்லது, விடைகள், தீர்வுகள் வேண்டுமா என்று நாம் தீர்மானிக்க வேண்டும்.

இயேசு கூறும் இலக்கணப்படி அமையும் குடும்பங்களில் குற்றம் புரிந்தவர் திருந்தி வரவேண்டும் என்று காத்திருக்காமல், முதல் முயற்சிகளை நாம் மேற்கொண்டால், அங்கு பிரச்சனைகள் தீர வழியுண்டு. உறவுகள் வலுப்பட வழியுண்டு. அவர்கள் கூடிவரும் நேரத்தில் இறைவனின் பிரசன்னம் அங்கு நிறைந்து பொங்கவும் வழியுண்டு. இந்த உறுதியைத் தான் இயேசு இன்றைய நற்செய்தியின் இறுதி வார்த்தைகளாக சொல்லியிருக்கிறார்: 'இரண்டு அல்லது மூன்று பேர் என் பெயரின் பொருட்டு எங்கே ஒன்றாகக் கூடியிருக்கின்றார்களோ அங்கே அவர்களிடையே நான் இருக்கிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். " 

Sunday, August 17, 2014

மாயையான மதிப்புகளைத் தேடி அலையாமல் இயேசுவின்; மதிப்புள்ள வாழ்வை தேடுவோம்"

31.08.2014 '"  
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர் 

இன்று எமக்குதரப்படும் பைபிள் பகுதியை மத்தேயு நற்செய்தியாளர் கி.பி.80 - கி.பி.90ம் ஆண்டு காலப்பகுதியில் எழுதியிருக்க வேண்டும். அது கிறிஸ்தவர்கள் இயேசுவை மீட்பராக ஏற்றுக்கொண்டதால், துன்பத்தை அனுபவித்த காலம். துன்பப்படுகிற கிறிஸ்தவர்களுக்கு ஆறுதலையும், நம்பிக்கையையும் மத்தேயு தருகிறார். மத்தேயுவின் சிந்தனை, எண்ண ஓட்டங்கள் அனைத்துமே நடக்கிற நிகழ்வுகளின் அடிப்படையிலும், காலச்சூழ்நிலையின் அடிப்படையிலும் அமைகிறது என்பது அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய உண்மை. இயேசுவின் வார்த்தை எல்லாக்காலச் சூழ்நிலைகளுக்கும், எல்லா நிகழ்வுகளுக்கும் பொருந்துவதாகவும், அர்த்தம் தருவதாகவும் இருக்கிறது என்பது இதனுடைய வெளிப்பாடு.

இயேசுவைப் பின்பற்றுவதற்கு இரண்டு பண்புகளைக் கொண்டிருக்க வேண்டும் என்ற அழைப்பையும் விடுக்கிறார். முதல் பண்பு: தன்னலம் துறத்தல். வாழ்வு என்பது கடவுள் கொடுத்திருக்கிற மிகப்பெரிய கொடை. இந்த வாழ்வை தனக்காகவோ, தன்னுடைய உறவுகளுக்காகவோ வாழ்வது சாதாரண வாழ்க்கை. ஆனால், இயேசுவைப் பின்பற்றுகிற ஒவ்வொருவரும் மற்றவர்களுக்காக வாழ்வதற்கு அழைக்கப்படுகிறோம். 
இரண்டாவது பண்பு: சிலுவையைத்தூக்குதல், அதாவது துன்பத்தை ஏற்றுக்கொள்ளுதல். மற்றவர்களுக்காக வாழும்போது நமக்கு கிடைப்பது துன்பங்களும், துயரங்களும்தான். ஆனால், துன்பங்களைத் தாங்குவதற்கு பயப்படாமல், அதைத்தாங்குவதற்கு இறைவன் பலம் தருவார் என்ற நம்பிக்கை நமக்கு இருக்க வேண்டும். வாழ்வு என்பது இன்பமும், துன்பமும் நிறைந்தது. இரண்டுமே நிரந்தரமானது அல்ல. வாழ்வில் துன்பம் வருகிறபோது சோர்வடைவதும், மகிழ்ச்சி வரும்போது துள்ளிக்குதிப்பதும் மனித இயல்பு. சோகங்கள் வருகிறபோது சோர்ந்து போகாமல், கடவுள் மட்டில் நம்பிக்கை கொள்வோம். அவர் நமக்கு பலம் தருவார், அருள் பொழிவார்.

மானிட வாழ்வின் மிகப் பெரிய மறைபொருள்களில் ஒன்று இழப்பு. யாரும் எதையும் இழக்க விரும்புவதில்லை. ஆனால், சிலவற்றை சில நேரங்களில் இழக்கும்போது, அந்த இழப்புக்கு கைம்மாறாக நாம் பெறும் இன்பம் இழந்ததைவிட பன்மடங்கு மதிப்பு மிக்கது, மேலானது என்பதை அனுபவத்தின் மூலமாகத்தான் அறிய முடியும்.ஞானிகள், அறிஞர்கள், மாமனிதர்கள் இந்த மறைபொருளை, வாழ்வின் இரகசியத்தை அறிந்திருக்கின்றனர். எனவே, இழப்பதற்கு அஞ்சாமல் இழக்க முன் வந்தனர், சில வேளைகளில் தம் உயிரையும்கூட இழந்தனர் இயேசு இன்றைய நற்செய்தி வாசகத்தில் இந்த ஞானத்தை நமக்குக் கற்றுத் தருகிறார். தம் உயிரைக் காத்துக்கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்துவிடுவர். மாறாக, என் பொருட்டு தம்மையே அழித்துக்கொள்கிற எவரும் வாழ்வடைவர் என்கிறார். இயேசுவின் பொருட்டுக் கடந்த பல நூற்றாண்டுகளாக ஆயிரக்கணக்கானவர்கள் தம் உயிரை இழக்க முன்வந்துள்ளனர். நிலைவாழ்வைப் பெற்றுக்கொண்டுள்ளனர். நாம் உயிரை இழக்க வேண்டாம். சிறிய இன்பங்களை, சிறிய ஆதாயங்களை, நேரத்தை, ஓய்வை, பொழுதுபோக்கை இழக்க முன்வருவோமா.

இயேசு மக்களுக்கு ஒரு புதுவாழ்வு வாக்களித்தார். தாயின் உதரத்தில் கருவாக உருவாகி, உலகில் தோன்றி நம் சாவோடு அழிந்துபோகின்ற உயிரைவிடவும் மேலானது இயேசு வாக்களித்த வாழ்வு. இந்த வாழ்வுக்கு முடிவே இராது. உயிரைத் தியாகம் செய்தாவது நாம் வாழ்வை அடைய வேண்டும் என்பது இயேசுவின் போதனை. சில சமயங்களில் உலகத்தையும்  ஆன்மாவையும் ஒன்றுக்கொன்று எதிரியாகக் காண்பித்து, ஆன்மாவைக் காத்துக்கொள்ள நாம் உலகத்தைக் கைவிட வேண்டும் என்று சிலர் வாதாடுவர். இது இயேசுவின் போதனைக்கு மாறானது. இயேசு வாக்களிக்கின்ற புதிய வாழ்வு ஆன்மாவைச் சார்ந்தது மட்டுமல்ல, அந்த வாழ்வு முழு மனிதரை உள்ளடக்குகின்ற வாழ்வு. இயேசு வாக்களித்த இறையாட்சியையும் முழுவாழ்வையும் பற்றிக்கொள்ள அனைத்தையுமே விட்டுக்கொடுக்க நாம் தயாராக இருக்க வேண்டும்.
இயேசு நாம் வாழ்வு பெற வேண்டும் என்பதற்காக இறந்தார். ஆனால் அவருடைய இறப்பின் வழியாக நாம் முடிவில்லா வாழ்வைப் பெற உரிமை பெறுகின்றோம். இத்தகைய உயரிய கொடையைப் பெற்றுள்ள நாம் அக்கொடையின் மதிப்பைச் சரியாக உணராததால் அதற்குப் பதிலாக மாயையான மதிப்புகளைத் தேடி அலைகின்றோம். இத்தேடல் பயனற்றதாகத்தான் முடியும். மாறாக, நம் சொந்த விருப்பு வெறுப்புகளின்படி நடக்காமல் இயேசுவின் போதனைக்கு ஏற்ப நாம் நடந்தால் நாம் விட்டுக்கொடுப்பதற்குப் பலகோடி மடங்கு மேலான மதிப்புள்ள 'வாழ்வை " பெற்றுக்கொள்வோம்.

எம் சொந்த அனுபவத்தில் இயேசுவை உணர்வேம்

24.08.2014 '"  
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர் 

'நான் யார் என்று மக்கள் சொல்கிறார்கள்?"'நான் யார் என்று நீங்கள் சொல்கிறீர்கள்?" என்று இயேசு இரு கேள்விகள் கேட்கும் பகுதி இன்று எமக்கு பைபிளில் தரப்படுகிறது.

நம்முடைய் வாழ்க்கையில் நம்மை நாமே தேடிய அனுபவங்கள் நமக்கு உண்டு. நம்மை நாமே தேடும் நேரங்களில் பல கேள்விகள் நம் உள்ளத்தில் எழுந்திருக்கும். அவற்றில் மிக முக்கியமாக நம் மனதில் எழுந்த ஒரு கேள்வி: 'நான் யார்?" என்ற கேள்வி. இயேசுவுக்கும் இந்தக் கேள்வி எழுந்தது.

'நான் யார் என்று மக்கள் சொல்கிறார்கள்?" இயேசு இக்கேள்வியை அவர் காலத்து மக்களுக்கு மட்டுமல்ல. இன்றும் கேட்கிறார். மக்கள் இயேசுவைப்பற்றி என்ன சொல்கிறார்கள்? என்னென்னவோ சொல்லிவிட்டார்கள். இன்னும் சொல்லி வருகிறார்கள். நல்லதும், பொல்லாததும். உண்மையும், பொய்யும். விசுவாசச் சத்தியங்களும், கற்பனைக் கதைகளும். அளவுக்கதிகமாகவே சொல்லிவிட்டார்கள். ஆனால், இவ்வளவு சொல்லியும் இயேசுவைப்பற்றி முழுமையாக நம் மனித குலம் சொல்லிவிட்டதா என்று கேட்டால், இல்லை என்றுதான் சொல்லவேண்டும். இயேசு இவர்தான், இப்படிப்பட்டவர்தான் என்று சொல்வது மிகக் கடினம். இலக்கணங்களை, வரையறைகளை, வேலிகளை உடைப்பது இயேசுவின் இலக்கணம். இயேசுவின் அழகு.

'நான் யார் என்று நீங்கள் சொல்கிறீர்கள்?" எம்மைப் பார்த்து இயேசு கேட்கிறார். 'நான் யார் என்று மக்கள் சொல்கிறார்கள்?" என்ற கேள்விக்கு நாம் படித்தவைகளை, மனப்பாடம் செய்தவற்றை கொண்டு பதில்களைச் சொல்லிவிடலாம்.

ஆனால், இந்த இரண்டாவது கேள்விக்கு அப்படி எளிதாகப் பதில் சொல்லிவிட முடியாது.நாம் படித்தவற்றைவிட, பட்டுணர்ந்தவையே இக்கேள்விக்குப் பதிலாக வேண்டும். நாம் மனப்பாடம் செய்தவற்றைவிட, மனதார நம்புகிறவையே இக்கேள்விக்கான பதிலைத் தரமுடியும். இக்கேள்வி எமக்கு சங்கடங்களை உருவாக்கலாம். 'என்ன இது. என்ன சொல்வது என புரியவில்லை என் உணர்ந்தால், இது ஒரு நல்ல ஆரம்பம். இயேசுவின் இந்தக் கேள்வி வெறும் கேள்வி அல்ல. ஓர் அழைப்பு. 'என்னைப்பற்றிப் புரிந்து கொள் என்னைப் பற்றிக்கொள். என்னைப் பின்பற்றி வா" என்று பலவழிகளில் இயேசு விடுக்கும் அழைப்பு.

இயேசுவை பற்றி வெறும் புத்தக அறிவு போதாது. அப்படி நாம் தெரிந்துகொள்ளும் கடவுளைக் கோவிலில் வைத்துப் பூட்டிவிடுவோம். விவிலியத்தில் வைத்து மூடிவிடுவோம். அனால்,இயேசுவை அனுபவத்தில் சந்தித்தால், வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்படும். பல சவால்களைச் சந்திக்க வேண்டும். நம் மனதைக் கவர்ந்த ஒருவரை, கருத்தளவில் புரிந்துகொள்வதோ, அவரைப் புகழ்வதோ எளிது. அவரைப் போல வாழ்வதோ, நம்பிக்கையோடு அவரைத் தொடர்வதோ எளிதல்ல.

இயேசுவைப்பற்றி தெரிந்துகொள்ள, அவரைக் கண்டு பிரமித்துப் போக, அவரை இரசிக்க கேள்வி அறிவு, புத்தக அறிவு போதும். அந்த பிரமிப்பில் நாம் இருக்கும்போது, இயேசு நம்மிடம் "நான் யார் என்று மக்கள் சொல்கிறார்கள்?" என்று கேட்டால், நம் பதில்கள் ஆர்வமாய் ஒலிக்கும். ஆனால், அந்த பிரமிப்பு, இரசிப்பு இவற்றோடு மட்டும் நாம் இயேசுவை உலகறிய பறைசாற்றக் கிளம்பினால், புனித பவுல் சொல்வது போல், 'ஒலிக்கும் வெண்கலமும், ஓசையிடும் தாளமும் போலாவோம்." எனவே, இயேசு நம்மை அடுத்த நிலைக்கு வருவதற்கு கொடுக்கும் அழைப்பு தான் "நான் யார் என்று நீங்கள் சொல்கிறீர்கள்?" என்ற கேள்வியாக எழுகிறது. இது சாதாரண அழைப்பு அல்ல. அவரை நம்பி அவரோடு நடக்க, அவரைப்போல் நடக்க, இரவானாலும், புயலானாலும் துணிந்து நடக்க அவர் தரும் ஓர் அழைப்பு. வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்த கொடுக்கப்படும் இந்த அழைப்பிற்கு, மனதின் ஆழத்திலிருந்து; நம் பதில்களை வரவழைப்போம்.

இயேசுவின் இந்த அழைப்பைப் புரிந்தும் புரியாமலும், சீமோன்: ' நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்" என்று பதிலளித்தார். இயேசுவுடன் தட்டுத் தடுமாறி நடைபயின்ற பேதுரு, இயேசுவைத் தம் சொந்த அனுபவத்தில் சந்தித்தபின், இறுதி மூச்சு வரை உறுதியாய் இருந்ததுபோல், நாமும், சொந்த அனுபவத்தில் இயேசுவை உணர்ந்து, அவருக்காக எதையும் இழக்கும் துணிவு பெறவோம்

Friday, August 15, 2014

பிரிவுகள் பிளவுகள் வேற்றுமைகள் இல்லாத புதிய சமுதாயத்தை சமயங்கள் உருவாக்க உழைப்போம்

17.08.2014 '"   
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர் 

இன்று எமக்குத்தரப்படும் பைபிள் பகுதியில் தாய்மையின் மேன்மை வெளிக்கொணரப்படுகின்றது எனலாம். ஒரு தாயின் விடாப்பிடியான வேண்டுதலையும், அதன் இறுதி வெற்றியையும் இன்றைய பைபிள் பகுதி எடுத்துக்காட்டுகின்றது. கனானியப் பெண்ணின் நம்பிக்கையை இயேசு நன்றாகவே சோதித்துப் பார்த்துவிட்டார் என்றும் கூறலம். பிள்ளைகளுக்குரிய உணவை நாய்க்குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல என்ற கடுமையான மறுமொழிகூட அந்தத் தாயின் நம்பிக்கையை, எதைச் செய்தாவது தன் மகளைக் குணப்படுத்திவிட வேண்டும் என்ற அன்பின் பிடிவாதத்தை, அன்பின் தளராத் தன்மையைத் தோற்கடிக்க முடியவில்லை. உரிமையாளரின் மேசையிலிருந்து விழும் சிறு துண்டுகளை நாய்க் குட்டிகள் தின்னுமே என்று கூர்மதியுடனும், அன்புடனும் பதில் சொல்லி இயேசுவின் பாராட்டையும், மகளுக்கு நலத்தையும் பெற்றுக்கொண்டார்.
'பிள்ளைகளின் உணவை நாய்களுக்குப் போடுவது முறையல்ல முதலில் பிள்ளைகள் வயிறார உண்ணட்டும்" என்கிறார் இயேசு. ஆனால் அதற்கு அந்தப் பெண் அளித்த மறு மொழியோ இயேசுவையே ஒரு குலுக்கு குலுக்கிவிட்டது. ஆம் ஐயா ஆனாலும் தங்கள் உரிமையாளரின் மேசையிலிருந்து விழும் சிறு துண்டுகளை நாய்க்குட்டிகள் தின்னுமே என்றாள் அப்பெண் உடனே தம் எண்ணத்தை மாற்றி புற சமயத்தவரான அந்தப் பெண்ணுக்கு புதுமை செய்ய முன்வருகிறார்.

இயேசுவை அணுகிவந்த கனானியப் பெண்ணுக்கும் இயேசுவுக்கும் இடையே நிகழ்கின்ற உரையாடலில் பல சிறப்பு அம்சங்கள் உண்டு. அப்பெண் இயேசுவிடம் முழு நம்பிக்கை கொண்டிருந்தார். அவர் இயேசுவை மூன்று முறை 'ஐயா" என்றும், 'தாவீதின் மகனே" என்றும் அழைக்கிறார். இந்த இரு வார்த்தைகளும் இயேசுவை மெசியா என அப்பெண் கருதியதைக் காட்டுகிறது. ஆனால் இயேசுவோ பேசாது அதைதியாக நிற்கிறார். ஒரு சொல் கூட அப்பெண்ணுக்குப் பதில்மொழியாக அவர் கூறவில்லை. சீடர்கள் வேறே எரிச்சல் படுகிறார்கள். இயேசுவும் அப்பெண்ணை நாய்க்கு ஒப்பிட்டு இழிவுபடுத்துவது போல் தெரிகிறது. ஆனால் அப்பெண் மன உறுதியை இழக்கவில்லை. இயேசு மனது வைத்தால் போதும் தன் மகள் குணம்பெறுவாள் என அப்பெண் விடாப்பிடியாக நிற்கிறார். கடவுளின் வல்லமையில் நம்பிக்கை கொண்டு அவரை அணுகுவோர் ஏமாற்றமடையார் என்பதற்கு இப்பெண்ணின் ஆழ்ந்த நம்பிக்கை எமக்கு சிறந்த எடுத்துக்காட்டு.

தாழ்த்தப்பட்ட இனத்தில் பிறந்த ஒரு பெண் என்று பல தடைகளைத் துணிவுடன் தாண்டி தன் மகளைக் குணமாக்க இயேசுவை அணுகி வருகிறார். அவரை ஒரு பொருட்டாகக்கூட மதிக்காத இயேசுவிடம் மீண்டும் மீண்டும் அவர் வருகிறார். இஸ்ரயேல் மக்களை குழந்தைகளாகவும், பிற இனத்தவரை நாய்களாகவும் உருவகித்துப் பேசும் இயேசுவின் கடினமான சொற்களையும் மீறி, அப்பெண் இயேசுவை அணுகி வருகிறார். பைபிளில் நற்செய்தியில் நமக்குக் காட்டப்படும் இயேசு சில நேரங்களில் புரியாத புதிராக விளங்குகிறார். அவரைப் புரிந்து கொள்ள சிரமமாக உள்ள ஒரு நற்செய்திப் பகுதி இன்று நமக்குத் தரப்பட்டுள்ளது. இயேசுவின் கடினமான சொற்களையும் வேறொரு கண்ணோட்டத்துடன் புரிந்து கொண்டு அப்பெண் தன் விண்ணப்பத்தை மீண்டும் இயேசுவிடம் வைக்கிறார். தளராத, உறுதியான விசுவாசத்தின் ஓர் எடுத்துக்காட்டாக அந்தக் கானானியப் பெண் நமக்கு முன் உயர்த்தப்படுகிறார். 'அம்மா, உமது நம்பிக்கை பெரிது. நீர் விரும்பியவாறே உமக்கு நிகழட்டும்" என்று இயேசு அவரை அனுப்பி வைக்கிறார்.

இஸ்ரயேல் மக்களுக்கும் பிறருக்கும் உள்ள பிரிவுகளை, உயர்வு, தாழ்வுகளை இயேசு வலியுறுத்திக் கூறும்போது, அப்பிளவுகளை எல்லாம் தாண்டி, இறைவனின் கருணையும் உண்டு என்பதை ஆணித்தரமாக உணர்த்திய கானானியப் பெண்ணிடம் நாம் கற்றுக் கொள்ளக்கூடியப் பாடங்கள் பல உள்ளன. அந்தப் பெண் கொண்டிருந்த விசுவாசத்தின் ஆழத்தைக் கண்ட இயேசு, அவர் பிற இனத்தவர், அதுவும் பிற இனத்தைச் சார்ந்த ஒரு பெண் என்பதையெல்லாம் புறம்தள்ளி, அவரது விசுவாசத்தை கூட்டத்திற்கு முன் புகழ்துள்ளரே. அங்கும் நமக்குப் பாடங்கள் உள்ளன. 
பிளவுகள், பிரிவுகள், ஏற்றத் தாழ்வுகள் ஆகியவற்றால் நிறைந்து வெறுப்பை உமிழ்ந்து வரும் இன்றைய உலகில் வேறுபாடுகளைகளைந்து மனிதம் போற்ற மனிதம் வளர்க்க பாடுபடுதல் வேண்டும் அப்போது தான் பிரிவுகள் பிளவுகள் வேற்றுமைகள் இல்லாத புதிய சமுதாயத்தை காணமுடியும். அனைத்து மக்களினங்களும் அனைத்து சமயங்களும்  சேர்ந் மண்ணில் மனிதத்தை மலரச் செய்யும்  

Tuesday, August 5, 2014

நம் பிரச்சனைகளை நடுவிலும் கடவுளை சந்திக்க காலடி எடுத்துவைப்போம்

10.08.2014 ' "; 
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர் 

இன்று எமக்குத்தரப்படும் பைபிள் பகுதியில் இயேசு,கடல்மீது நடப்பதையும் இயேசுவின் சீடர் பேதுரு கடல்மீது நடக்கமுனைந்து  பெருங்காற்று வீசியதைக் கண்டு அஞ்சி மூழ்கிப்போவதையும் பேதுரு 'ஆண்டவரே, என்னைக் காப்பாற்றும்" என்று கத்திய துன்பவேளையில் இயேசு கையை நீட்டி தூக்கி பேதுருவை காப்பாற்றுவதையும் பார்க்கின்றோம்.

இந்தவேளையில் முன்பு ஒருமுறை வாசித்த ஓரு கதையை கட்டயம் கூறித்தான் ஆகவேண்டும்: 'மனிதன் ஒருவன் தன் வாழ்க்கைப் பயணத்தைத் திருப்பிப்பார்க்கிறான். பயணத்தில் கடவுள் தன்னோடு நடந்து வந்ததற்கு சான்றாக பாதை முழுவதும் இரு ஜோடி காலடித் தடங்கள் பதிந்திருந்தன. அவனுக்கு மிக்க மகிழ்ச்சி. ஒரு சில நேரங்களில் அந்தப் பாதையில் ஒரு ஜோடி காலடித்தடங்களே இருந்ததைப் பார்க்கிறான். நினைவுபடுத்தி பார்த்தபோது, அந்த நேரங்களெல்லாம் அவன் அதிகதுன்பத்தில், போராட்டத்தில் கஸ்டப்பட்ட நேரங்கள் என்று கண்டுபிடிக்கிறான். உடனே கடவுளிடம், ஷதுன்ப நேரத்தில் என்னைத் தனியே விட்டுவிட்டு போய்விட்டீர்களே. இது உங்களுக்கே நியாயமா?| என்று முறையிடுகிறான். கடவுள் பொறுமையாக அம்மனிதனுக்குப் பதில் சொன்னார்: ஷமகனே, பெரும் அலைகளாய் உன்வாழ்வில் துன்பங்கள் வந்தபோது ஒருஜோடி காலடித்தடங்களே இருப்பதைப் பார்த்துவிட்டு அவசரப்பட்டு முடிவேடுத்து விட்டாய். அந்த நேரத்தில் உன்னைவிட்டு நான் எங்கும் போகவில்லை. உன்னைத் தூக்கிக் கொண்டு நானே நடந்தேன்.| என்றார் கடவுள்."

தண்ணீரில் நடப்பதே ஒரு சாதனை. அதுவும் புயல், அலை எனச் சுற்றிலும் பயமுறுத்தும் சூழலில் இயேசு பேதுருவைத் தண்ணீரில் நடக்கச் சொன்னது பெரியதொரு சவால். இதில் நம் கவனத்தை ஈர்ப்பது  என்னவென்றால், இயேசு பேதுருவுக்கு அந்தச் சவாலை அளிக்கும் முன்பு காற்றையும், கடலையும் அமைதிப் படுத்தியிருக்கலாம். அப்படிச் செய்யவில்லை என்பதுதான். வாழ்க்கையில் வீசும் புயல்கள் எல்லாம் ஓய்ந்த பிறகுதான், பிரச்சனைகளை எல்லாம் தீர்ந்த பிறகுதான் இறைவனைச் சந்திக்க முதல் அடி எடுத்துவைப்போம் என்று நினைக்கும் நம் எண்ணங்கள் தவறு. மாறாக அந்தப் புயலின் நடுவில் இறைவன் காத்துக்கொண்டிருப்பார் துணிந்து சென்று அவரைச் சந்திக்கலாம் என்பதை இயேசு நமக்கு சொல்லித்தருகிறார் 

பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும். அலையும், புயலும் அலைகழித்துக் கொண்டுதான் இருக்கும். அஞ்சாதீர்கள், நம்பிக்கையுடன் துணிந்து வாருங்கள் துயர நேரங்களில் உன்னை தூக்கிச் சுமப்பேன். தம்மை நோக்கிக் கூக்குரல் எழுப்பிய பேதுருவை இயேசு 'உடனே தம் கையை நீட்டிப் தூக்கி காக்கின்றார். புயலின் நடுவில், கடலின் நடுவில் கடவுள் நம்மோடு இருக்கிறார். துயரநேரம் தூணாய்வந்து நம்மையும் கரம்நீட்டி தூக்கிகாப்பார்.

பேதுருவுக்கு இயேசுவைப்போல கடலின்மேல் நடக்கவேண்டும் என்று ஆசை வந்ததுபோல் இன்று எமக்கு கடவுளைப்போல் நாமும்; செய்யவேண்டும் என்று ஆசைப்படுகின்றோம். இயேசுவும் இதைத் தவறு என்று சொல்லவில்லை. பேதுருவை அனுமதித்ததுபோல் எமது ஆசைகளை அனுமதிக்கிறார். இன்று எமது ஆராய்ச்சிகள், புதியகண்டுபிடிப்புக்கள் எல்லாவற்றையும் இறைவன் அனுமதிக்கிறார். ஆனால் பேதுரு கடலில் மூழ்கியதுபோல் மூழ்கிவிடக்கூடுது என்று இறைவன் விரும்புகின்றார். பேதுருவுடைய நம்பிக்கையின்மை, பயம், ஆணவம், தெய்வீக வலுவின்மை, இவையே அவர் மூழ்குவதற்கு காரணமாயிருந்தன. ஆசைப்படுவதில் தவறில்லை. ஆண்டவனைப் போன்ற ஆற்றல் இருக்கிறதா? தெய்வீக ஆற்றலால், இறை உணர்வுகளால் நாம் நிரம்பியிருக்கின்றோமா? என்ற வினாவிற்கு விடைகாணவேண்டும். இயேசு இறைமகனாய் இருந்தும், அவர் தனியே இறைவனிடம் வேண்டுவதற்காக ஒருமலையின்மேல் ஏறினார். பொழுது சாய்ந்தபிறகும் அங்கே அவர் தனியே இருந்தார். தெய்வீக ஆற்றலால் தன்னை நிறைத்துக் கொண்டார். கடல் மீது நடக்குமுன் கடவுள் அருளால் நிரப்பிக்கொண்டார். தந்தையோடு தனியே உறவாடச் சென்ற இயேசு அங்கேயேத் தங்கி விடவில்லை. காற்றோடு, கடலோடு போராடிய தன் சீடர்களைத் தேடி வந்தார். அதுவும், கடல் மீது நடந்து வந்தார். இந்த தெய்வீக ஆற்றல் இல்லாத ஆசை, ஆபத்தில் முடிவது எதிர்பார்க்கக்கூடியதே. அருளால் ஆண்டவனோடு இணைத்து ஆசைப்படுவோம், கடலிலும் நடக்கலாம், மலையையும் தாண்டலாம். 

Tuesday, July 29, 2014

அன்பிலிருந்து தோன்றுகின்ற பரிவு எம்உள்ளத்திலிருந்தும் உருவாகட்டும்

03.08.2014 ' " 


ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர் 

இன்று தமக்குத்தரப்படும் பைபிள் பகுதியில் இயேசு, 'மக்களை அமரச் செய்யுங்கள்" என்றார். அப்பகுதி முழுவதும் புல்தரையாய் இருந்தது. அமர்ந்திருந்த ஆண்களின் எண்ணிக்கை ஏறக்குறைய ஐயாயிரம். இயேசு அப்பங்களை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி அமர்ந்திருந்தோருக்குக் கொடுத்தார். அவ்வாறே மீன்களையும் பகிர்ந்தளித்தார். அவர்களுக்கு வேண்டிய மட்டும் கிடைத்தது. அவர்கள் வயிறார உண்டபின், 'ஒன்றும் வீணாகாதபடி, எஞ்சிய துண்டுகளைச் சேர்த்து வையுங்கள்" என்று தம் சீடரிடம் கூறினார். மக்கள் உண்டபின் ஐந்து வாற்கோதுமை அப்பங்களிலிருந்து எஞ்சிய துண்டுகளைச் சேர்த்துச் சீடர்கள் பன்னிரண்டு கூடைகளில் நிரப்பினார்கள் தரப்படுகின்றது.

மக்களுக்கு இறையாட்சி பற்றிய நற்செய்தியை அறிவித்து, அவர்கள் மனம் மாற வேண்டும் என்று அழைப்பு விடுத்தார் இயேசு. கடவுளின் ஆட்சி மக்களிடையே வந்துகொண்டிருக்கிறது என்பதை அவர்கள் கண்கூடாகக் காணும் விதத்தில் இயேசு பல அதிசய செயல்களையும் புரிந்தார். அச்செயல்கள் வழியாக அவர் மக்களுக்கு நன்மை கொணர்ந்தார். இத்தகைய அரும் செயல்களில் ஒன்று 'ஐயாயிரம் பேருக்கு உணவளித்தல் ஆகும்" மக்களுக்கு இயேசு உணவளித்த நிகழ்ச்சியை நாம் பல கோணங்களிலிருந்து பார்க்கலாம். இஸ்ரயேல் மக்களுக்குக் கடவுள் பாலைநிலத்தில் மன்னா என்னும் உணவை அளித்ததுபோல இங்கு இயேசு பசியுற்றோருக்கு உணவளித்துப் பாதுகாக்கின்றார். எலியா, எலிசா போன்ற இறைவாக்கினர் மக்களுக்கு உணவு வழங்கியதுபோல இங்கும் இயேசு செயல்படுகின்றார். மேலும் நற்கருணையை இயேசு ஏற்படுத்தியதும் இங்கே குறித்துக் காட்டப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் ஓர் ஆழ்ந்த உண்மையை நாம் காண்கிறோம். அதாவது, மக்களுக்கு உணவளிக்க இயேசு வழிவகுத்துவிட்டு, உணவைப் பகிர்ந்தளிக்கின்ற பணியைத் தம் சீடரிடமே விட்டுவிடுகின்றார். யார் இந்த சீடர்கள்;? இயேசுவின் காலத்தில் அவரைப் பின்சென்றவர்கள்தாம் அவர்கள். இன்று நாம் அவருடைய சீடர்களாக இருக்கின்றோம். இயேசுவின் குரலைக் கேட்டு, அவருடைய போதனையை ஏற்று, இயேசுவின் வழியில் நடந்துசெல்ல முன்வரும்போது நாம் இயேசுவின் சீடர்களாக மாறுகிறோம். நமக்கு இயேசு வழங்குகின்ற கட்டளை என்ன? 'நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்". இந்த உணவு எத்தகையது? பிறரது  புறப்பசியை ஆற்றுகின்ற உணவு மட்டுமா? இல்லை; ஆன்மப் பசியை ஆற்றவும் சீடர்கள் துணைசெய்ய வேண்டும். இயேசுவின் போதனையை ஏற்று, அதன்படி வாழ்ந்து, இயேசுவுக்குச் சான்றுபகரும்போது நம் வாழ்வு பிறருடைய பசியை ஆற்றுகின்ற உணவாக மாறும். அப்போது, இயேசு தம்மையே நமக்கு உணவாக அளித்ததுபோல நாமும் பிறருக்கு உணவாக நம்மையே கையளிப்போம். அதாவது, நம்முடைய சான்று வாழ்க்கையைக் கண்டு பிறர்; தம் ஆன்மப் பசி ஆறுகின்ற அனுபவம் பெறுவர். பிறருடைய நலனை முன்னேற்றுவதில் இயேசுவின் பணியை ஆற்றிடத் திருச்சபை முழுவதுமே அழைக்கப்பட்டுள்ளது. திருச்சபையின் ஒவ்வொரு உறுப்பினருக்கும், தம்மைப் பின்செல்கின்ற எல்லா மனிதருக்கும் இயேசு வழங்குகின்ற கட்டளை: 'நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்" இக்கட்டளையை ஏற்றுச் செயல்படுத்துவது நம் கடமை. நாம் தயாரா?

கடவுளின் ஆட்சி முழுமையாக மலரும் நாளில் எல்லா மக்களினத்தாருக்கும் கடவுள் பெருவிருந்து அளிப்பார் என்னும் உருவகம் விவிலியத்தில் பல இடங்களில் வருகிறது. தேவைக்கு அதிகமாகவே உணவு தந்து, அனைவரின் பசியையும் கடவுள் போக்குவார்; அவர்களுக்கு முடிவில்லாப் பேரின்பம் அளிப்பார். இவ்வாறு பழைய ஏற்பாட்டு நினைவும், நற்கருணைக் கொண்டாட்ட நினைவும், இறுதிக் கால விருந்தின் நினைவும் உள்ளடங்கிய விதத்தில் மத்தேயு 'அப்பங்கள் பலுகுதல்" நிகழ்ச்சியை வடிவமைக்கிறார். இந்த ஆழ்ந்த பொருள் கொண்ட நிகழ்ச்சியில் இயேசு உண்மையாகவே மக்களின் பசியைப் போக்குகிறார். அவ்வாறே இயேசுவின் சீடர்களும் செய்ய வேண்டும். அவர்களும் மக்களுக்கு உணவளிக்க வேண்டும். எஞ்சியிருக்கும் உணவை வீணடிக்காமல் மக்களின் தேவையை நிறைவேற்ற வேண்டும். மக்கள் பெருந்திரளாக வந்து தம்மை அணுகியதைக் கண்ட இயேசுஅவர்கள்மீது பரிவுகொண்டார். அன்பிலிருந்து தோன்றுகின்ற பரிவுதான் இயேசுவின் உள்ளத்திலிருந்து எழுந்த பாச உணர்வு, அவர் மக்களிடத்தில் கொண்டிருந்த அக்கறை. எம் திருமகனிடம் விளங்கிய பரிவு எங்கள் வாழ்விலும் துலங்கிட இயேசுவோடு பயணிப்போம். 

Monday, July 21, 2014

இயேசுவிற்காக தம்மடைய எல்லாவற்றையும் இழக்க நாம் தயாரா?.

27.07.2014'" 
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர் 
இன்று எமக்குத்தரப்படும் பைபிள் பகுதியில் இயேசு உவமைக்கதைகள்வழியாக பேசுகிறார். கடவுளைப் பற்றிய அறியமுடியாத மறை உண்மைகளை இயேசு நமக்கு உவமைகள் வழியாக தருகிறார். எமக்கு உவமைக்கதைகள் மிகவும் பிடிக்கும் என அவர் நன்கு தெரிந்திருக்கிறார்;;. 

கடவுளின் ஆட்சி இவ்வுலகில் வந்துகொண்டிருக்கிறது என்னும் நல்ல செய்தியை அறிவித்த இயேசு அதைப் பல உவமைகதைகள் வழியாக மக்களுக்கு அறிவித்தார். குறிப்பாக, தம்மோடு நெருங்கிப் பழகி தம் போதனைகளை அருகிலிருந்து கேட்டு, தாம் புரிந்த அரும் செயல்களை நேரடியாகக் கண்டு அறிந்த தம் சீடர்களுக்கு இயேசு தம் உவமைகதைகளின் உட்பொருளையும் விளக்கிக் கூறினார். ஆனால் உண்மையில் அவர்கள் இயேசுவைப் புரிந்துகொள்ள மிகவும் சிரமப்பட்டார்கள். பல தடவைகளில் இயேசுவின் போதனை அவர்கள் காதுகளில் விழுந்தும் அவர்கள் அப்போதனையை உள்வாங்கித் தம் நடத்தையில் காண்பிக்க தயங்கினார்கள்.

இயேசு நம்மைப் பார்த்து அதே கேள்வியைக் கேட்கின்றார்: இவற்றையெல்லாம் புரிந்துகொண்டீர்களா? இயேசு யார் எனவும் அவர் நமக்கு வழங்கும் செய்தி யாது எனவும் நாம் உண்மையிலேயே புரிந்துகொள்ள வேண்டும் என்றால் நாம் திறந்த மனத்தோடு அவரை அணுக வேண்டும். அவரிடத்தில் நாம் முழுமையாக நம்பிக்கை கொள்ள வேண்டும். நம் இதயத்தைத் திறந்துவைத்து, அங்கே நம்மோடு பேசுகின்ற கடவுளின் குரலுக்கு நாம் கவனமாகச் செவிமடுத்தால் இயேசுவின் போதனைகளை நாம் அறிவளவில் மட்டுமன்றி, நம் இதய ஆழத்திலும் உணர்ந்து புரிந்துகொள்வோம். அப்போது அப்புரிதல் நம் வாழ்வில் ஒரு மாற்றத்தையும் கொணரும். இவ்வாறு நாம் மனம் மாறிய மனிதராக வாழ வேண்டும் என்பதே இயேசுவின் போதனையின் நோக்கம். 

ஜப்பான் சிறையில் இருந்த ஒரு கொலையாளி உவமைகளைப் படித்ததால் மனம் திருந்தியதாக வரலாறு உண்டு. 2ஆவது உலகப்போரின் போது படகு விபத்தில் சிக்கிய மூவர் பற்றி படகு என்ற நூலில் நாம் அவர்கள் பட்ட சிரமத்தைப் படிக்கின்றோம். நம்பிக்கை இழந்து இறந்திருக்க வேண்டிய இவர்கள் விவிலியக் கதைகளை மெதுவாகச் சொல்லக் கேட்டு அவற்றை ஆய்ந்து தெளிந்து ஒரு சிறிய ரப்பர் படகில் 34 நாட்கள் தத்தளித்து 1000 மைல்களுக்கு அப்பால் கரை சேர்திருக்கின்றனர். என் அயலான் யார் என்ற கதை ஆல்பர்ட் ஸ்வைட்சர் போன்ற மிகச் சிறந்த மருத்துவர்களை ஆப்பிரிக்க மக்களுக்குச் சேவை செய்யத் தூண்டியது. எனவே உவமைக்கதைகள் நம்மை கவர்ந்து இழுக்கும் தன்மையுடையவை. மனத்தில் ஆழமாக சித்திரம் ஒன்றை வரைந்து வண்ணம் தீட்டிவிடுவதால் அவை போதனை செய்வதற்கு ஏற்ற ஊடகமாக உள்ளன.அந்த உவமைக்கதைகள் வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டுவதோடு வாழ்க்கையைப் பிரதிபலிக்கின்றன. அதன் விளைவாக அவை மிக ஆழமான தாக்கத்தை வாழ்வில் ஏற்படுத்துகின்றன. 

ஒருவர் நிலத்தில் புதைந்திருந்த புதையல் ஒன்றைக் கண்டுபிடிக்கிறார். அவர் அதை மூடி மறைத்துவிட்டு மகிழ்ச்சியுடன் போய்த் தமக்குள்ள யாவற்றையும் விற்று அந்த நிலத்தை வாங்கிக் கொள்கிறார். விண்ணரசு இப்புதையலுக்கு ஒப்பாகும். ஒருவருக்குக் கிடைக்கும் மிகப் பெரிய புதையல் கிறிஸ்துவின் உறவும் நட்புமாகும். நற்செய்தி விலை மதிப்பில்லாத புதையல். கிறிஸ்துவின் அன்பு நம்மை கிறிஸ்துவாகவே மாற்றும் சக்தி கொண்டது. தமது உடைமைகளையெல்லாம் விற்றுவிட்டு புதையல் மறைந்திருக்கும் நிலத்தை வாங்குவது போல, ஒருவர் கிறிஸ்துவுக்காக தம்மடைய எல்லாவற்றையும் இழக்க நேரிடலாம். அவ்வாறு செய்வது தியாகம் அல்ல. மாறாக இயேசுவைக் கண்ட மகிழ்ச்சியில் நாம் இழப்பது ஒரு சிறு துரும்பாகும். கிறிஸ்துவுக்கும் நம்மைச் சீடர்களாகப் பெறுவதில் மகிழ்ச்சிதான். கிறிஸ்துவுக்காக நான் அனைத்தையும் குப்பை எனக் கருதுகிறேன் என மகிழ்ச்சியோடு முழங்குவார் தூய பவுல். நான் வாழ்ந்தால் கிறிஸ்துவுக்காக , நான் இறப்பதும் எனக்கு ஆதாயமே. புதையலைப் பார்த்தவன் சென்றான், தனக்கு உள்ளவற்றையெல்லாம் விற்று வந்தான். நிலத்தை வாங்கித் தனதாக்கினான். இறை அரசு அவ்வாறு ஒப்புமையில்லாத விலை மதிப்பில்லாத புதையல் என்பதை இந்த உவமை காட்டுகிறது . 

உயர்ந்த குறிக்கோளுக்காக நாம் எதையும் தியாகம் செய்யத் தயங்கக் கூடாது. நாம் அனைவருமே வாழ்வில் புதையல் தேடும் ஒருவரைப் போல முழுமையான உறுதியோடு செயல்படவேண்டும். நாம் நாளும் உயர்ந்த மனிதர்களாக வாழ முயன்று வெற்றி பெற்றால் அது வாழ்க்கையில் நாம் பெறும் மாபெரும் வெற்றியாகும். 

Thursday, July 17, 2014

ஒரு சில மனிதர்களின் வாழ்வையாவது தொட முயற்சிப்போமா

20.07.2014'" 
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர் 

இன்று எமக்குத்தரப்படும் பைபிள் பகுதியில் இயேசு உவமைக்கதைகள்வழியாக பேசுகிறார். நமக்கு இயேசு மூன்று உவமைக்கதைகளை இன்று கூறுகின்றார்:  நல்ல விதைகளை-களைகள், கடுகு விதை,
புளிப்பு மா.   ஏன் இயேசு மக்கள் கூட்டத்துக்கு உவமைக் கதைகள் கூறிப் போதித்தார் என்ற கேள்வி நாமக்குள் எழும்.

'ஒரு நிமிட ஞானம்" என்ற நூலில் காணப்படும் எளியதொரு கதை நாம் கேட்கும் இந்த கேள்விக்கு விடைதர  உதவியாக இருக்கும்: ஒரு குரு எப்போதும் கதைகளையேக் கூறிவந்தார். அவர் கூறிய கதைகள் அவரது சீடர்களுக்குப் பிடித்திருந்தன. இருந்தாலும், இன்னும் ஆழமான உண்மைகளை தங்கள் குரு கற்றுத் தரவேண்டும் என்று சீடர்கள் கேட்க ஆரம்பித்தனர். அவர்கள் என்னதான் வற்புறுத்திக் கேட்டாலும், குரு சொன்ன ஒரே பதில் இதுதான்: 'மனிதர்களுக்கும், உண்மைக்கும் இடையே உள்ள சுருக்கமான வழி, கதையே. இதை நீங்கள் இன்னும் புரிந்து கொள்ளவில்லை."

உண்மைக்கும், எமக்கும், உண்மைக்கடவுளுக்கும், எமக்கும் இடையே உள்ள சுருக்கமான வழி கதைகளே என்று இயேசு உணர்ந்திருந்தார். அதுவரை, மதத் தலைவர்களால் இஸ்ரயேல் மக்களுக்கு அறிமுகமான கடவுள், கல்லில் பொறிக்கப்பட்ட கட்டளைகளில் உறைந்திருந்த கடவுள். அவர் மக்களிடமிருந்து வெகு தூரத்தில் வாழ்ந்துவந்தார். அத்தகையக் கடவுளை, கனிவான ஒரு தந்தையாக கதைவடிவில் இயேசு இஸ்ரயேல் மக்களுக்கு மீண்டும் அறிமுகம் செய்துவைத்தார். 

நாடு, மதம், மொழி,கலாசாரம், என்ற எல்லைகளைக் கடந்து செல்லும் மற்றோர் ஆற்றல் கதைகளுக்கு உண்டு. இத்துடன், மிக முக்கியமாக, காலத்தைக் கடந்து செல்லும் ஆற்றலும் கதைகளுக்கு உண்டு. கதைகளுக்கு உள்ள இவ்வகை ஆற்றலால்தான் இயேசு கூறிய உவமைகதைகள் அவர் வாழ்ந்த குறுகிய நிலப்பரப்பைத் தாண்டியும், 21 நூற்றாண்டுகளைத் தாண்டியம், நம் மத்தியில் இன்றும்வாழ்ந்து வருகின்றன. கதைகளைப்பற்றி, இந்த அறிமுகத்தை இன்று தருவதற்கு இரு காரணங்கள் உண்டு. 

முதலில் களைகள் என்ற உவமைக்கதையிலிருந்து இயேசு சொல்ல விரும்புகிற செய்தி நாம் வாழும் இந்த உலகில் களைகள் என்று சொல்லப்படும் அலகையின் ஆதிக்கம் எப்போதும் இருக்கும். அந்த சாத்தான் தனது வலிமையால், எம்மை  மயக்கி, குழப்பி தன்னுடைய ஆதிக்கத்தின் பிடியில் வைத்திருக்கும். நாம் அதைப்பார்த்து பதற்றப்படத் தேவையில்லை. ஆனால், தீய சக்திகள் இருக்கிறது என்ற உணர்வு நமக்கு வேண்டும். அதைத்தவிர்க்க வேண்டும் என்ற உறுதி நமக்கு வேண்டும். அந்த உணர்வே களைகளிடமிருந்து காப்பாற்றிவிடும். பொறுமை இழக்காது, உறுதியாக இருக்கிறபோது, தீய எண்ணங்களும், சிந்தனைகளும் நம்மை ஒன்றும் செய்துவிட முடியாது. நம்மை கறைபடுத்த முடியாது. தீய எண்ணங்களும், கெட்ட சிந்தனைகளும் நம்மை ஆக்கிரமிக்கிறபோது, பதற்றப்படாமல், தொடர்ந்து கடவுளைப் பற்றிக்கொண்டிருப்போம். நம்முடைய உறுதியும், நம்முடைய பிடியும் ஆண்டவரில் இருக்கிறவரை, தீயவன் நம்மை எதுவும் செய்துவிட முடியாது என்பதே ஆகும் 

அடுத்து கடுகு விதை என்ற உவமைக்கதையிலிருந்து இயேசு சொல்ல விரும்புகிற செய்தி உலகில் நாம் என்னால் எந்த மாற்றமும் செய்ய முடியாது என்ற சலிப்போ, விரக்தியோ கொள்ளக்கூடாது வாருங்கள், கடுகு விதை எவ்வளவு சிறியது. ஆனாலும், அது வளர்ந்து பெரிய மரமாகிறது. வானத்துப் பறவைகளுக்கு நிழல் கொடுக்கின்றது.

அடுத்து புளிப்பு மா என்ற உவமைக்கதையிலிருந்து இயேசு சொல்ல விரும்புகிற செய்தி  புளிப்பு மாவின் அளவு சிறியது. இருப்பினும், மாவு முழுவதையும் அது புளிப்பேற்றுகிறது. அதுபோலத்தான், ஒவ்வொரு சிறிய செயலும், ஒவ்வொரு சிறிய சொல்லும் அவை மௌனமாக இந்த உலகின்மீது தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதே ஆகும்

நாமும் ஒவ்வொரு சிறிய செயல், ஒரு புன்னகை, ஒரு பாராட்டு வார்த்தை, ஒரு அன்பான தொடுதல். போன்றவற்றின் வழியாக ஒரு சில மனிதர்களின் வாழ்வைத் தொட முயற்சிப்போம். இறுதியில், ஏராளமான மனிதர்கள் தொடப்படுவார்கள்.இந்த உலகம் இறைவன் வாழும் இனிய பூமியாக மாறும். 

அன்றாட வாழ்க்கையில் மக்கள் சந்திக்கின்ற நிகழ்ச்சிகளை இயேசு கதையாக எடுத்துச் சொல்லி, அவற்றின் வழியாக மக்களுக்கு இறையாட்சி பற்றிய உண்மைகளை உணர்த்தினார். எனவே, இயேசுவின் உவமைக்கதைகளை  கேட்ட எம்மை இயேசு சிந்திக்கத் தூண்டுகிறார். சிந்திப்போம் மாபெரும் மாற்றம் நம்மில் நிகழ்த்துவோம்.

Thursday, February 20, 2014

Tamil Christian Songs - Nilavum Thoongum Malarum Thoongum


Roman Catholic Tamil Songs - Nee Illaamal Naan Illai


பழி தீர்ப்பதில் ஓர் உயர்ந்தவகை பழிதீர்ப்பை செய்வோமா

23.02.2014
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்
23.02.2014'"  பழி தீர்ப்பதில் ஓர் உயர்ந்தவகை பழிதீர்ப்பை செய்வோமா
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்
இன்று நமக்குத்தரப்படும் பைபிள்பகுதியில் இயேசு 'கண்ணுக்குக் கண்", 'பல்லுக்குப் பல்"என்று கூறப் பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்; தீமை செய்பவரை எதிர்க்கவேண்டாம். மாறாக, உங்களை வலக் கன்னத்தில் அறைபவருக்கு மறுகன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள் என கூறுவதைக் நாம் பார்க்கின்றோம்.

'கண்ணுக்குக் கண்", 'பல்லுக்குப் பல்"என்ற இந்த பைபிள் வரிகளை சற்றுநோக்குவோமானால்: இயேசு வருவதற்கு முன்பட்டகாலத்திலும் இயேசு வாழ்ந்த காலத்திலும் மக்கள் குழுக்களாக வாழ்ந்தபோது, ஒரு குழுவில் உள்ளவர் வேறொரு குழுவில் உள்ளவருக்கு தீங்கு செய்தால், அது பெரும் சண்டையாகமாறி, இரண்டு குழுக்களுக்கும் பெரும் உயிர்ச்சேதமும், சொத்துசேதமும் ஏற்பட்டுவிடுகின்ற நிலமையே அன்று காணப்பட்டது.இதனைத்தவிர்ப்பதற்காக அவர்களுக்குஒரு புதிய ஒழுங்கைக் கொண்டு வருகிறார்கள் இயேசு. அதுதான் 'கண்ணுக்குக் கண்", 'பல்லுக்குப் பல்". இதன்படி ஒரு குழுவில்உள்ளவர் மற்றகுழுவில் உள்ளவரைத்தாக்கினால், பாதிக்கப்பட்டவருக்கும், அவரைத் தாக்கியவருக்கும் இடையே மட்டும் வழக்குத்தீர்க்கப்படும். ஒரு மனிதனுக்காக குழுக்கள் தங்களிடையே சண்டையில் ஈடுபடாது, பாதிக்கப்பட்டவருக்கு ஒருகண் போயிருந்தால், அவரைத்தாக்கியவருக்கும் அதே தண்டனைக்கொடுக்கப்படும்.இயேசுவாழ்ந்தபோது இதுதான் மக்களிடையே ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவும் இருந்தது.

இயேசு இப்போது மற்றொரு நிலைக்கு மக்களை அழைத்துச்செல்கிறார். இதன்படி, பகைவருக்கும் அன்பு என்ற பழைய ஏற்பாட்டின் கட்டளைக்கு புத்துயிர் கொடுக்கிறார். இது புதியது அல்ல மாறாக, புதுமையானது. கண்ணுக்குக்கண் என்று சொல்கிற பழைய ஏற்பாட்டில் ஏராளமான இடங்களில் பகைவருக்கு அன்பு என்கிற பார்வை மேலோங்கிக்காணப்படுகிறதையும் நாம் பார்கின்றோம். ஆனால் கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்பது இன்றைய உலகில் பலரது பழிதீர்க்கும் மந்திமாகக் காணப்படுகின்றது. இதற்கு நேர்மாறாக, பழியைத் தீர்க்கும் மந்திரங்களும் வழிகளும் உலகில் பல உண்டு. கண்களையும், மனதையும் திறந்து இவற்றைப் பார்க்க நாம் பழக வேண்டும் என்று இயேசு இன்றைய நற்செய்தியில் நமக்கு அழைப்பு விடுக்கிறார்.

இந்த வேளையில் படித்ததில் பிடித்து என் மனதில் ஆழமாய் பதிந்துவிட்ட ஒரு செய்தியை உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றோன்: 2005ம் ஆண்டு கார்;திகையில், யுhஅயன முhயவiடி-அகமட் கரிப் என்ற பாலஸ்தீனிய சிறுவன் ஒருவன் இஸ்ரயேல் வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டான். அவன் வைத்து விளையாடிக் கொண்டிருந்த பொம்மை துப்பாக்கியை உண்மைத் துப்பாக்கி என்று நினைத்த வீரர்கள் அகமட் கரிப் சுட்டனர். இஸ்ரயேல் வீரர்கள் தங்கள் தவறை உணர்ந்ததும், உடனே அச்சிறுவனை இஸ்ரயேல் பகுதியில் இருந்த ஒரு மருத்துவ மனைக்கு எடுத்துச் சென்றனர். அவனது பெற்றோரையும் அழைத்துச் சென்றனர். அங்கு அகமட் கரிப்பை காப்பாற்ற முடியவில்லை. அந்த நேரத்தில் அவனது பெற்றோர் ஓர் அற்புதம்; செய்தனர். கொல்லப்பட்ட தங்கள் மகன் - அகமட் கரிப்னின் உடல் உறுப்புகளைத் தானம் செய்யமுன் வந்தனர். அவர்கள் அந்த உறுப்பு தானத்தை இஸ்ரயேல் பகுதியில் இருந்த மருத்துவமனையிலேயே செய்தனர்.

இதனைக் கேள்விப்பட்ட பாலஸ்தீனியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பலர் கோபமடைந்தனர். ஆனால், கட்டாயம் வேறு பல பாலஸ்தீனியர்கள் மகிழ்ந்திருப்பர். தங்கள் மகனைக் கொன்றது இஸ்ரயேல் படைவீரர்கள் என்று தெரிந்தும், அந்தப் பகுதியிலேயே தங்கள் மகனின் உறுப்புக்களை அவர்கள் தானம் செய்தது பழி தீர்ப்பதில் ஓர் உயர்ந்த வகை. ஐளாஅயநட- யுடிடயா- இஸ்மாஎல்-அப்லா என்ற அந்த சிறுவனின் பெற்றோர் எளிய மக்கள். அந்தப் பெற்றோர் எடுத்த முடிவைப்பற்றி பத்திரிக்கையாளர்கள் கேட்டபோது, அவர்கள் சொன்னது: 'எங்கள் மகனின் உறுப்புக்கள் வழியே வாழப்போகும் இஸ்ரயேல் மக்கள் இனிமேலாகிலும் சமாதானத்தை விரும்புவார்கள் என்ற நம்பிக்கையில்தான் இந்த உறுப்புகளை நாங்கள் தானம் செய்தோம்."
 
கண்ணுக்குக் கண், என்று பழிவாங்கத் துடித்துக் கொண்டிருக்கும் இஸ்ரயேல், பாலஸ்தீன மக்களிடையேயும் நமக்கும், கண்ணற்றோருக்குக் கண் என்று சொல்லித்தரும் இஸ்மாஎல்-அப்லா அவர்களின் பாடம், பழியைத் தீர்க்கும் ஓர் அழகிய பாடம். ஆயிரத்தில், பல்லாயிரத்தில் ஒரு சிலர் இப்படி இருப்பதாலேயே இந்த உலகம் இன்னும் மனிதர்கள் வாழும் உலகமாக இருக்கிறது. அளந்து, கணக்குப் பார்த்து அன்பு காட்டும் பலரது நடுவில், பயனேதும் கருதாமல், கணக்குப் பார்க்காமல் வாழும் இஸ்மாஎல்-அப்லா போன்றவர்கள் தொடர்ந்து நம்மிடையே வாழவேண்டும் என்று வேண்டுவோம். கணக்குப் பார்த்து பழிதீர்க்கும் உலகை விட, பழி தீர்ப்பதில் ஓர் உயர்ந்த வகை  என நாம் இங்கு குறிப்பிட்ட நல்ல செயல்கள் வழியாக, பழிகளைத் தீர்ப்பதில் நம் உலகை நாம் வளர்ப்போம். திருவள்ளுவரின் கூற்றாகிய: 'இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்."    என்பதனை மனதில் நிறுத்தி அன்பையே நம் வாழ்வின் அடித்தளமாக கொள்வோம்.


Sunday, December 22, 2013

களவாடப்பட்டுட மனிதவாழ்வையும், சிறைபிடிக்கப்பட்ட மனிதவாழ்வையும், வென்றெடுக்க மனுமகனின் பிறப்பில் மனிதர் நாம் மனவுறுதியெடுப்போம்.

25.12.2013   ம.பிரான்சிஸ்க்- கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்.

கடவுள் பிறப்பெடுத்து உலகிற்கு வருகிறார் என்று நாம் காலம் காலமாக நம்பிவருகின்றோம். இந்த உலகுக்கும் கடவுளுக்கும் உறவு உண்டு. கடவுளுக்கு இந்த உலகின்மீது அக்கறையுண்டு என்பதைத்தான் கடவுளின் பிறப்புகள் நமக்கு உணர்த்துகின்றன. அப்படி கடவுள் உலகில் இயேசுவாக பிறப்புக் கொண்ட ஒரு நிகழ்வைத் தான் கிறித்தவர்கள் கிறிஸ்துமஸ் பெருவிழாவாகக் கொண்டாடிவருகின்றனர். பொதுவாக கடவுள் பிறந்து வருவது மக்களையும் படைப்பனைத்தையும் அழிவினின்றுகாக்கவும், அவையனைத்தும் நிறைவான நிலையான வாழ்வைக் கொண்டிருக்கவேண்டும் என்ற காரணத்திற்காகவுமே ஆகும்.

கடவுளின் பிறப்பும் ஒரு குறிப்பிட்ட பேருண்மையை நமக்கு உணர்த்துகிறது. அதாவது 'மண்ணினின்று உண்மை முளைத்தெழும்" என்னும் பைபிள் வரிகளை உண்மையில் நோக்குவோம். அவை எமக்கு வருங்காலத்தைக் காட்டுகின்றன. 'உண்மை உலகிலிருந்து முளைத்தெழுகிறது." வாக்குறுதியாய் வரும் இவ்இறை வார்த்தை ஏனைய வார்த்கைளின் வெளிப்பாடுகளுடன் இணைந்து வருகிறது: 'பேரன்பும் உண்மையும் ஒன்றையொன்று சந்திக்கும்;, நீதியும் நிறைவாழ்வும் ஒன்றையொன்று முத்தமிடும். மண்ணினின்று உண்மை முளைத்தெழும்; விண்ணினின்று நீதி கீழ்நோக்கும். நல்லதையே ஆண்டவர் அருள்வார்; நல்விளைவை நம்நாடு நல்கும். நீதி அவர்முன் செல்லும்; அவர்தம் அடிச்சுவடுகளுக்கு வழி வகுக்கும.;" என்பதேயாகும்.

கிறிஸ்து பிறப்பில் இந்த இறைவாக்கு இன்று நிறைவேறுகிறது. பெத்லகேமில் கன்னிமரியிடம் பிறந்த இயேசுவில் பேரன்பும் உண்மையும் சந்தித்தன, நீதியும் நிறைவாழ்வும் முத்தமிட்டன, மண்ணிலிருந்து உண்மை முளைவிட்டது, விண்ணிலிருந்து நீதி கீழ்நோக்கியது. கிறிஸ்து எங்கே பிறந்தார் என்ற கேள்வியை எழுப்பும்போதும், உண்மை இவ்வுலகில் முளைத்தது என பார்க்கும்போதும். உண்மை இவ்வுலகில் கன்னிமரியிடம் பிறப்பெடுத்ததைக் காண்கின்றோம்.
'மண்ணினின்று உண்மை முளைத்தெழுந்தது. விண்ணினின்று நீதி கீழ்நோக்கியது." இறைத்தந்தையின் இதயத்தில் இருக்கும் உண்மை. உலகிலிருந்து முளைத்தெழுந்தது, ஏனெனில் அந்த உண்மை தாயின் உதரத்திலும் இருந்தது. உலகம் முழுமையையும் தாங்கிப்பிடிக்கும் உண்மை இம்மண்ணிலிருந்து கிளம்பி வந்தது, ஏனெனில் இது ஒரு பெண்ணின் கைகளிலிருந்து எழுந்து வந்தது. ஆகாயமும் அடக்கிக்கொள்ள முடியாத இந்த உண்மை இவ்வுலகில் எழுந்தருளி ஒரு மாடடைக் கொட்டகையில் படுத்திருக்கின்றது. மேன்மைமிகு சிறப்பு வாய்ந்த ஓர் இறைவன் இவ்வளவு தாழ்மையுடன் பிறப்பெடுப்பதால் அவருக்கு என்ன பயன்? எவ்வித பயனும் பலனுமில்லை. ஆனால், நாம் நம்பினால் அது நமக்குப் பயனுள்ளதாகும் என்பதைக் காட்டுகின்றது.

'நாம் நம்பினால்" இதுவே விசுவாச சக்தி. கடவுளே அனைத்தையும் படைத்தார், அவரே இயலக்கூடாததை இயலக்கூடியதாக்கினார். ஆம். மனு உருவானார். வரம்பற்ற அவரது அன்பின் ஆற்றல் மனிதர்களின் புரிந்துகொள்ளுதலையும் தாண்டி உருப்பெற்றது. முடிவற்றவர் குழந்தையாய் உருவெடுத்து மனித சமுதாயத்தில் நுழைந்தார். இருப்பினும் நாம்; எம் இதயக்கதவுகளைத் திறக்கவில்லையெனில். அவர்; எம் இதயத்திற்குள் நுழைய இயலாது. உண்மை பிறந்துள்ளது. இறைவன் பிறந்துள்ளார். இவ்வுலகம் கனியைத் தந்துள்ளது. 
கிறிஸ்துவின் பிறப்பின் நிகழ்வுகளை உற்றுக் கவனித்தால் அவை இன்று வசதியும் செல்வமும் பணபலமும் படைபலமும் ஆயுதபலமும் அறிவியல் வளர்ச்சியும் தொழில்நுட்பத்திறனும் மிக்க நமது சமுதாயத்திற்கு தேவையான பல பேருண்மைகளை தாங்கியனவாக உள்ளன.

கிறிஸ்துவினுடைய பிறப்பு மின்விளக்குகளும் மீடியாவெளிச்சமும் நிறைந்த சூழலிலோ, படிப்பறிவு நிறைந்த அறிஞர்களின் மத்தியிலோ, செல்வம் கொழித்த வசதிகள் மலிந்த குடியிருப்பிலோ நிகழாமல், ஆள் அரவமற்ற இருளான இடத்தில், கண்டுக்கொள்ளப்படாத ஆட்டிடையர்கள் மத்தியில், அசிங்கங்கமும் அழுக்குமான மாட்டுக் குடிலில் நிகழ்ந்தது. கடவுள் இவ்வாறு பிறந்தது, வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் அவர் எதிரானவர் அல்ல. மாறாக, அவற்றில் மறைந்திருக்கும் முரண்பாடுகளையும், அவலங்களையும் சுட்டிக்காட்டி வாழ்வின் அவசியங்களின் மட்டில் நமது கவனத்தைத் திருப்புவதற்காகவே எனலாம்.
புதிய பொருளாதாரப் புரட்சியாக இருக்கின்ற உலகமயமாக்குதல் பல வளர்ச்சிகளை வென்றெடுத் துள்ளது. வசதிகளையும் வருவாயையும் பெருக்கித்தந்திருக்கின்றது. ஆனால் அவற்றின் பின்னணியில் உள்ள தளர்ச்சிகள், புறக்கணிப்புகள், மறுக்கப்படுதல்கள், மறக்கப்படுதல்கள் மற்றும் வேரறுக்கப்படுதல் பெரும்பாலும் வெளிச்சத்திற்கு வருவதில்லை. ஆடம்பரங்களும், சொகுசு சாதனங்களும், தொலைத்தொடர்பு சாதனங்களும் அக்கறைக் காட்டப்பட்டு அத்தியாவசிங்கள், இன்றியமையாதவைகள் கண்டுக்கொள்ளப்படாமல் விடப்பட்டுவிட்டன. இதற்கு எடுத்துக்காட்டு குடும்ப உறவிலும் பாதிப்பு ஏற்படுத்திவிட்டுள்ளது. கணவனும் மனைவியுமாக கை நிறைய சம்பாதிக்க முடிகிறது. ஆனால் விவாகரத்து அதிகரித்துக் கொண்டேபோகிறது. பல அறைகள் கொண்ட மாளிகைப் போன்ற வீடுகள் மலிந்துக் கொண்டிருக்கின்றன, ஆனால் அதில் வாழத்தான் போதிய மனிதர்கள் இல்லை. குழந்தைகளுக்கு கேட்டதெல்லாம் கிடைத்துவிடுகிறது, ஆனால் பெற்றோரின் உடனிருப்பு கிடைப்பதில்லை. உயரமான கட்டிடங்கள், ஆனால் தாழ்வான எண்ணங்கள். வகைவகையான உணவுகள், ஆனால் அவை ஊட்டச்சத்து குன்றிப்போனவை. தொலைத்தூரங்களை இணைக்க கம்பளம் விரித்தாற்போல நெடுஞ்சாலைகள், ஆனால் அடுத்த வீட்டார் கண்டுக்கொள்ளப்படுவதில்லை. அலைபேசிக்கொண்டு யாரோடுயெல்லாமோ எங்கங்கோ இருப்பவர்களோடு பேசமுடிகிறது, ஆனால் அடுத்திருப்பவரோட உரையாட மனமில்லை. உணர்வே இன்றி உறங்குகின்றோமா? இது உறக்கமா? அல்லது மயக்கமா? மனிதவாழ்வு களவாடப் பட்டுள்ளதே! சிறைபிடிக்கப் பட்டுள்ளதே! இதனை வென்றெடுக்கவே மனுமகன் மனிதன் ஆனார் என்னும் பெருவிழாவை கொண்டாடும் நாம் ஓர் உறுதி கொள்வோமா? கிறிஸ்துவின் பிறப்பு, சாதி, சமயம், இனம், மொழி என்பவற்றை கடந்ததென்பதை எங்கும் எடுத்துரைப்போம் தடைகளைத் தகர்த்தெறிந்து கிறிஸ்துவிற்காய் எம்மையே அடுத்தவருக்கு தாரைவார்த்து கொடுப்போம். அப்போது எம்பணிக்காய் இமயமே இறங்கி வரும். கிறிஸ்துபிறப்பு விழா எம்மில் அர்த்தம் பெறும்.

ஆழமாகக் வடுக்களைத் தந்து காயமுறவைத்த, பிரிவினைகளைச் சுமக்கவைத்த போர் போய்முடிந்துள்ளஇன்நிலையில் தற்போது மெதுமெதுவாக நம்நாட்டிற்கு அமைதி மொட்டவிழ்கிறது   இவ்வோளையில் இயேசுவின் பிறப்பால் ஆசீர்வதிக்கப்பட்டு நாட்டுமக்களாகிய நாம் அன்பை எம்மண்ணில் வளர்த்து அனைவரும் ஒன்றிணைந்து நற்சமூகங்களை கட்டியெழுப்பி உண்மை மீதான மதிப்பு, மனிதருக்கான மாண்பு தளைத்தோங்கிட செய்வோம்.

அன்பும் உண்மையும், நீதியும் அமைதியும் சந்தித்தன. பெத்லகேமில் மரியன்னையிடம் பிறந்தவர், மனுக்குலத்திற்குள் மனுவுரு எடுத்துள்ளார். மனிதனாகப் பிறந்தார் இறைமகன், கடவுள் வரலாற்றில் தோன்றினார். அவரின் பிறப்பு அனைத்து மனித குலத்திற்கும் புது வாழ்வின் முளையானது. ஒவ்வொரு நிலமும் நல்நிலமாக மாறி, அங்கு அன்பு, அமைதி, உண்மை, நீதி ஏற்கப்பட்டு, முளைவிடட்டும். அனைவருக்கும் கிறிஸ்து பிறப்புப் பெருவிழா வாழ்த்துக்களும் புதுவருட வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

Thursday, November 14, 2013

விசாரணைகளுக்கு இழுத்துச் செல்லப்படும்போது என்ன பதில் அளிப்பது.

17.11.2013
 ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்
இன்று நமக்குத்தரப்படும் பைபிள் பகுதியின் ஆரம்பவரிகள்:கோவிலைப் பற்றிச் சிலர் கவின்மிகு கற்களாலும், நேர்ச்சைப் பொருள்களாலும் கோவில் அழகுபடுத்தப்பட்டிருக்கிறது என்று பேசிக்கொண்டிருந்தபோது இயேசு, இவற்றையெல்லாம் பார்க்கிறீர்கள் அல்லவா? ஒருகாலம் வரும்; அப்போது கற்கள் ஒன்றின்மேல் ஒன்று இராதபடி இவையெல்லாம் இடிக்கப்படும் என கூறுகின்றார்.

ஆரம்ப வரிகளில் இயேசு கோவிலின் அழிவு பற்றி பேசி, அதன் பின் உலகில் நிகழப்போகும் அழிவுகளைப் பற்றி கூறுகிறார். அவர் பட்டியலிட்டுக் கூறும் அவலங்களை அலசினால், இயேசு ஏதோ நாம் வாழும் இக்காலத்து நிகழ்வுகளை கூறுகிறார் போல் தெரிகிறது. இயேசு கூறும் அந்த அவலங்கள் இவை: கடவுளின் பெயரால் உலகம் அழியப்போகிறது. மக்களை வழிமாறிப் போகச் செய்யும் நடவடிக்கைகள். போர் முழக்கங்கள், குழப்பங்கள், நாடுகள் ஒன்றை ஒன்று எதிர்த்து எழுதல்;. பெரிய நிலநடுக்கங்கள், பஞ்சம், கொள்ளை நோய். அச்சுறுத்தும் அடையாளங்கள் வானில் தோன்றுதல். இவை அனைத்தும் நாம் வாழும் இன்றைய நாட்களில் நம்மைச் சுற்றி நடப்பதை நாம் பார்க்கின்றோம். இந்த அவலங்களுக்கு, அழிவுகளுக்கு மத்தியில் கலங்காமல் இருங்கள் என்றும் இயேசு உறுதி சொல்கிறார்.

இயற்கையில், பொது வாழ்வில், நடக்கும் இந்த பயங்கரங்களைக் கூறிவிட்டு, பின்னர் நமது தனிப்பட்ட வாழ்வை, குறிப்பாக, தம்மைப் பின்பற்றுகிறவர்களின் வாழ்வை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார் இயேசு. அங்கும் அவர் சொல்பவை அச்சத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தும் ஒரு பட்டியல்தான்: நீங்கள் விசாரணைகளுக்கு இழுத்துச் செல்லப்படுவீர்கள்;. உங்கள் குடும்பத்தினரே உங்களைக் காட்டிக் கொடுப்பார்கள்;. உங்களுக்கு எதிராக சான்று பகர்வார்கள்;. உங்களுள் சிலரைக் கொல்வார்கள்;. என்பெயரின் பொருட்டு எல்லாரும் உங்களை வெறுப்பார்கள் என்று இயேசுவும் இந்த உலகத்தைப் பற்றிய கசப்பான உண்மைகளைச் சொல்கிறார்.

முக்கியமாக, தன்னைப் பின்பற்றுகிறவர்களுக்கு வரவிருக்கும் சவால்களை ஒளிவு மறைவு இல்லாமல் தெளிவாக்குகிறார் இயேசு. தனக்குச் சீடர்கள் வேண்டும், தன்னைச் சுற்றி எப்போதும் கூட்டம் இருக்க வேண்டும் என்று அவர் நினைத்திருந்தால், கசப்பான உண்மைகளைச் சொல்லத் தேவையில்லை. தொண்டர்களைத் தவறான வழிநடத்தும் தலைவர்கள், எதிர்வரும் ஆபத்துக்களைச் சொல்லத் தயங்குவார்கள். அப்படியே ஆபத்துக்கள் வரும் போதும், உண்மைப் பிரச்சனைகளிலிருந்து அவர்களைத் திசைத் திருப்பி, வெறியூட்டும் பாகுபாட்டு உணர்வுகளை வளர்த்து, தேவையில்லாமல்உயிர்களைப் பறிக்கும் வழிகளைத் தான் காட்டுவார்கள். உறவகளை பிரிப்பார்கள். இந்தப் போலித் தலைவர்கள். இயேசுவின் வழி மாறுபட்ட வழி.

இன்று தரப்படும் பைபிள் பகுதியின் இறுதியிவரிகளில்  இயேசு அறுதல் தரும் வார்த்தைகளுடன் நிறைவு செய்கிறார். என்பெயரின் பொருட்டு எல்லாரும் உங்களை வெறுப்பார்கள். இருப்பினும் உங்கள் தலைமுடி ஒன்றுகூட விழவே விழாது". இன்று நாம் முழு மனித வாழ்கை வாழ்வதில் பல போராட்டங்களைச் சந்தித்து வருகிறோம். மனித நேயத்தோடு வாழும்போது பல இழப்புக்களை சந்திக்கின்றோம். நற்செய்தி விழுமியங்களை முதன்மைப்படுத்தி வாழ்ந்தால் ஏராளம் தொல்லைகள் எமக்கு வருகின்றன. ஒதுங்கி வாழ்ந்தாலும் வாழ முடியாத நிலை. பின் வாங்கி வாழ்ந்தால் சூழ்ச்சி செய்கிறார்கள். இயேசுவை நம்பி வாழ்கிற மனிதனுக்கு துன்பங்கள் இழப்பகள் அதிகம். அவமானங்கள் ஏராளம். இயேசுவிற்காக வாழும்போது பலர் எம்மை தூற்றலாம். உறவுகள் நம்மைப் புறக்கணிக்கலாம். குடும்பமே எம்மை காட்டிக்கொடுக்கலாம். நாம் சலுகைகளை இழக்கலாம். எமக்குபதவிகள் இல்லாமல் போகலாம். காவல் நிலையமும் நீதி மன்றமும் இழுக்கப்படலாம். சிறையில் அடைக்கப்படலாம்; துன்புறுத்தப்படலாம். என்; பொருட்டு அரசரிடமும் ஆளுநரிடமும் விசாரணைக்காக இழுத்துச் செல்லப்படலாம்;. 

எனக்குச் சான்று பகர இவை உங்களுக்கு வாய்ப்பளிக்கும். அப்போது என்ன பதில் அளிப்பது என முன்னதாகவே நீங்கள் கவலைப்பட வேண்டாம். இதை உங்கள் மனத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.  அஞ்சவேண்டாம். கலங்க வேண்டாம். பயப்பட வேண்டாம். உங்களை வெல்ல எவராலும் இயலாது. உங்கள் தலைமுடி ஒன்றுகூட விழவே விழாது. நானே உங்களுக்கு நாவன்மையையும் ஞானத்தையும் கொடுப்பேன்; உங்கள் எதிரில் எவராலும் உங்களை எதிர்த்து நிற்கவும் எதிர்த்துப் பேசவும் முடியாது என்கிறார் இயேசு. எனவே நமக்குத் தேவை மன உறுதி, கடவுள் நம்பிக்கை. துணிந்து செயல்படுவோம் இயேசு நம் வாழ்வை காத்துக்கொள்வார் என வாழ்வின் முடிவை, உலகத்தின் முடிவை எதிர்கொள்வோம். விசாரணைகள் விலகிப்போகும். வெற்றி உறுதி.

Thursday, September 19, 2013

தலைவர்களே, அனைவரும் வாழ்வுபெற பரந்த மனத்தோடு, பலரையும் உற்று நோக்குங்கள்.

22.09.2013
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்

 
இன்று நமக்குத்தரப்படும் பைபிள் பகுதியில் இயேசு மூன்று அறிவுரைகளை நமக்குத் தருகிறார் முதலாவது நேர்மையற்ற செல்வத்தைக் கொண்டு நண்பர்களைத் தேடிக்கொள்ளுங்கள். நம்மிடத்தில் உள்ள திறமைகள், ஆற்றல்கள், குறிப்பாக பணம். இவற்றைக் கொண்டு நல்ல நண்பர்களை, குறிப்பாக மறுவுலக வாழ்வுக்கான நண்பர்களைத் தேடிக்கொள்ள வேண்டும். எனவே, செல்வம் சேர்த்து வைப்பதற்கல்ல. மாறாக, இறைவனுக்காகப் பயன்படத்துவதற்காக. அதை மனதில் கொள்வோம்.

இரண்டாவது நேர்மையற்ற செல்வத்தைக் கையாள்வதிலேயே நம்பத்தகாதவராய் இருந்தால், உண்மைச் செல்வத்தை யார் ஒப்படைப்பார்? எனவே, நிதியை, குறிப்பாக பொது நிதியைக் கையாள்வதில் நேர்மையாகவும், வெளிப்படையாகவும் இருக்க வேண்டும். நிதியை நேர்மையோடு கையாள்பவர் மற்ற அனைத்தையும் கையாள்வதில் நம்பிக்கைக்குரியவராய் இருப்பார்.

மூன்றாவது ஒரு வேலையாள் இரு தலைவர்களுக்கு ஊழியம் செய்யமுடியாது.ஏனெனில், ஒருவரை வெறுத்து மற்றவரிடம் அவர் அன்பு கொள்வார்,அல்லது ஒருவரைச் சார்ந்துகொண்டு மற்றவரைப் புறக்கணிப்பார்.'நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்ய முடியாது." ஏன எடுத்துக்காட்டுகின்றார். கடவுளையும், காசையும் நாம் வழிபட முடியாது. செல்வத்தின்மீது அதிகப்பற்றுகொள்வது சிலைவழிபாட்டுக்கு ஒப்பானது. எனவே, செல்வத்தைக் கடவுளுக்கு இணையாக்காமல் வாழ்வோம்.

இயேசு இன்று செல்வத்திற்குப் பணிவிடை செய்வது குறித்தும் பேசியிருக்கிறார். 'கடவுளுக்கும், செல்வத்திற்கும் பணிவிடை செய்யமுடியாது." என்று இயேசு கூறும் வார்த்தைகளைக் கேட்கும்  இன்றைய தலைவர்களும் தொண்டர்களும் ஏளனமாய்ச் சிரித்துக் கொள்வார்கள். 'கடவுளுக்கும், செல்வத்திற்கும் பணிவிடை செய்யமுடியாது" என்று யார் சொன்னது. நாங்கள் கடவுளுக்கும், செல்வத்திற்கும் பணிவிடை செய்கிறோம். ஏனெனில் எங்கள் கடவுளே செல்வம்தான், என்று சொல்கிறார்கள் இவர்கள். இங்கு கடவுளுக்கு இணையாக உயிரற்ற ஒரு பொருளை இயேசு முன் வைக்கிறார். இது சாத்தியமாகுமா? சாத்தியமாகியுள்ளது, சரித்திரமாகியுள்ளது. கடவுளுக்குப் பதில் செல்வத்தைக் கடவுளாக்கி, வழிபடும், பணிவிடை செய்யும் பலரை நாம் இன்று பார்க்கின்றோம். இயேசுவின் இந்தக் கூற்று செல்வத்திற்கு எதிராக, செல்வத்தைக் கண்டனம் செய்து பேசப்பட்டதாகத் தோன்றலாம். செல்வம் சேர்ப்பது, செல்வத்தைப் பகிர்வது, செலவிடுவது இவைகளை இயேசு குறை கூறவில்லை. செல்வத்திற்குப் பணிவிடை செய்வதையே அவர் தவறு என்று எச்சரிக்கிறார். செல்வம் என்ற உயிரற்றப் பொருள் நமக்குப் பணிவிடை செய்யவேண்டும். இதுதான் இயற்கை. அதற்குப் பதிலாக, உயிரற்ற செல்வத்திற்கு உயிரும், அறிவும் கொண்ட நாம் பணிவிடை செய்வது தவறு என்று இயேசு எச்சரிக்கிறார்.

'எவரும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்யமுடியாது" என இன்று இயேசு கூறும் இவ் வார்த்தைகளை எம் இன்றைய அரசியலுடன் கொஞ்சம் சிந்திக்க தூண்டுகிறது. எம் பகுதி இன்று தேர்தல் முடிவுகளை சந்தித்து எம்மை வழிநடத்த ஒரு தலைவரை எதிர்பாத்திருப்பதால், இவ்வரிகளை ஓரளவு சிந்திப்பது பயனளிக்கும். இயேசு இவ்வார்த்தைகளைச் சொன்னபோது, உண்மையான தலைவன், உண்மையான பணியாளரைப் பற்றி அவர் நினைத்துப் பார்த்திருக்க வேண்டும். நல்ல பண்புகள் உள்ள ஒருவரைத் தலைவராக தெரிவுசெய்து ஏற்றுக் கொள்ளும் பணியாளர், அத்தலைவன் மீது உள்ள மதிப்பினால், அன்பினால் அவருக்குப் பணிவிடை செய்வார். தலைவன் தரும் பணம்;, அல்லது பிற பயன்கள் இவைகளுக்காகச் செய்யப்படும் பணிவிடை அல்ல தொண்டரின் பணி. இவைகளை எல்லாம் தாண்டி, பணியாளரின் பணிவிடை அமைந்திருக்கும். 'எவரும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்ய முடியாது" என்ற இயேசுவின் கூற்று, இன்றுவரை நாம் சந்தித்த நமது அரசியல் தலைவர்கள், தொண்டர்களுக்குப் பொருந்தாது. இந்தத் தலைவர்கள், தொண்டர்கள் அனைவரும் வேறொரு தெய்வத்திற்குப் பணியாளர்கள். பணம் என்ற தெய்வத்திற்கு இவர்கள் அனைவரும் பணிவிடை செய்கிறார்கள். செல்வத்தைக் கொண்டு பிறரன்புச் செயல் புரிகின்ற தலைவர்களை மக்கள் என்றும் நிலையாக தம் உள்ள உறைவிடங்களில் உறுதியாக வைத்திருப்பார்கள் என்பது வரலாறு. எனவே தலைவர்களே, அனைவரும் வாழ்வுபெற பரந்த மனத்தோடு, பலரையும் உற்று நோக்குங்கள்.

Friday, July 12, 2013

'அடுத்திருப்பவர்" என்ற சொல்லுக்கு உயிருள்ள ஓர் எடுத்துக்காட்டைத் உருவாக்கி நல்ல சமாரியராவோம்

14.07.2013  ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்
நல்ல சமாரியர் என்னும் உவமைக் கதைவழியாக இயேசு இன்று நம்முடன் பேசுகின்றார்: 'ஒருவர் எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் போகும்போது கள்வர் கையில் அகப்பட்டார். அவருடைய ஆடைகளை கள்வர்; உரிந்து கொண்டு, அவரை அடித்துக் குற்றுயிராக விட்டுப் போனார்கள். குரு ஒருவர் தற்செயலாய் அவ்வழியே வந்தார். அவர் அவரைக் கண்டதும் மறு பக்கமாக விலகிச் சென்றார். அவ்வாறே லேவியர் ஒருவரும் அவ்விடத்துக்கு வந்து அவரைக் கண்டதும் மறுபக்கமாய் விலகிச் சென்றார். ஆனால் அவ்வழியே பயணம் செய்துகொண்டிருந்த சமாரியர் ஒருவர் அருகில் வந்து அவரைக் கண்டபோது அவர்மீது பரிவு கொண்டார். பணிவிடை செய்தார்" இது உவமைக் கதையின் சுருக்கம்.

Good Samaritan  என்ற சொற்களை Google தேடலில் தேடும்போது,0.21நொடிப் பொழுதில் 24400000 விவரங்கள் தோன்றின. இவற்றில் பல இலட்சம் விவரங்கள் 'நல்ல சமாரியர்" என்ற பெயர்தாங்கிய மருத்துவமனைகளும்,பிறரன்பு நிறுவனங்களும்ஆகும். இத்தேடலில் குறிப்பிடத்தக்க விடயம் 'நல்ல சமாரியர்" என்ற பெயரில் பல நாடுகளில்; சட்டங்களும் கடைபிடிக்கப்படுகின்றன. அமேரிக்கா, கனடா,மற்றும் ஐரோப்பாவின் பலநாடுகளில்'நல்ல சமாரியர்"என்ற பெயரில் சட்டங்கள் உள்ளன.இந்நாடுகளில் பொதுவிடங்களில் யாரேனும்அடிபட்டால், என்ன செய்யலாம், செய்யக் கூடாது என்பனவற்றை விளக்கும்விதிகள் இந்த'நல்ல சமாரியர்"சட்டத்தில் சொல்லப்பட்டுள்ளன.

இவ்வருடம் பிப்ரவரி 5நாள் அமெரிக்காவின் நியூயார்க், நகருக்கருகே நெடுஞ்சாலையில் ஏற்பட்ட ஒரு நிகழ்வை இங்குகுறிப்பிடலாம: Pedro Lugo - பிற்றோ லூகோ என்ற 69 வயது மனிதர், கார் பழுதடைந்ததால் நெடுஞ்சாலையின் ஓரத்தில் தவித்துக்கொண்டிருந்த ஒரு மாற்றுத் திறனாளியான பெண்ணுக்கு உதவி செய்தார். அப்பெண்ணின் காரை சரி செய்ய உதவினார். பின்னர் பிற்றோ தன் காரில் ஏறி மீண்டும் நெடுஞ்சாலைக்குள் நுழைந்தபோது, வேகமாக வந்தஒரு பாரஊர்தி பிற்றோவின் கார்மீது மோதியது. மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும்வழியில் பிற்றோ உயிர்துறந்தார். கனடாவின் Vancouver நகரில் குற்றம்புரிந்த ஒருவரைக் காவல்துறையினர் கண்டுபிடிக்க உதவியவரை 'நல்ல சமாரியர்"என்ற அடைமொழியால் குறிப்பிட்டனர். அவ்விருசெய்திகளுக்கு நாளிதழ்கள் தந்த தலைப்புக்கள்: ““Good Samaritan dies after helping disabled.”, “ Good Samaritan helped nab suspec in Vancouver…” 21 நூற்றாண்டுகள் ஆகியும் இயேசுவின் இந்த உவமை கத்தோலிக்கம் என்ற வட்டத்தைத் தாண்டி மக்கள் மனங்களில் தூண்டுதலாய் உள்ளது தெளிவாகிறது. 

இந்த உலகப் புகழ்பெற்ற 'நல்ல சமாரியர்" உவமை பிறந்த பின்னணி லூக்கா நற்செய்தியில் பின்வருமாற கூறப்பட்டுள்ளது: திருச்சட்ட அறிஞர் ஒருவர் எழுந்து அவரைச் சோதிக்கும் நோக்குடன், 'போதகரே, நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டார். இவ்வாறு  இவ்வுவமையின் பின்னணி ஆரம்பமாகிறது. இயேசுவிடம் எவ்வகையிலாவது குறைகாண வேண்டும் என்ற ஆவலில் திருச்சட்ட அறிஞர் கேள்வியைத் தொடுத்தாலும், இயேசு அந்த வாய்ப்பை நழுவவிடாமல், அற்புதமானதொரு உலகப் புகழ்பெற்ற உவமையைக் கூறினார். தொடக்கத்தில் கேட்ட கேள்வி நிலை வாழ்வைப்பற்றியது. முடிவில் சொன்ன பதில் இரக்கம் என்று. இரண்டுக்கும் இடைப்பட்ட இடத்தில் வருவது அயலான். இந்த அயலானைப்பற்றி தெழிவாக புரிந்துகொண்டால் தொடக்கமும் முடிவும் சரியாகிவிடும்.

நல்லவர்-கெட்டவர் என்ற அடையாளங்களை ஒவ்வொருவர்மீதும் பதிப்பது இயேசுவின் எண்ணம் அல்ல. 'அடுத்திருப்பவர்" என்ற சொல்லுக்கு உயிருள்ள ஓர் எடுத்துக்காட்டைத் தருவது ஒன்றே இயேசுவின் எண்ணமாக இருந்தது. சமுதாயத்தில் நல்லவர்-கெட்டவர், உயர்ந்தவர்-தாழ்ந்தவர், படித்தவர்-படிக்காதவர்,வெள்ளை-கறுப்பு, அவர்-இவர் என்று அடையாளங்களை ஆயிரக்கணக்கில் நாம் உருவாக்கி விட்டதால் 'அடுத்தவர்" என்ற அடிப்படை அடையாளத்தைக் கண்டுபிடிக்க இயலாமல் நாம் தவிக்கிறோம். நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதரும் நமக்கு 'அடுத்தவர் " என்ற அடிப்படை அடையாளத்தை மறைக்கும் அளவுக்கு நாம் ஏற்கனவே உருவாக்கி வைத்திருக்கும் வேறு பல அடையாளங்களை அவர்கள் மீது ஒட்டிவிடுகிறோம். பின்னர் 'அடுத்தவர் எங்கே?" என்ற தேடலில் இறங்குகிறோம். இந்த அடையாளங்களுக்கு எவ்வித முக்கியத்துவமும் கொடுக்காமல் 'மனிதர்" என்ற ஒரே காரணத்திற்காக  மற்றவர் மீது பரிவுகொண்டு உதவிகள் செய்ய முன்வருபவர்களும் 'அடுத்தவர்' அகின்றனர். அவர்களே 'நல்ல சமாரியர்"

Thursday, July 4, 2013

இயேசுவிற்காய் ஓநாய்கள் மத்தியில் நடை போடக்கூடிய ஆட்டுக் குட்டிகளாவோம்

07.07.2013
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர் 

'அறுவடை மிகுதி, வேலையாள்களோ குறைவு ஆகையால் தமது அறுவடைக்குத் தேவையான வேலையாள்களை அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள்.  புறப்பட்டுப் போங்கள்; ஓநாய்களிடையே ஆட்டுக் குட்டிகளை அனுப்புவதுபோல் உங்களை நான் அனுப்புகிறேன்" இயேசு; சீடர்களுக்கு கூறும் பைபிள் பகுதி இன்று எமக்குத் தரப்படுகின்றது.  அத்துடன் தேவ அழைத்தலுக்காக வேண்டும்படி எமக்கு சொல்லப்படுகின்றது. தேவ அழைத்தல் என்றதும், குருக்கள், துறவறிகள் என்ற குறுகிய கண்ணோட்டம் நம் மனதில் எழுவதுன்டு. 'அறுவடைக்கு வேலையாள்கள் தேவை" என்று இயேசு கூறியது குருக்கள், துறவியரைக் குறித்து மட்டும் அல்ல. மாறாக, மக்களின் மனங்களில் இறையரசின் கனவுகளை விதைத்து, அதன் பலன்களை அறுவடை செய்வதற்கு துணிவுடன் முன் வரும் அத்தனை வேலையாள்களையும் நினைத்தே இயேசு இந்த வரிகளைச் சொல்லி இருப்பார்.

இறை நற்செய்தியைப் பரப்புவதற்கு 'ஓநாய்கள் மத்தியில் செல்லக்கூடிய ஆட்டுக் குட்டிகள்" இயேசுவுக்குத் தேவை. ஆடுகள் அல்ல, ஆட்டுக் குட்டிகள். ஓநாய்கள் மத்தியில் ஆட்டுக் குட்டிகளா?  என்ன விபரீத விழையாட்டு இது. ஆனால், வரலாற்றில் இத்தகைய விபரீதங்கள் வீரக் கதைகளாகத் தொடர்ந்து நடந்து வருகின்றன என்பது நமக்குத் தெரியும்.

நீள, அகல, உயரம் என்று எல்லாப் பக்கங்களிலும் அளவுக்கதிகமாய் வளர்ந்திருந்தான் கோலியாத்து. அவனது தோற்றம் பற்றி நாம் படித்திருக்கின்றோம். அந்த மனித மலையோடு மோத, தன் மீது தற்காப்புக்காகப் போடப்பட்ட கவசங்களை எல்லாம் கழற்றிவிட்டு, கையில் கவணும், கல்லும் எடுத்துப் புறப்படும் தாவீதுவை நாம் எண்ணிப்பார்க்கலாம். சிறியவன்; தாவீதுக்கு எங்கிருந்து இந்த வீரம் வந்தது? தன்னையும், தன் ஆடுகளையும் இரத்த வெறி பிடித்த மிருகங்களிடம் இருந்து காத்த இறைவன், இந்த மனித மிருகத்திடமிருந்து தன்னையும், தன் மக்களையும் காப்பார் என்ற அந்த அசைக்க முடியாத நம்பிக்கைதான். ஓநாய்கள் மத்தியில் ஆட்டுக் குட்டி செல்லுமா? தாவீது சென்றார். வெற்றிகொண்டான்.

'யார் இந்த அரை நிர்வாண பரதேசி?" என்று ஆங்கில அரசு ஏளனமாக விவரித்த காந்தியடிகள் பற்றி எமக்குத்தெரியும். அரை நிர்வாணமாய், நிராயுத பாணியாய் சென்று அந்த ஆட்டுக் குட்டி, அந்த ஓநாய்களின் அரசை எவ்வளவு தூரம் ஆட்டிப் படைத்ததென்பது நமக்குத் தெரிந்த வரலாறு.

ஓநாய்கள் மத்தியில் ஆட்டுக் குட்டிகள் செல்லுமா? வழக்கமாய் செல்லாது. ஆனால், அந்த ஆட்டுக் குட்டிகள் மனதில் நம்பிக்கை இருந்தால், ஓநாய்கள் மத்தியில் தலை நிமிர்ந்து வீர நடை போடும். இப்படி, நம்பிக்கையோடு ஓநாய்கள் மத்தியில் நடை போடக்கூடிய ஆட்டுக் குட்டிகள் இயேசுவுக்குத் தேவை. ஓநாய்கள் மத்தியில் போக வேண்டும் என்பது உறுதியாகி விட்டது. சரி அதற்குத் தகுந்தது போல், எல்லா ஏற்பாடுகளும் செய்து கொள்ள வேண்டாமா? கோலியாத்தை எதிர்த்துச் செல்லும் போது, ஒரு கவசம், ஒரு கேடயம், ஓர் ஈட்டி, குறைந்தது ஒரு கத்தி? ஒன்றும் வேண்டாம் என்கிறார் இயேசு. 'பணப்பையோ, வேறு பையோ, மிதியடிகளோ எதுவும் எடுத்துச் செல்ல வேண்டாம்." என்கிறர் இயேசு.

தூங்குவதற்கும் கூட திட்டங்கள் தீட்ட வேண்டிய இக்காலகட்டத்தில் இயேசு சொல்வதை எண்ணி சிரிப்பதா? வியப்பதா? தெரியவில்லை. நடைமுறைக்கு ஒத்துவராத ஒரு நிபந்தனை. ஆனால், ஆர அமர, ஆழமாக சிந்தித்தால், இயேசுவின் இந்தக் கூற்றில் உள்ள உண்மைகள் புரியும். உலகத்தில் பெரும் பகுதிகளை வென்று, ஏராளமாய் பொருள்களைத் திரட்டி வைத்திருந்த மாவீரன் அலெக்சாண்டர் இதே கருத்தைத் தானே தன் இறுதி மூன்று ஆசைகளாகச் சொல்லிச் சென்றார். அதிலும் சிறப்பாக, தனது இறுதிப் பயணத்தில் தனது வெறும் கைகளைத் சவபெட்டிக்கு வெளியில் மக்கள் பார்க்கும் படி வைக்கச் சொன்னது நமக்கு ஒரு பாடம்தானே. வெறும் கையோடு செல்லுங்கள், எதையும் எடுத்துச் செல்ல வேண்டாம் என்று கூறும் இயேசு கொடுக்கச் சொல்கிறார். நீங்கள் நுழையும் இடத்தில் எல்லாம் சமாதானம் என்ற ஆசீரைக் கொடுங்கள் என்கிறார். இயேசுவின் அழைப்பை ஏற்று, உழைக்க முன்வந்து விட்டால், அவரது அரசை விதைத்து, அறுவடை செய்ய துணிந்து விட்டால். ஓநாய்கள் நடுவிலும் துணிவோடு செல்ல வேண்டும், அந்தத் துணிவு, இறை நம்பிக்கையிலிருந்து வர வேண்டும், இந்த நம்பிக்கை ஒன்றை மட்டும் சுமந்து செல்வோம். சமாதானத்தை அனைவருக்கும் வழங்குவோம்.

பாதைமாறமல் பயணங்கள் தொடர பரமனிடம் பணிவோம் ' "

 30.06.2013
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்
1519ம் ஆண்டு ர்நசயெனெழ ஊழசவநள (கெர்நாண்டோ கோர்ரெஸ்) என்ற படைத் தளபதி க்யூபாவை விட்டுத் தன் தொண்டர்களுடன் மெக்சிகோ வந்து சேர்ந்தார். தன்னைப் பின் தொடர்ந்தவர்கள் மெக்சிகோவில் மேற்கொள்ள விருக்கும் போராட்டங்களுக்காகப் பயந்து, மீண்டும் க்யூபாவிற்குத் திரும்பக் கூடாதென, அவர்கள் வந்தக் கப்பலை எரித்து விட்டார். துணிந்த பின் மனம் திரும்பிப் பார்க்கக் கூடாதென்ற கருத்தை வலியுறுத்த, இந்த நிகழ்வைச் அன்றைய பத்திரிகைகள் சுட்டிக் காட்டின. 'கலப்பையில் கை வைத்தபின் திரும்பிப் பார்ப்பவர் எவரும் இறையாட்சிக்கு உட்படத் தகுதியுள்ளவர் அல்ல"  என்று இயேசு கூறிய இந்த வரிகளைச் அறிந்து தன் பணியின் பெற்றிக்காக அவ்வாறு செயற்பட்டிருக்கலாம் அந்த தளபதி.
இன்றைய நற்செய்தி வாசகம் இயேசுவின் சீடத்துவத்தைப் பற்றிச் சிந்திக்க நம்மை அழைக்கின்றது .இயேசு தன் சீடர்களுக்கு விடுக்கும் அழைப்பு நிபந்தனைகள் நிறைந்தது. அனைத்தையும் துறந்து தன்னைப் பின்செல்ல வேண்டும் என்ற அழைப்பை ஏற்றுத்தான், அவரது முதல் சீடர்கள் படகுகளையும், வலைகளையும் விட்டுவிட்டுச் சென்றனர் என்று நாம் தொளிவாக அறிந்திருக்கின்றோம்.. இப்போதோ, இன்னும் சில சீடர்கள் முன் வருகின்றனர். ஆனால், இயேசு அவர்களுக்குத் தம் நிபந்தனைகளை எடுத்துரைக்கிறார்: மானிட மகனுக்குத் தலைசாய்க்கவும் இடம் இல்லை. எனவே, அவரது சீடர்களும் இடம், பொருள், மனிதர்கள் மீது பற்று கொண்டிருக்கக் கூடாது. எங்கும், எப்போதும் செல்ல கூடிய மனநிலை கொண்டிருக்க வேண்டும். எளிய வாழ்வு வாழ வேண்டும். தமது குடும்பம், உறவினர்கள், நண்பர்கள் பற்றி அதிகக் கவலை படக்கூடாது. அவர்களை இறைவன் பார்த்துக்கொள்வார். சீடரின் பணி தலைவரைப் பின்பற்றுவதே. தனது அழைத்தலை விட்டுவிட்டுக் கடந்த கால வாழ்வுக்குத் திரும்பிச் செல்லும் எண்ணம் கொண்டிருக்கக் கூடாது. எதிர்காலம் பற்றிய கவலையோ, கடந்த காலம் பற்றிய ஏக்கமோ கூடாது. நிகழ்காலத்தில் இயேசுவோடு வாழ வேண்டும். நமது அழைப்பு என்ன? நமது தடுமாற்றங்கள் எதில் இருக்கின்றன என்று ஆய்வு செய்து, நிபந்தனையற்ற விதத்தில் இயேசுவைப் பின்பற்றவேண்டும்

இன்று நற்செய்தி பார்க்கின்ற மூன்று மனிதர்கள் இயேசுவிடம் வந்து அவரது சீடராய் வாழ விருப்பம் தெரிவிக்கின்றனர். இவர்கள் மூவரும் எம்மையே பிரதிபலிக்கின்றார்கள் என்பதை நாம் உணர வேண்டும். நாமும் இயேசுவின் சிறந்த சீடர்களாய் வாழ விரும்புகிறோம். நமக்கும் நல்ல எண்ணங்கள், உயர்ந்த சிந்தனைகள் அவ்வப்போது எழுகின்றன. ஆனால், பல தடைகள் நம்மை ஈர்க்கின்றன. சீடராய் வாழவிடாமல் தடுக்கின்றன. எனவே, நாமும் அந்த மூன்று மனிதர்களைப் போல சாக்குபோக்குகளைக் கண்டுபிடிக்கிறோம். முதலில் என்னுடைய வீட்டுக் கடமைகள் முடியட்டும், அல்லது இந்தப் பணிகளை ஆற்றிவிட்டு அதன்பின் நான் முழு நேரமாக இறைபணியில் ஈடுபடுவேன் என்றெல்லாம் எண்ணுகின்ற நல்ல உள்ளங்கள் பல இருக்கின்றன. ஆனால், இயேசு ஒரு தெளிவைத் தருகின்றார்: அனைத்திற்கும் மேலாக ஆண்டவரைத் தேடுங்கள். அவருக்குப் பணி புரியுங்கள். மற்ற அனைத்தையும் அவரே உங்கள் பொருட்டு பார்த்துக்கொள்வார். எனவே, பல்வேறு பணிகளுக்கு மத்தியில் இயேசுவின் சீடராய் வாழ விரும்பும் நாம் அனைத்திற்கும் மேலாக இயேசுவையே முதற் கடமையாகக் கருதுவோம். மற்ற கடமைகளையெல்லாம் அவரே பார்த்துக்கொள்வார்.
நல்லது ஒன்று செய்ய வேண்டும் என்று மனதில் பட்டால், அதை உடனடியாகச் செய்து விடுவது மிகவும் நல்லது. இயேசுவைப் பின் பற்றுவது, அவரைப் போல வாழ முற்படுவது மிக, மிக நல்லதொரு எண்ணம். அந்த எண்ணம் மனதில் தோன்றினால், தாமதிக்க வேண்டாம். ஒன்றே செய்யினும், நன்றே செய்க் நன்றே செய்யினும், இன்றே செய்க என்னும் வாக்கை நாம் எமதாக்கவேண்டும்.
இன்று வாசகத்தில் இயேசுவின் பதில்கள் இரண்டு முரண்பட்ட நிலைகளைக் காட்டுகின்றன.  ஒருவருக்கு பதிலாக, தலைசாய்க்க கூட இடமில்லையென்றுறுவதும், மற்றவருக்கு உடனே என்னைப் பின்செல் என்றும் கூறுவதையும் காட்டுகின்றது. இருவேறு நிகழ்வாக இருந்தாலும், யாருக்கு என்ன பதில் என்பதனை பார்த்தால் சிறப்பு அழைப்பு அல்லது அவரவர் என்ன செய்ய பணிக்கபட்டு இருக்கிறார்களோ அதனை தான் செய்ய வேண்டும். நமக்கு அண்டவருடைய திட்டம் என்ன எதற்காய் அழைப்பு பெற்று இருக்கின்றோம் என்பதனை அறிந்து தெரிந்து செயல்படுவதுவே விவேகமானது.
நாம் இயேசுவை பின் செல்ல வேண்டும் என்றால், நாம் நமக்கு பிடித்த பல விடயங்களை, கெட்ட எண்ணங்களை விட்டு அவர் பின் செல்ல வேண்டும். மற்றவர்கள் மேல் உள்ள பொறாமையும், அதிருப்தியும், விருப்பமின்மையும் நாங்கள் தூக்கி எறியவேண்டும். யாரும் எங்களை ஏற்று கொள்ள வில்லையாயினும், அதனை ஏற்று கொண்டும் நாம் இயேசுவை பின் செல்ல வேண்டும். நமது எண்ணங்களை மற்றவர்கள் கட்டுபாட்டுக்குள் விட கூடாது. நமது காலணியில் உள்ள அழுக்கை துடைத்து எறிய வேண்டும் என்றால், நமது தீய எண்ணங்களை துடைத்து விட்டு, இயேசுவின் மகிழ்வில் நிலைத்திருக்க வேண்டும். இயேசுவைப் பின்தொடரும் பயணம் ஒரு கலப்பையில் கை வைத்து உழுகின்ற சிறப்பான தொழில். பின்னால் திரும்பிப் பார்த்தால் தொழிலில் சுத்தம் இருக்காது. கவனம் சிதறும். பாதை மாறும். பல சிக்கல்கள் வந்துவிடும். இயேசுவின் வழிகாட்டுதலை மனதில் கொண்டு வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்வோம். அது வெற்றியில், மகிமையில் முடியும்.


23.06.2013 ' " இயேசு வாழும் கடவுளின் மகன் என எமது வாழ்வால் காட்டுவோம்
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்
'நான் யார்?" என்ற கேள்வியை நாம் பலதடவைகள் எம்மிடமோ, பிறரிடமோ? கேட்டிருக்கின்றோம். 
அன்று இயேசுவிற்கும் இந்தக் கேள்வி எழுந்தது. இக் கேள்வியை கேட்பதன் மூலம் தான் யார் என்பது பற்றி இயேசு ஒரு சுய ஆய்வு மற்றும் பொது ஆய்வு நடத்தி தம்மை அறிந்து கொள்ளிறார் எனலாம். 21 நூற்றாண்டுகளாக மனிதர்கள் 'இந்த இயேசு யார்?" என்னும் கேள்விற்கு விடைதேடுகின்றனர். இக்கேள்விக்குப் பதில் என்ன?. இயேசு, மக்களும் சீடர்களும் தம்மை யார் என்று கூறுகிறார்கள் என்னும் கேள்வியைக் கேட்கிறார். இயேசுவின் இந்தத் தேடலை இன்றைய நற்செய்தி நமக்குக் தருகின்றது. இன்றைய நற்செய்தியில் இயேசுவின் இந்த இரு கேள்விகள் நாம்  கவனிப்போம்: 'நான் யார் என்று மக்கள் சொல்கிறார்கள்?" 'நான் யார் என்று நீங்கள் சொல்கிறீர்கள்?"

இரண்டாயிரம் வருடங்களாக மனித வரலாற்றில் அதிகமான,ஆழமான தாக்கங்களை ஏற்படுத்தியவர்களைக் குறித்து கருத்துக் கணிப்புகள் பல நடந்துள்ளன. ஏறக்குறைய எல்லாக் கருத்துக் கணிப்புகளிலும் இயேசுவின் பெயர் முதலிடம் அல்லது முதல் மூன்று இடங்களில் ஒன்றாக இருந்துள்ளது. ஈராயிரம் ஆண்டுகளில் மனித வரலாற்றை இத்தனை ஆழமாகப் பாதித்துள்ளவர்கள் ஒரு சிலரே. மக்கள் இயேசுவைப் பற்றி என்ன சொல்கிறார்கள்? என்று நோக்கினால் என்னென்னவோ சொல்லி விட்டார்கள். இன்னும் சொல்லி வருகிறார்கள். நல்லதும் பொல்லாததும். உண்மையும் பொய்யும். விசுவாசச் சத்தியங்களும் கற்பனைக் கதைகளும். ஓர் இறைவாக்கினர் எனவூம் அளவுக்கதிகமாகவே சொல்லி விட்டார்கள். ஆனால் இவ்வளவு சொல்லியும் இயேசுவைப் பற்றி முழுமையாக மனித குலம் சொல்லிவிட்டதா என்று கேட்டால், இல்லை என்று தான் சொல்ல வேண்டும். இயேசு இவர்தான், இப்படித்தான், என்று இலக்கணம் சொல்வது மிகக் கடினம். இலக்கணங்களை,வரையறைகளை, வேலிகளை உடைப்பது இயேசுவின் இலக்கணம். எனவே சிறு வயது முதல் நாம் பயின்றவைகளை எல்லாம் பட்டியலிட்டு இயேசு கேட்ட அந்த முதல் கேள்விக்குப்: 'நான் யார் என்று மக்கள் சொல்கிறார்கள்?" பதில் ஒப்பித்து விடலாம்.

'நான் யார் என்று நீங்கள் சொல்கிறீர்கள்?" இந்தக் கேள்வி நமக்குத் தான் தரப்படுகின்றது. இந்த இரண்டாவது கேள்விக்கு அப்படி எளிதாகப் பதில் சொல்லிவிட முடியாது. முதலில் நாம் இயேசுவை யார் என அடையாளம் காணவேண்டும். இயேசுவின் மன நிலை நமது மன நிலையாக மாற வேண்டும்;. இயேசுவின் வாழ்க்கைப் பாணி நமது வாழ்க்கைப் பாணியாக மாற வேண்டும். அப்போது நாம்: 'நான் யார் என்று நீங்கள் சொல்கிறீர்கள்?" என்னும் கேள்விக்கு நம் வாழ்க்கையாலே பதிலளிக்க முடியும்.  நாம் படித்தவைகளை விட பட்டுணர்ந்தவைகளே இந்தக் கேள்விக்குப் பதிலாக வேண்டும். நாம் மனப்பாடம் செய்தவைகளை விட மனதார நம்புகிறவைகளே இந்தக் கேள்விக்கான பதிலைத் தரமுடியும். இந்தக் கேள்வி நம்மில் பலருக்கு சங்கடங்களை உருவாக்குகின்றன என உணர்ந்தால் அது ஒரு நல்ல ஆரம்பம். இயேசுவின் இந்தக் கேள்வி வெறும் கேள்வி அல்ல. ஓர் அழைப்பு. 'என்னைப் பற்றிப் புரிந்து கொள். என்னைப் பற்றிக் கொள்" என்று இயேசு விடுக்கும் அழைப்பு. இது சாதாரண அழைப்பு அல்ல. அவரை நம்பி அவரோடு நடக்க அவரைப் போல் நடக்க பகலானாலும், இரவானாலும் மழையானலும், புயலானாலும் துணிந்து நடக்க அவர் தரும் ஓர் அழைப்பு. வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்த கொடுக்கப்படும் இந்த அழைப்பிற்கு மனதின் ஆழத்திலிருந்து வரட்டும் நம் பதில்கள்.

இயேசுவை அறிந்துகொள்ளும் இரு வழிகளை இன்றைய நற்செய்தி நமக்கு வழங்குகிறது. சொந்த ஈடுபாடு எதுவூம் இல்லாமல் இயேசுவைப் பற்றிய கருத்துக்களைத் திரட்டுவது முதல் வழி. 'மானிடமகன் யாரென்று மக்கள் சொல்கிறார்கள்?" என்று இயேசு கேட்டபோது இந்த முதல் வழியில் திரட்டிய பதில்களைச் சீடர்கள் இயேசுவிடம் கூறினர். பின்னர் இயேசு தன் சீடர்களிடம் 'ஆனால் நீங்கள்இ நான் யார் எனச் சொல்கிறீர்கள்?" என்று கேட்டார். சீமோன் பேதுருஇ 'நீர் மெசியா வாழும் கடவுளின் மகன்" என்கின்றார்;. பேதுருவின் பதில் வெறும் கருத்துக்களைத் தாண்டி விசுவாசத்தின் அறிக்கையாக இங்கு ஒலிக்கிறது.
இன்று எங்களிடம் இயேசு, 'நீங்கள் நான் யார் எனச் சொல்கிறீர்கள்?"என்ற இதே கேள்வியைக் கேட்கிறார் என வைத்துக்கொண்டால்: இயேசுவின் கேள்விக்கு தாராள மனதோடும் துணிவோடும் பேதுருவின் விசுவாச அறிக்கைக்குப் பதிலாக நாம் உலகிற்கு இயேசு மெசியா வாழும் கடவுளின் மகன்" என எமது வாழ்வால் காட்டுவோமா?

16.06.2013 ' "பிறரின் குற்றங்களை மன்னித்து கடவுளின் அன்பின் பொருட்டு ஏற்றுக்கொள்வோம்.
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்
பரிசேயரகிய சீமோன் வீட்டில் இயேசு விருந்து உண்பதற்கு வருகிறார். அப்போது அங்கே அழையாத ஒரு விருந்தினர் வருகிறார். அது ஒரு பெண். அப்பெண் எந்தவொரு வார்த்தைகூட பேசவில்;லை. ஆனால் அவர் செய்த செயல்களை அற்புதமானவை.

இக்காலத்தில் பரிசேயர்கள் விருந்து உண்பதற்கு ஒருமரபு  முறையை வைத்திருந்தார்கள்: 'விருந்தினர் ஒரு மேசை முன் அமர்ந்து, தலையணையில் சாய்ந்த நிலையில் இடது முட்டுக்கையை ஊன்றிக் கொண்டு வலது கையால் உணவை எடுத்து உண்பர். அப்போது விருந்தினரின் கால்கள் மடக்கப்பட்ட நிலையில் அவர்களின் காலடிகள் பின்புறம் தெரியும்" இதனால்தான் அந்தப் பாவியான பெண் இயேசுவுக்குப் பின்னால் கால்மாட்டில் அழுதுகொண்டே நின்றார். தன் வாழ்க்கை பாழாகிப் போனதே என்னும் மனக் கவலையால் அவர் அழுதாரா? புதியதொரு வாழ்வைத் தொடங்கவேண்டும் எனத் தீர்மானித்து, தன் தவறுகளை நினைத்து மனம் வருந்தி அழுதாரா? தெரியவில்லை ஆனால் அவர் தேடி வந்தது இயேசுவைத்தான் அவரை கண்டுகொள்கிறார். உணவருந்திக் கொண்டிருந்த இயேசுவின் காலடிகளின் அருகில் நின்று அழுததால் கண்ணீர்த் துளிகள் இயேசுவின் பாதங்களை நனைக்கின்றன. நனைந்த இயேசுவின் காலடிகளைத் தன் கூந்தலால் துடைக்கின்றார். இயேசுவின் பாதங்களை முத்தமிடுகிறார். தன் கையிலிருந்த படிகச் சிமிழிலிருந்து நறுமணத் தைலத்தை எடுத்து இயேசுவின் காலடிகளில் கரிசனையோடு பூசுகின்றார்.

இச்சம்பவம் உண்மையிலேயே வியப்புக்குரியதுதான். விருந்து நடக்கும்போது அங்கே நுழைவதற்கு அப்பெண்ணுக்கு அனுமதி இருக்கவில்லை. அதுவும் சட்ட நுணுக்கங்களைத் துல்லியமாகக் கடைப்பிடித்த பரிசேயர் ஒருவர் அன்று பாவியான பெண்ணை வீட்டில் ஏற்பது நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. மேலும், இறைவாக்கினர் என மக்களால் கருதப்பட்ட இயேசுவிடம் சென்று அவருடைய காலடிகளை அப்பெண் தொட்டார் என்பது நினைத்துக் கூட பார்க்கமுடியாத இன்னும் ஒரு பெரிய தவறு, எல்லை மீறல் ஆகும். ஆனால் இயேசு அப்பெண்ணின் இதயத்தில் புதைந்துகிடந்த சிந்தனைகளை நன்கறிந்திருந்தார். அப்பெண்ணின் உள்ளத்தில் எழுந்த அன்பும் நம்பிக்கையும் இயேசுவுக்கு வெளிச்சமாகிறிருந்தன். எனவே இயேசு பாவியான அப்பெண்ணைப் போற்றிப் பேசுகின்றார். இயேசுவை வீட்டுக்கு அழைத்துவிட்டு அவருக்கு உரிய மரியாதை காட்டாத சீமோன் எதையெல்லாம் செய்யாது விட்டாரோ அதையெல்லாம் அப்பெண் இயேசுவுக்குச் செய்வதை நாம் இங்கு பார்க்கின்றோம். அதாவது, வீட்டுக்குள் நுழைவதற்கு முன் காலடிகளைக் கழுவுவது வழக்கம். அப்பெண் இயேசுவின் காலடிகளைத் தன் கண்ணீரால் கழுவித் தன் தலைமுடியால் துடைக்கிறார். விருந்தினரை முத்தமிட்டு வரவேற்பது வழக்கம். ஆனால் அப்பெண்ணோ இயேசுவின் காலடிகளையே முத்தமிடுகிறார். விருந்தினரின் தலையில் எண்ணெய் பூச வேண்டும். ஆனால் அப்பெண்ணோ தன்னையே தாழ்த்திக்கொண்டு, இயேசுவின் காலடிகளைத் தொட்டு அவற்றில் நறுமணத் தைலம் பூசுகிறார். இவ்வாறு அவர் தன் அன்பை வெளிப்படுத்துகிறார். இயேசு அப்பெண்ணின் அன்பையும் நம்பிக்கையையும் பாராட்டியதோடு அவருடைய பாவங்களையும் மன்னித்து, அவருக்கு மீட்பைபும் அமைதியையும் வாக்களிக்கின்றார். அன்பு இருக்கும் இடத்தில் கடவுளின் அருள் தோன்றும் என்பதற்குப் பாவியான பெண் சிறந்த எடுத்துக்காட்டாகிறாள்.

மனித இதயத்தில் பல ஏக்கங்கள் உண்டு. பிறர் நம்மை ஏற்று, மனிதராக நம்மை மதிக்க வேண்டும் என்பது அடிப்படையான ஏக்கம். ஏதாவது தவறுகள் நேர்ந்துவிட்டால் அவற்றைப் பிறர் மன்னித்துவிட வேண்டும் என்பதும் மனித எதிர்பார்ப்புக்கில் ஒன்று. அதுபோலவே,கடவுளுக்கு நாம் ஏற்புடையவர்களாக இருக்கவேண்டும் என்பதும் நம் உள்ளத்தின் அடிப்படையான வேட்கை. நாமாகவே முயன்று நம்மைக் கடவுளுக்கு ஏற்புடையவர்களாக மாற்ற இயலாது. ஏனென்றால் நாம் பாவத்தின் விளைவாகக் கடவுளிடமிருந்து பிரிந்து போய்விட்டோம். தவறிச் சென்ற நம்மை மீண்டும் கண்டுபிடித்து, நம்மைத் தம்மோடு உறவுகொண்டாட அழைத்து, அதைச் செயல்படுத்தும் சக்தி கடவுளுக்கு மட்டுமே உண்டு. எனவே, நம்மைத் தமக்கு உகந்தவர்களாக மாற்றுகின்ற கடவுளிடமிருந்து நாம் இரக்கத்தையும் மன்னிப்பையும் கொடையாகப் பெறுகிறோமே தவிர நமது சொந்த சக்தியில் நம்பிக்கை கொண்டு அதைப் பெறுவதில்லை. கடவுளிடமிருந்து நாம் பெறுகின்ற மன்னிப்பு என்னும் அருளைவிடப் பெரிய கொடை இல்லை. இயேசுவை அணுகிவந்து, அவருடைய காலடிகளில் நறுமனத் தைலம் பூசித் தன் அன்பையும் மரியாதையையும் வெளிப்படுத்திய பெண்ணைப் பார்த்து இயேசு அமைதியில் செல்க என்கிறார். அப்பெண்ணுக்குக் கடவுளின் இரக்கமும் மன்னிப்பும் கிடைத்ததால் அவர் அமைதியில் செல்லலாம். மனித உறவுகளில் விரிசல்கள் ஏற்படுவது இயல்பு. மன்னித்து ஏற்கும் பண்பு இல்லாவிட்டால் அந்த விரிசல்கள் விரிந்துகொண்டே போகும். பிறரிடம்தான் குறைகள் எல்லாம் உள்ளன, நம்மிடம் யாதொரு குறையும் இல்லை என நாம் நினைத்தால் முறிந்த உறவுகள் ஒருநாளும் சரியாகிட இயலாது. மாறாக, நம்மை மன்னித்து ஏற்கின்ற கடவுளின் இரக்கத்தை நாம் அனுபவிக்கும்போது, அதே முறையில் பிறரின் குற்றங்களை மன்னித்து அவர்களையும் கடவுளின் அன்பின் பொருட்டு ஏற்றுக்கொள்வோம். அப்போது நம் உள்ளத்தில் அமைதி ஏற்படும். அன்பு இருக்கும் இடத்தில் மன்னிப்புக்கு இடம் உண்டு.

02.06.2013 'மனநிலை மாற்றம் பெற்று பகிர்தல் வாழ்வை வளப்படுத்துவோம்"
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்
இயேசு தம் திருவுடலையும், இரத்தத்தையும் நமக்கு உணவாகத் தருகிறார்.அவரது பேரன்பைப் போற்றி இன்று அதை எண்ணி நாம் பெருவிழாவாகக் கொண்டாடுகிறோம். உடல் என்பது ஒருவரது ஆளுமையின் மிக வெளிப்படையான கூறாகும். மனம்,  ஆன்மா, உணர்வுகள் என்பவை வெளியில் தெளிவாகக் காணக் கிடைக்காத ஆளுமையின் தளங்கள். ஆனால், உடல் மட்டுமே அனைவருக்கும் அறிமுகமான, வெளிப்படையான தளம். அது மட்டுமல்ல, உடல்தான் இறைவனுக்கு அர்ப்பணம் செய்யத்தகுந்த மிகச் சிறந்த தளமும்கூட. அதனால்தான், இயேசு தம் உடலை இறைவனுக்காகவும், நமக்காகவும் கையளித்தார். இரத்தம் உயிரின் ஆதாரம். இரத்தம் சிந்துதால் தியாகத்தின் அடையாளம். 'இரத்தம் சிந்துதல் இன்றி பாவ மன்னிப்பு இல்லை".  எனவே, எமக்காக தன்னை கையளித்த இயேசுவின் உடலுக்காக, இரத்தத்துக்காக நாம் பிரதியுபகாரமாக  நமது உடலை இறைவனின் திருவுளத்தை நிறைவேற்றக் கையளிப்போம். நாம் இரத்தத்தைச் சிந்தாவிட்டாலும், பிறர் வாழ தியாகங்கள் செய்ய முன்வருவோம்.

நாம் கற்றறிந்த ஒரு வரலாற்று உண்மையை இங்கு குறிப்பிட்டுத்தான் ஆகவேண்டும் 'இயேசுவின் திருஉடல் திருஇரத்த பெருவிழாவிற்கு ஒரு வரலாற்று உண்மை உண்டு. 1263ல் பிராகுவேயைச் சார்ந்த ஒரு கத்தோலிக்க குருவானவர் தன் அழைத்தலைப்பற்றி பல்வேறு கேள்விகளோடு திருப்பயணியாக உரோமை நகர் நோக்கி பயணமானார். பயணத்தின் பாதிவழியில் உரோமையிலிருந்து 70கி.மீ தொலைவிலுள்ள போல்சேனா என்ற இடத்தில் புனித கிறிஸ்தினால் அடக்கம் செய்யப்பட்ட இடத்திலுள்ள பீடத்தில் திருப்பலியாற்றினார். அப்பொழுது அர்ச்சிப்பு வார்த்தையை சொல்லி அப்பத்தை உயர்த்தியவுடன் அது சதையாக மாறி இரத்தம் கசிய துவங்கியது. இரத்தம் பீடத்தில் மேலுள்ள கார்ப்பரோல் என்ற விரிப்புதுணிமீது படிந்தது. இந்த நற்கருணை அற்புததிற்கு பிறகு 1264ல் திருத்தந்தை நான்காம் அர்பன் இயேசுவின் திருஉடல் திருஇரத்த திருவிழாவை தொடங்கி கொண்டாட கட்டளை பிறப்பித்தார். அன்றிலிருந்து இவ்பெருவிழா கொண்டாடப்பட்டு வருகின்றது

இதனைவிட இன்னும் சில உண்மைகளை இங்கு குறிப்பிட்டுத்தான் ஆக வேண்டும். 1431ல் இங்கிலாந்தில் புனித ஜேர்ன் ஆப் ஆர்க் சிறையில் நெருப்பில் இடப்படுவதற்கு முன்பாக அவரது ஆசைக்கு என்ன வேண்டும், கடைசி உணவாக விருந்தாக என்ன வேண்டும் என்று அவரிடம்  கேட்;கப்பட்டபோது அவர் கூறியது 'நற்கருணை வேண்டும்" என்றதுடன் காரணம் எந்த திருவிருந்து எனக்கு தொடர்ந்து பலம் தந்து என்னோடு இருந்து என்னைத் தொட்டதோ அதுவே நிரந்தர துணை, பலம் பிரசன்னம் என்றார்.

பாத்திமாவிலிருந்து சிறி தொலைவிலுள்ள பலசார் என்ற இடத்தில் 1904ல் பிறந்து 1955ல் இறந்த அலெக்சாண்டிரியா என்ற பெண் ஒரு விபத்தான சூழ்நிலையில் பாதிக்கப்பட்டு படுக்கையிலிருந்து 13 ஆண்டுகள் நற்கருணை மட்டுமேபெற்று வாழ்ந்தது மருத்துவர்களை ஆச்சரியத்துள்ளாக்கியது என்பதும் வரலற்றுப் பதிவாகியுள்ளது. விசுவசித்தால் திருவிருந்து தொடரும் என்றும் நம்மை தொடும்.

அண்மையில் மரியா என்ற 14வயது இளம்பெண் 8மாதங்களாக காத்திருந்து இருதயமாற்று அறுவைசிகிச்சைவழியாக புதிய இதயம் பெற்றாள். அவள் பல நாட்கள் பெற்றோரோடு நற்கருணை திருவிருந்தை தேடிவரக்காரணம் என்ன என்று கேட்டபொழுது அவர்கள் சொன்னது இதுதான் எங்களின் தொடர்விருந்து எங்களை இப்புதிய இதயத்தின் வழியாக தொடும் நற்கருணை இயேசு எங்களுக்கு தினமும் வேண்டும் அவர் தான் நிரந்தர சக்தி என்றார்கள்.
புனித பீட்டர் ஜீலியன் நாம் நற்கருணை இயேசுவால் ஆட்கொள்ளப்படவேண்டும் நாம் திருவிருந்தில் அவரை ஆட்கொள்ள வேண்டும் என்றார்.
இப்படி எண்ணற்ற நற்கருணையின் அற்புதங்களை நாம் அறிந்திருக்கின்றோம். இவைகளெல்லாம் இது ஒரு தொடரும் திருவிருந்து என வெளிப்படுத்துகின்றன. அந்த குருவானவரின் சந்தேகத்திற்கு அவரை தொட்டு ஆழப்படித்தியதுபோல நம்மையும் அந்த தொடர் மற்றும் தொடும் உணர்வுக்கு அழைக்கின்றது. இயேசு தமது இறுதி இராப்போசனத்தின்போது அப்பத்தையும் இரசத்தையும் தமது உடலும் இரத்தமும் எனக்கூறி அதனை தம் சீடர்களுக்குப் பகிர்ந்தளித்தார். அப்பம் ஏந்தும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பகிர்தலின் ஞாபகம் நமக்கு உணர்த்தப்படுகிறது. எனினும் அப்போது எம் மனநிலையில் மாற்றம் ஏற்படுகிறதா என்பதே நாம் சிந்திக்கவேண்டியது. ஏனெனில் பகிர்தல் வாழ்வுக்கு மனநிலை மாற்றம் மிக அவசியம். கல்மனம் படைத்தவர்களால் பகிர்ந்து வாழமுடியாது. அப்பத்தின் வடிவில் இயேசுவின் உடலையும் இரசத்தின் வடிவில் அவரது இரத்தத்தையும் பகிர்ந்து உண்ணும் நாம் அவரது திருவுளப்படி வாழ முற்படுகிறோமா? நம்மில் அதற்கான மனமாற்றம் ஏற்படுகிறதா என்பதையும் சிந்திக்க வேண்டும.; இத்தகைய சிந்தனைகள் ஏற்படுத்தும் மாற்றமே இப்பெருவிழாவை அர்த்தமுள்ளதாக்கும்.


Chistmas wish

Chistmas wish
I wish you a happy christmas

About Me

My photo
I am Mr Frank. I am a UN staff